பனங்கிழங்கு வாசம்

யார் வீட்டுல யாரு பனங்கிழங்கு அவிச்சாலும், அந்த வாசம் அரசிய ஞாபகப்படுத்துது. அவள யாரும் மங்கையர்க்கரசின்னு முழுப்பேரு சொல்லி நான் கேட்டதில்ல. மஞ்சப்பொடியும் வியர்வையும் கலந்த அவளோட வாசத்துல நான் மூச்சு முட்டி தவிக்கிற நேரம் மங்கை யாருக்கு அரசின்னு கேப்பேன் அல்லது கூப்பிடுவேன். அது ஏன்னு தெரியல, அவளோட வாசம் பனங்கிழங்க ஞாபகப்படுத்துது. எங்க பனங்கிழங்கு வாசம் வந்தாலும் அவ மூச்சுக் காத்து மேல வந்து தடவுற மாதிரி இருக்கு. வாசம் மட்டுமில்ல, குட்டையா, குண்டா உருண்டு இருக்குற  பனங்கிழங்க பாக்கும்போதும் அவள பாக்குற மாதிரியே இருக்கு.

அரசியோட அம்மா வீடுகளுக்கும் விஷேசங்களுக்கும் போய் கைமுறுக்கு சுத்திக் கொடுப்பாங்க. “செந்திலு! நா ஒரு விஷேசத்துக்கு போவ வேண்டியிருக்கு. அரசி தனியா இருக்கா, நீ இங்க வந்து கொஞ்ச நேரம் டிவி பாத்துக்கிட்டு இரு”ன்னு அரசியம்மா சொல்லும் போது ‘வேற வேல இல்லயா எனக்கு?’ன்னு தோணும். “ஆளுதான் வளந்திருக்கா எரும மாதிரி! ஒரு சொரணையும் இல்ல, வாசக்கதவ தொறந்து போட்டு தூங்குறாடா. சும்மா ஒரு தொணைக்கு இரேன்” எனக்கு பாதி மாசம் நைட் ஷிஃப்ட் வேலைங்கிறதால பகல்ல தூக்கம் தான். அவங்க வீட்டுல டிவி பாத்துகிட்டே தூங்கிருவேன். அரசி ஆதித்யா சேனல் பாத்து காரணமே இல்லாம சிரிக்கிறது எரிச்சலா இருக்கும். எக்கேடும் போன்னு ஒரு மொற மொறச்சிட்டு கொறட்ட விட்டு தூங்க ஆரம்பிச்சிருவேன்.

மணி என்ன பாக்கும் போதெல்லாம் அரசியப் பத்தியே பேசுவான். அவனும் எங்க தெரு தான். “லூசுப்பய மாதிரி பேசாத“ன்னு எரிச்சலா சொன்னாலும் ஒரு மாதிரியா பல்லக் காட்டுவான். “ஏல! கல்யாணம் முடிஞ்சு ஃபஸ்ட் நைட்ட ஏன் பொண்ணு வீட்ல வைக்கிறாங்கன்னு தெரியுமா? தன்னோட வீட்டுல தான் பொண்ணுங்க சகஜமா கூச்சமில்லாம இருப்பாங்க. புதுசா ஒரு வீட்டுக்கு போகும் போது கொஞ்ச நாளைக்கு பயமும் கூச்சமுமா இருக்கும்”. “இப்போ அதுக்கென்னல? ஏன் சம்மந்தம் இல்லாம பேசுற?”ன்னு கேட்டப்போ “போடா போ! ஒனக்கு எப்படி ஒரு சான்ஸ் கெடச்சிருக்குன்னு தெரியாம இருக்க”ன்னு மணி சிரிச்சான்.  எனக்கு வாயில கெட்ட வார்த்தையா வந்தது.

