கல்வி மட்டும் போதாது!

கல்லா தவரும் கருத்தறி காட்சியை
வல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்
கல்லாதார் இன்பம் காணுகி லாரே. – (திருமந்திரம் – 310)

விளக்கம்:
கல்லாதவர் சிலரும் தமது மனத்தில் இறைவனின் காட்சியை உணருகிறார்கள். அதே போலக் கற்றவர்கள் எல்லோருக்குமே இறைவன் காட்சி தந்து விடுவதில்லை. அருட்கண்களை உடைய அந்த சிவபெருமானைத் தியானித்தும், உண்மையான நெறியைப் பற்றியும் நிற்பவர்களுக்கு அந்த இறைவன் காட்சி தருகிறான். அப்படி இல்லாதவர்கள் கற்றவர்கள் ஆனாலும், அவர்களுக்கு அந்த காட்சி இன்பம் கிடைப்பதில்லை.


உணர்ந்தால் வருவான்

வைத்துணர்ந் தான்மனத் தொடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன்று ஒவ்வாது
அச்சுஉழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சு உணர்ந் தார்க்கே நணுகலு மாமே. – (திருமந்திரம் – 309)

விளக்கம்:
சிவபெருமானை நாம் மனத்தில் வைத்து உணர வேண்டும். வாயினால் அவன் புகழ் பேசி அவனுடன் ஒன்ற வேண்டும். அந்தப் பெருமான் பல வேறுபட்ட உருவங்களில் இருக்கிறான். நம் உயிர் என்னும் அச்சாணி, உலக வாழ்க்கையில் சிக்கி எவ்வளவு கலங்கினாலும், அந்த ஆதிப்பிரானை விரும்பி உணர்வோம். அவன் நம்மிடம் நெருக்கமாக இருப்பான்.


தன்னை உணர்ந்தவர்க்கு அருள்வான்

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம்
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே. – (திருமந்திரம் – 308)

விளக்கம்:
இந்த உலகில் மிகப் பழமையானவன் நம் ஈசன். பழமையான அந்தக் கடவுள் தன்னைத் துதிப்பவரிடம் நெருங்கி வருவான். தன்னை இகழ்வோர்க்குத் துன்பத்தின் இடமாய் இருப்பான். மகிழ்ந்து நின்று அந்த சிவபெருமானின் பெருமையை ஓதி உணர்வோம். அவன் பெருமையை உணர மறுப்பவர்களுக்கு அந்த சிவன் கற்பசு போலாவான்.

கல்லினால் செதுக்கப்பட்டப் பசு பால் தருவதில்லை. அது போல தன்னை உணராதவர்க்கு அந்த சிவபெருமான் அருள் செய்ய மாட்டான்.

(இடும்பை – துன்பம், கழிய நின்றார் – விலகி நின்றார்)


சிவனடியை நினைத்தால் பிறவி நீங்கும்

உறுதுணை யாவது உயிரும் உடம்பும்
உறுதுணை யாவது உலகுறு கேள்வி
செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே. – (திருமந்திரம் –307)

விளக்கம்:
நம்முடைய உடலும் உயிரும் ஒன்றுக்கொன்று துணையாய் இருக்கின்றன. அப்படி இரண்டும் இணைந்து நாம் வாழ்வதற்குத் துணையாய் இருப்பது, உலகியல் வாழ்க்கை பற்றிய நம்முடைய கேள்வி ஞானம். அதற்கு மேலும் சிறந்த துணையாய் இருப்பது சிவனடி குறித்த நமது சிந்தனை. பெறுவதற்கு அரிய அந்த சிவனடியை அடையும் வழியைக் கேட்டுத் தெரிந்து கொண்டால், நாம் அடுத்து பிறவி இல்லாத நிலையை அடையலாம்.


சொரிமுத்து ஐயனாரின் மகிமை (உண்மைச் சம்பவம்)

“பாபநாசத்துக்குப் போகனும்” என்று உத்தமவில்லி சொன்ன போது கோபமாக வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து விட்டு அப்போது தான் வெளியே வந்திருந்தோம். “இல்ல! படம் பாத்துட்டு பாபநாசம் அருவிக்குப் போகணும் போல இருக்கு” என்றார். நல்லவேளையாக பாகுபலிக்கு கூட்டிப் போகவில்லை. அந்த வார ஞாயிற்றுக்கிழமையே பாபநாசத்துக்கு கிளம்பியாயிற்று.

