ஐந்து முக நாயகி!

அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே. – (திருமந்திரம் – 697)

விளக்கம்:
ஐந்து முகங்கள் கொண்ட சதாசிவத்துடன் வசிக்கும் ஐந்து முகங்கள் கொண்ட சக்தியின் பத்துக் கைகளில் பத்து ஆயுதங்கள் ஏந்தி இருப்பதைப் பார்க்கிறோம். பிராணாயாமம் செய்து யோகத்தில் நிற்பவர்கள், இடைகலை மூச்சின் போது சகசிரதளத்தில் மலரும் ஆயிரம் இதழ்களில் ஒவ்வொரு இதழிலும் சக்தியின் முகத்தைக் காண்பார்கள். அதே போல் பிங்கலை மூச்சின் போதும் ஆயிரம் இதழ்களில் சக்தியின் ஆயிரம் முகங்களைக் காண்பார்கள். யோக காலத்தில் ஒரே சக்தி இரண்டாயிரம் சக்திகளாகத் தோன்றுவதைக் காணலாம்.


காலமும் திரண்டு நின்று உதவி செய்யும்

இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதொ டொன்றாய்த்
திரண்டது காலம் எடுத்தது அஞ்சே. – (திருமந்திரம் – 696)

விளக்கம்:
பிராணாயாமத்தின் போது இடைகலை, பிங்கலை ஆகிய சீரான முச்சின் ஓட்டத்தில் சதாசிவ நாயகியாகிய சக்தி மேலெழுந்து சகசிரதளத்திற்குச் செல்கிறாள். ஐந்து முகங்கள் கொண்ட சதாசிவ நாயகி இரண்டு வகையான மூச்சுக்காற்றில் ஏறும் போது அவள் ஆறு ஆதாரங்களில் உள்ள ஐம்பத்தோரு எழுத்துக்களை உணர்த்தி சகசிரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரையை விரியச் செய்கிறாள். நாயகியின் இந்தச் செயலில் காலமும் திரண்டு நின்று உதவி செய்யும்.