பாவிப்பய மணி எந்த நேரத்துல அத சொல்லித் தொலச்சானோ? அன்னைக்கு அரசி வீட்டுல காவல் இருந்தப்போ சரியான மழை. குளிர்ந்த காத்து வேற. குளிருக்கு எதமா அப்ப தான் அவிச்ச பனக்கிழங்கு இருந்தது. சூடான கெழங்க எடுத்து உரிக்கும் போது அதோட வாசம் மழை வாசத்தோட சேர்ந்து ஒரு புது தினுசா இருந்தது. நாலாவது கெழங்க கடிச்சு உரிக்கும் போது “சூடா இருக்கா?”ன்னு அரசி கேட்டா. பாவம் டிவில எதுவும் ஓடலேன்னு என்கிட்ட பேசுறான்னு நெனச்சுகிட்டேன். “நானும் அப்படித்தான் இருக்கேன்” பிசிறு தட்டின குரல்ல அரசி சொன்னப்போ எனக்கு என்னன்னு நெனைக்கன்னே தெரில. அமைதியா கெழங்க உரிச்சு பயத்தையும் சேர்த்து மென்னு தின்னேன். “இங்க ஒருத்தி கெழங்கு மாதிரி இருக்கேன். நீ என்னடான்னா பனங்கெழங்க உரிக்கிற. லூசு!”. பனங்கிழங்கு வாசத்தோட அரசி வாசமும் சேர்ந்துச்சு. மழை வாசம், பனங்கிழங்கு வாசம், அரசியோட வாசம், என்னோட வாசம் எல்லாமும் சேர்ந்து மூச்சு முட்டித் தவிச்சேன். எல்லாத்துக்கும் மேல இன்னொரு வாசத்தையும் மொத மொதலா அனுபவிச்சேன். அரசி தன்னோட நெலைல இல்ல. அவளும் மூச்ச வேகமா இழுத்து எல்லா வாசத்தையும் தீர்த்துடுற வேகத்துல இருந்தா.

ரொம்ப நாள் கழிச்சு அரசிய நேத்து வழில பாத்தேன். மொதல்ல அடையாளமே தெரில, ரொம்பவே பூரிச்சிருந்தா. ஊர்ல இருந்து அம்மா வீட்டுக்கு வர்றா போல, அவ கூட மணி ஒரு கைல பச்சப்புள்ளையவும் இன்னொரு கைல சூட்கேசையும் தூக்கிட்டு நடந்து வந்தான். அதே சிரிப்பு இப்பவும்.  அப்பத்தான் வாங்கின பனங்கிழங்கு கட்டு என் கூடைல இருந்தது. அரசிதான் மொதல்ல பேசுனா “நல்லாயிருக்கியாடே? இன்னும் பனங்கெழங்கு வாசத்த மறக்கல போல!”.


அட்டாங்கயோகத்தில் சமாதியின் பலன்கள்

காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரணம் மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.  –  (திருமந்திரம் – 639)

விளக்கம்:
பரம்பொருளான சிவபெருமானைச் சேர்ந்திருக்கும் நிலை சமாதி. அந்த சமாதி நிலையால் கிடைக்கும் பலன்கள் மேலானவை.

உடல், மனம், இந்த உலகம், செல்வம் ஆகியவை எல்லாம் மாயையின் தோற்றங்கள் என உணர்ந்து அவற்றை நாம் கடந்து விடலாம். மாயத்தோற்றத்திற்குக் காரணமான ஏழு தத்துவங்களும் நம் அறிவுக்கு விளங்கும். தொடர்ந்து கிளைத்து வரும் வினைகளுக்கிடையே ஒழுங்குடன் நின்று பரம்பொருளுடன் சேர்ந்திருக்கும் சமாதி நிலையால் கிடைக்கும் பலன்கள் இவை.


அட்டாங்கயோகத்தால் ஈசன் திருவடியை அடையலாம்

தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிடந்
தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதம்முன்
தாங்கவல் லார்க்குந்தன் தன்இட மாமே.  –  (திருமந்திரம் – 638)

விளக்கம்:
சமாதி நிலையில் இருந்து தூங்க வல்லவர்கள், ஏழு உலகங்களிலிருந்தும் மனத்தை வாங்கி உள்நோக்கித் திருப்பும் பிரத்தியாகரத்தில் இருக்க வல்லவர்கள், அந்த நிலையிலே நிலையாக நிற்கும் தாரணையில் தேங்க வல்லவர்கள், உள்ளூறும் அமுதத்தை தியானத்தில் இருந்து தாங்க வல்லவர்கள், இவர்கள் எல்லோரும் எதை நோக்கித் தியானம் செய்கிறார்களோ அந்த நிலையை அடைவார்கள். அதாவது ஈசனின் திருவடியை அடைவார்கள்.


அட்டாங்கயோகம் தரும் பரிசு

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.  –  (திருமந்திரம் – 637)

விளக்கம்:
அட்டாங்கயோகம் நம்மை சரியான பாதையில் நடத்திச் செல்லும் வழிகாட்டி ஆகும். அட்டாங்கயோகத்தின் பலன் நம்மை நல்வழியை மட்டுமே நாடியிருக்கச் செய்யும். எமனிடம் அழைத்துச் செல்லும் தீய வழியில் செல்ல விடாமல் தடுக்கும். மேலும் நமக்குக் கிடைக்கும் குறைவில்லாத பரிசு என்னவென்றால், நமக்குத் தேவலோகத்தில் உள்ள எல்லா வழிகளும் பூலோகத்தைப் போல எளிதாகவே இருக்கும். அங்கே எட்டுத் திசைகளிலும் தங்கு தடை இன்றி சென்று வரலாம்.


