ஆய்ந்து அறிய முடியாத நாயகி

ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பத்தொன் றொன்பது
மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே. – (திருமந்திரம் – 700)

விளக்கம்:
ஆய்ந்து அறிந்து கொள்ள முடியாத தனித்தன்மை கொண்ட நாயகியாம் நம் பராசக்தி. பிராணாயமத்தின் போது நாம் இழுக்கும் மூச்சுக்காற்றுடன் அந்நாயகி எந்த அளவுக்கு கலந்திருக்கிறாள் என்பதை ஆய்ந்து அறிந்தால், பராசக்தியுடன் எழும் மூச்சுக்காற்று ஐந்நூற்று முப்பத்து ஒன்பது நாடிகளை நிரப்புகிறது. இதனால் உள்ளே நமது மூச்சு செல்லும் பாதை வளம் பெறுகிறது.


கலை நாயகி!

முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னுறும் ஐம்பத் தொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே. – (திருமந்திரம் – 699)

விளக்கம்:
பிராணாயாமத்தின் போது மூலாதாரத்தில் இருந்து எழும் கலை நாயகியாகிய பராசக்தியை, நாம் உள்ளே இழுக்கும் மூச்சுக்காற்று பற்றிக்கொள்ளும் வகையை இப்படிச் சொல்லலாம். அக்கலை நாயகி தன்னுடைய ஐந்து முகங்களால் ஆறு ஆதாரங்களில் உள்ள ஐம்பத்தோரு எழுத்துக்களை நமக்கு உணர்த்தி தெளிவு ஏற்படுத்துகிறாள்.