பிரதோஷ நாயகன்!

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.  – (திருமந்திரம் –68)

விளக்கம்:
நந்தி பெருமானின் அருளாலே ஆசிரியன் எனப் பேர் பெற்றோம். நந்தியின் அருளாலே மூலனாகிய சிவபெருமானை நாடினோம். இந்த உலகினில் நந்தியின் அருளினால் செய்ய முடியாத காரியம் என்ன உள்ளது? அந்த பெருமானின் வழிகாட்டுதலின்படி நான் இருக்கின்றேன்.

(நாதன் – குரு, ஆசிரியர்)

By Nandi's Grace, we got named as Guru,
By Nandi's Grace, We seek the Eternal Lord,
By Nandi's Grace, everything is possible in this world,
I remain by the guidance of Nandi.

சிவானந்தவல்லி!

நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்
பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.  – (திருமந்திரம் –78)

விளக்கம்:
சிறந்த நகைகளை அணிந்துள்ள சக்தி, சிவானந்தவல்லி என்ற பெயர் கொண்டவள். எல்லையற்ற சிறப்பை கொண்ட அவள் என் பிறப்பை போக்கி ஆட்கொண்டாள். சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாவடுதுறை யாகிய திருத்தலத்தைத் தனதாக உடையவள். அந்த சக்தியின் திருவடியை சேர்ந்திருந்தேனே!

(நேரிழை – சிறந்த நகைகளை அணிந்த பெண், பிறப்பறுத்து – அடுத்து பிறவியில்லாமல் செய்து, சீருடையாள் – புகழ் உடைய, செல்வம் உடைய, பதம் – திருவடி )

Jeweled with rich ornaments, named Eternal Bliss,
She remove our further births.
Of great fame, Mistress of Avaduthurai Siva,
I reached her Holy Feet and Surrender.

ஏ இவளே!

முத்துப்பாண்டிக்கு ரெண்டு பொண்டாட்டி. ஒருத்தி அவளே, இன்னொருத்தி இவளே. அப்படித்தான் அவன் கூப்பிடுவான். மொதல்ல கட்டிக்கிட்டவளை இவளேன்னு கூப்பிட்டுகிட்டிருந்தான். ரெண்டாமவள் வந்ததும் முதலாமவள் அவளே ஆகிட்டா. ரெண்டாமவள் இவளே ஆகிட்டா. இதுவரைக்கும் ரெண்டு பேரையும் அவன் ஒப்பிட்டு பார்த்ததில்லை.  அவளேங்கிறவ நல்ல செவப்பு நிறம், கச்சிதமான அமைப்புள்ளவ. ஆனா கொஞ்சம் பொம்மைத்தனம் இருக்கும். இவளே வேற மாதிரி. மாநிறம், கொஞ்சம் சுமாரா இருப்பா, ஆனா உயிர்ப்புள்ளவ. அவ இருக்கிற எடத்துல யாரும் சோம்பலா இருக்க முடியாது. பேச்சும் சரி, செயலும் சரி ஒரே படபடப்பு தான்.

ஏழு பிள்ளைக அவங்க வீட்டுல. எந்த பிள்ளை யார் பெத்ததுங்கிறது இப்போ முத்துப்பாண்டிக்கு ஞாபகத்துல இல்ல. அதெல்லாம் ஒரு விஷயமா! பிள்ளைகளுக்கே அதப்பத்தி கேள்வி இல்ல.  வீட்டுல சண்ட வருமான்னு கேட்குறீங்களா? சண்ட இல்லாத வீடெல்லாம் ஒரு வீடா!

ஒரு தடவ அவளேயான மூத்தவகிட்ட அந்த தெரு பெரிய மனுஷன் ஒரு ஆளு ஜாடமாடயா வீட்டு அந்தரங்கத்த பத்தி கேக்க, இளையவளுக்கு தெரிய வந்து, இப்போ அந்தாளு சின்ன மனுஷனாயிட்டாரு. இவளே அவர்கிட்ட கேட்ட கேள்விக்கெல்லாம் தெருவுக்கே காது கூசிப்போச்சு.