இவனும் சிவனே என தேவர்கள் வாழ்த்துவார்கள்

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.  –  (திருமந்திரம் – 636)

விளக்கம்:
நாம் சிவகதி அடையும் காலத்தில் சிவலோகத்தின் காவலர்கள் ”யார் இவன்?” என தேவர்களிடம் விசாரிப்பார்கள். அப்போது அந்த அழகு மிக்க தேவர்கள் “அட்டாங்கயோகத்தில் நின்ற இவனும் சிவனே ஆவான்!” என வாழ்த்தி வரவேற்பார்கள். அந்த உலகத்தில் நம் இறைவனாம் திருநீலகண்டப் பெருமானைக் காணலாம்.


அட்டாங்கயோகத்தால் வானுலகில் வரவேற்பு கிடைக்கும்

செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே.  –  (திருமந்திரம் – 635)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தில் தொடர்ந்து நின்று யோகப் பயிற்சிகளைச் செய்பவர்கள், செம்பொன் ஒளியுடைய சிவகதியை அடையும் காலத்தில் வானவர்கள் பூரண கும்பத்துடன் வந்து எதிர்கொண்டு ‘நம் தங்கத் தலைவன் இவன்’ என வாழ்த்தி வரவேற்பார்கள்.  அந்த வானவர்களின் சேர்க்கை கிடைக்கப் பெற்று அவ்வுலத்தில் இன்பமாய் இருக்கலாம்.


தவத்தினால் தேவருலகின் செல்வன் ஆகலாம்

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.  –  (திருமந்திரம் – 634)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தில் நின்று, தன் மெய் வருத்தி ஆசனத்தில் அமர்ந்து தவம் செய்பவர்களை ’இவன் தேவர் உலகின் செல்வன்’ என தேவர்களின் தலைவர் இயம்புவார். அந்நேரம் முரசுகள் முழங்கும், புல்லாங்குழல் இசைக்கும். அந்த தேவர் உலகத்திலே ஈசன் அருளாலே நாம் இன்ப வாழ்வு பெறலாம்.


அட்டாங்கயோகத்தினால் மனத்தெளிவு பெறலாம்

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே.  –  (திருமந்திரம் – 633)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தின் வழியில் சென்று, சிவபெருமானின் திருவடியைப் பற்றி, அவன் புகழைப் பாடி, நம் சிந்தையெல்லாம் அவன் திருவடியையே நாடி இருக்கச் செய்வோம். அப்படிச் சிந்தித்திருப்பவரை முனிவரெல்லாம் எதிர் கொண்டு அழைப்பர். மனத்தெளிவு பெற்று சிவபதம் அடைவது உறுதி.


அட்டாங்கயோகத்தின் பலன்

போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.  –  (திருமந்திரம் – 632)

விளக்கம்:
சிவபெருமானுக்கு நாம் சூடும் மலர்கள் அவன் திருவடியை விரும்பிச் செல்கிறது. அது போல நம்முள்ளே வசிக்கும் குண்டலினி விருப்பத்துடன் சகசிரதளம் ஏறி சிவனடி சேரும் தன்மையுடையது. அட்டாங்க யோகம் அனைத்தையும் விரும்பி அதன் வழியில் நடப்பவர்கள் விண்ணுலகை அடைவார்கள். அவர்கள் விரும்பியதை எல்லாம் உமையுடன் மகிழ்ந்து நடனம் செய்பவனும், காளையை ஊர்தியாகக் கொண்டவனுமான நம் சிவபெருமான் அருள்வான்.

அட்டாங்கயோகத்தில் இருப்பவர்களுக்கு அந்தச் சிவபெருமான் வேண்டியதை எல்லாம் அருள்வான்.


சமாதியில் அறுபத்து நான்கு சித்திகள் கைகூடும்

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.  –  (திருமந்திரம் – 631)

விளக்கம்:
சமாதியில் இருப்பவர்களுக்குப் பல விதமான யோகங்கள் கைகூடும். அவர்கள் அறுபத்து நான்கு சித்திகள் கிடைக்கப் பெறுவார்கள். யோக நெறியில் நின்று இறைவனை அடைந்து விட்டவர்களுக்கு பிறகு எந்தப் பயிற்சியும் தேவையில்லை. ஏனென்றால் இறைவனை அடைந்தவர்கள் தாமும் சிவமாகி விடுவார்கள்.