முத்துப்பாண்டிக்கு தொழில் சொந்தமா ஒரு சின்ன பலசரக்கு கடை. வேலைக்கு சம்பள ஆள் கிடையாது. ”ஏ இவளே! வந்து கொஞ்சம் கடைய பாத்துக்கோ”ன்னா வந்துருவா. இவ வந்ததில ரெண்டு வகைல லாபமாச்சு. நிறைய கடன் கொடுத்தா. கடன் கொடுக்குற வியாபாரத்துல லாபம் அதிகம்ன்னு சொல்லுவா. கடன திரும்ப வாங்குறதில டெரர் மொகம் காண்பிப்பா. கொள்முதலும் இப்ப அவ பொறுப்பா ஆகிடுச்சு. வெலை அடிச்சு பேசுவா. யார் யாருக்கு என்ன வெலைல சப்ளை ஆகுதுன்னு லிஸ்ட் போடுவா. இதெல்லாம் இவளுக்கு எப்படி தெரியும்ன்னு முத்துபாண்டிக்கே புரியலை. “இவளே! நீ இங்க இருக்க வேண்டியவளே இல்ல”ன்னு சொல்லுவான். “அடப் போடா”ம்பா.

கடைல கணக்கெல்லாம் எழுதி வச்சுகிடுறதில்ல. எல்லாம் மனக்கணக்கு தான். கொஞ்ச கொஞ்சமா வீட்டுல துட்டு சேர ஆரம்பிச்சது. அவ வீட்ட பாத்துகிட்டா, இவ கடைய பாத்துகிட்டா. பக்கத்து தெருவில் ஒரு கடை வாடகைக்கு இருக்கிறதா தெரிய வந்ததது. துட்டு எவ்வளவு இருக்குன்னு எண்ணி பாத்தாங்க, ஒரு முப்பதினாயிரம் தேறிச்சு. சரின்னு இன்னொரு கடை ஆரம்பிச்சாங்க. புதுக்கடைய முத்துபாண்டி பாத்துகிட்டான், மொத கடைய இவ பாத்துகிட்டா.

முத்துபாண்டிக்கு கொஞ்சம் சிரமமா தான் இருந்தது. இவ அளவுக்கு அவனுக்கு சாதுர்யம் போதாது. இப்படித்தான் ஒரு நாள் பவுடர்  டப்பா வாங்கிட்டு போன ஒருத்தன் திரும்ப சண்டைக்கு வந்துட்டான்.

“ஒரு டப்பால அஞ்சு ரூவாயா கூட வச்சு விப்பீங்க?”ன்னு ஒரே சண்டை.

அந்த நேரம் வாடிக்கையா சாமான் வாங்குற பெண் உதவிக்கு வந்தது. பதிலுக்கு கூச்சல் போட்டது.

“இன்னொரு கடைல வெல கம்மியா இருந்தா, அதுல என்ன மாசம் போட்டிருக்குன்னு பாத்தியா? அத பாத்துட்டு வா மொதல்ல. பழைய டப்பா வெலைல புது டப்பா குடுப்பாங்களா?”

அவனும் அத நம்பி திரும்ப போயிட்டான்.

“சரி. நான் வாங்குனது எவ்வளவு ஆச்சு?”ன்னு கேட்டா அந்த பொண்ணு.

“நாப்பத்தாறு”

“எனக்கு வாங்க வேற கடை இல்லாமலா ரெண்டு தெரு தள்ளிருக்கிற ஒங்க கடைக்கு வாரேன். இந்தாங்க நாப்பது ரூவா போட்டுக்குங்க.”

“சரி இவளே”ன்னான்.


நம் செல்வமெல்லாம் சிவனடிக்கே!

போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி
தேற்றுமின் என்றும் சிவனடிக் கேசெல்வம்
ஆற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.  – (திருமந்திரம் –24)

விளக்கம்:
புனிதனான அந்த சிவபெருமானின் திருவடியை புகழ்ந்து போற்றிப் பாடுவோம். மயங்கிக் கிடக்கும் நம் சிந்தையை மாற்றி நம்முடைய செல்வமெல்லாம் சிவனடிக்கே உரியதாகும் என தெளிவு பெறுவோம். அப்படி தெளிவு பெற்றவரிடத்தில் சிவன் நிலையாய் விளங்குவான்.

(மயலுற்ற – மயக்கம் அடைந்த, தேற்றுமின் – தெளியுங்கள்)

We praise and sing of his Holy Feet,
We dedicate all our treasures to his Holy Feet.
Thus who get cleared from their disturbed mind,
the Lord being with them firmly.

எங்கள் அண்ணலின் பெருமை!

ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே.   – (திருமந்திரம் – 95)

விளக்கம்:
யார் அறிவார் எங்கள் அண்ணலாகிய சிவபெருமானின் பெருமையை! யார் அறிவார் எம்பெருமான் இருக்கும் பரப்பின் அகலமும் நீளமும்! அந்த சிவபெருமான், பேர் அறியாத பெருஞ்சுடர் ஆவார். வேர் அறிந்து கொள்ள முடியாத அந்த பெருமானின் புகழ் கூறுகின்றேனே!

Who knows my Lord's Greatness!
Who can measure his dimension!
He is a nameless Mighty Flame,
I speak of his unknown Source.

பொருள் உணர்ந்து வேதம் ஓதுவோம்!

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.  – (திருமந்திரம் – 52)

விளக்கம்:
வேதத்தை அதன் பொருள் உணராமல், ஓசையளவில் ஓதுபவர் எல்லாம் வேதியர் ஆக மாட்டார். வேதம் இறைவனால் கொடுக்கப்பட்டது பிரம்மப் பொருளை உணரவும், அந்தணர் செய்யும் வேள்விக்காகவும். நாமெல்லாம் மெய்ப் பொருளை உணர்ந்து கொள்வதற்காகவே வேதம் உரைக்கப்பட்டது!

Those who speak the Vedas, without know the meaning are not pundits.
God spoke the Vedas to reveal its meaning,
God spoke the Vedas to perform the Holy Poojas,
God spoke them to make us manifesting the truth.

எல்லாம் சிவனே!

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே. – (திருமந்திரம்)

விளக்கம்:
இந்த பெரிய நிலப்பரப்பாகிய உலகை தாங்கியவாறு வானமாக நிற்பது சிவபெருமானே! சுடும் தீயாக இருப்பவன் அவனே! சூரியனும் அவனே! சந்திரனும் அவனே! மழையை பொழியும் தாயும் அவனே! பெரிய மலையும் அவனே! குளிர்ந்த கடலும் அவனே!

(இருநிலம் – பெரிய நிலம், அங்கி – தீ, தையல் – சக்தி, தடவரை – பெரிய கடல், தண்கடல் – குளிர்ந்த கடல்)

Lord Shiva, Himself holding this world, stand as the sky,
Himself the Fire, the Sun and the Moon,
Himself the mother giving Rain,
Himself the Big Mountains, the cold Ocean.

சிவனடி போற்றி!

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே. – (திருமந்திரம்)

விளக்கம்:
தேவர்கள் சிவபெருமான் திருவடியை போற்றி வணங்குகிறார்கள். அசுரர்களும், மனிதர்களும் அவ்வாறே வணங்குறார்கள். நானும் அப்பெருமானை போற்றி என் அன்பினுள் ஒளிரச் செய்தேனே.

The Devas worship His Feet
The Asuras worship His Feet
The Humans worship His Feet
Thus I too Worship Him, and in my love He shone.

ஒரு ப்ரீகுவல் கதை

வட்டகிரி, அப்படின்னு ஒரு மலைக்காடு. அங்கே ஒரு முனிவர் முனிவராகவே வாழ்ந்து வந்தார். அவருக்கு பொன்னாசை, பெண்ணாசை எதுவுமே கிடையாது. கடுமையா தவம் செஞ்சு இந்த பிறவிலேயே கடவுளை அடையணும் அப்படிங்கிறதுதான் அவர் ஆசை. அவர்கிட்ட ஒரு சீடன் இருந்தான். முனிவருக்கு வேணுங்கிற எடுபிடி வேலையெல்லாம் செஞ்சிட்டு மிச்ச நேரத்தில தானும் தவம் செய்வான்.

முனிவரோட உண்மையான தவத்தை பார்த்த தேவர்கள் அவரை சொர்க்கத்துக்கு கூப்பிட்டாங்க. ரொம்ப வருஷம் கூடவே இருந்ததால சீடனுக்கும் அனுமதி கிடைச்சது. சொர்க்கத்துக்கு போற வழில சீடனோட சந்தோஷம் அளவு கடந்ததா இருந்தது. பேசிக்கிட்டே வந்தான். “குருவே! சொர்க்கத்துல பணிவிடை செய்ய தேவதைகள் இருப்பாங்க. அவங்கள மாதிரி அழகு நாம பூமில பார்க்கவே முடியாது. இயற்கையாகவே அவங்க மேல ஒரு நறுமணம் இருக்கும். இனிமையான பாடலெல்லாம் பாடுவாங்க”. முனிவர் பதிலேதும் சொல்லவில்லை. உணர்ச்சி எதுவுமே இல்லாமல் வந்தார்.

சொர்க்கத்தில் முனிவருக்கு சரியான வரவேற்பு. தேவாதி தேவர்களெல்லாம் வந்து வாழ்த்தினாங்க. முனிவருக்கு ஒரு சிறப்பான இடம் கொடுக்க முடிவாயிற்று. அங்கே தங்கத்திலான மரங்கள் நிழல் கொடுத்தன. அதன் இலைகளெல்லாம் மரகதம். வைரங்கள் பூக்களாய் பூத்திருந்தன. மணக்க மணக்க அறுசுவை சாப்பாடு. வசதியான படுக்கை. கை கால் அமுக்கி விட முற்றும் துறந்தவளாய் ஒரு அழகான தேவதை.

முனிவருக்கு கிடைத்த உபசாரங்களை பார்த்த சீடனுக்கு ஆனந்தக் கண்ணீர். “வாழ்நாள் முழுவதும் நீங்க செஞ்ச தவத்துக்கு கெடச்ச வரத்த பார்த்தீங்களா.”

இதைக் கேட்ட அவருக்கு ஒரே கோபம். சீடனை பார்த்து “இவ்வளவு வருஷம் என் கூட இருந்து உனக்கு எதுவுமே புரியலை. உனக்கு என்னைப் பத்தியும் தெரியலை. இங்கே நடப்பதும் புரியலை.”

இன்னும் சொன்னார் “ஒண்ணு புரிஞ்சுக்கோ. இதெல்லாம் எனக்கு கெடைக்கிற பரிசு இல்லை. அந்த தேவதைக்கு கெடைக்கும் தண்டனை.”


பேரின்பம்

அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிலர்தத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியார் உடன்கூடல் பேரின்ப மாமே. – (திருமந்திரம்)

விளக்கம்:
உண்மையை நாடி அறியும் விருப்பம் உள்ளவர் தேவர்களின் தலைவனான சிவபெருமானின் நெருக்கத்தை நாடுவார், சிவதத்துவத்தை விளங்கப் பெறுவார். அவர்கள் நல்ல நெறியில் நின்று பிறரையும் அவ்வாறு நிற்கும்படி செய்வார். அப்படிப்பட்ட பெரியார்களுடன் பழகுதல் பேரின்பமே!

Who seek the Truth will seek the Lord,
Will attain Siva Truth,
Will stand in good virtue.
To be friend with them Is indeed a Bliss.