செல்லும் வழியில் திட்டத்தில் சின்ன மாறுதல். மணிமுத்தாறு அருவி குழந்தைகள் குளிக்க வசதியாக இருக்கும் என்று. மணிமுத்தாறு அருவியில் குளித்து விட்டு பாபநாசம் மலையேறி காரையார் அணைக்குப் போகும் வழியில் உள்ள சொரிமுத்து ஐயனார் கோவிலுக்கு போன போது காரை பார்க் செய்ய இடம் கிடைக்கவில்லை. அவ்வளவு வேன்கள்! இவ்வளவு கூட்டத்தில் ஐயனாரை பெர்சனலாக பார்க்க முடியாதே எனக் கவலையாக இருந்தது. கோவிலுக்கு உள்ளே போய்ப் பார்த்த போது தான் தெரிந்தது, அவ்வளவு கூட்டமும் கோவிலுக்கு வெளியே சமையலில் பிஸி என்பது.

கோவிலில் கூட்டம் இல்லை, செல்ஃபோனில் சிக்னல் இல்லை. இதைவிட வேறென்ன நிம்மதி வேண்டும்? காட்டுக்குப் போனால் நாட்டில் உள்ள பிரச்சனை எல்லாம் மறந்துதான் போகிறது. நல்ல தரிசனம். பூரணை, புஷ்கலை ஆகியோருடன் இருந்ததால் ஐயனார் சாந்தமாகக் காணப்பட்டார்.

போதுமான நேர தரிசனத்துக்குப் பிறகு பிரகாரத்தைச் சுற்றி வந்தபோது அந்தப் பெண் என் கவனத்தை ஈர்த்தார். காரணம் color, texture and glossiness எல்லாமே சரியான அளவில் அமைந்திருந்தது, அவர் படையலுக்கு எடுத்து வைத்துக்கொண்டிருந்த சர்க்கரைப் பொங்கலில். பொங்கலைப் பொறுத்தவரை, ருசி பார்க்காமல், கண்ணால் பார்த்தே சொல்லி விடலாம் அதன் தரத்தை. அந்தப் பெண் எடுத்து வைத்த பொங்கலின் நிறமும் தளதளப்பும் என் ஐம்புலன்களையும் சோதித்தது.

ஐயனாரை நினைத்துப் பொறாமைப்பட்டவாரே பிரகாரத்தைச் சுற்றி வந்தேன். எதிலுமே மனம் செல்லவில்லை. நினைவு பூராவும் அந்தப் பொங்கல் தான். மனத்தைத் தேற்றிக்கொண்டு வந்து சிறிது நேரம் தியானம் செய்தேன். தியானத்தில் பொங்கலெல்லாம் கரைந்தது. கண் விழித்த போது உத்தமவில்லி ஒரு சிறிய வாழை இலையை என் கையில் வைத்தார். இலையில் நான் பார்த்து ரசித்த அதே பொங்கல்!

ஐயனார் அருள் சொரிவதைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று தான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.


சில பல கிறுக்கல்கள் – ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்

என்னுடைய சில பல கிறுக்கல்கள் இப்போது ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனாக கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது (விலையில்லாது தான்). இதை வாசிக்க இணைய இணைப்பு தேவை இல்லை. இன்றே தரவிறக்கம் செய்து வாசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள்!

https://play.google.com/store/apps/details?id=com.scribblers.kirukkal


சுட்டிக்காட்ட முடியாத அவன் – இறைவன்!

சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை
அறியாது இருந்தார் அவராவார் அன்றே. – (திருமந்திரம் –306)

விளக்கம்:
சிறுவர்கள் விளையாடும்போது மணல் சோறு சமைத்து அதில் நிறைவு பெறுவது போல், உலக விஷயங்களின் போகத்தினால் இன்பம் உண்டு என நினைப்பவர் பலர் உண்டு. அவர்கள் ‘இது தான் இறை என்று சுட்டி அறிய முடியாத’ அந்த இறைவனைக் குறித்துத் துதிக்காதவர். அவர் உண்மையான ஆனந்தத்தை அறியவில்லை, தம்முடைய ஆன்ம சொரூபத்தையும் அறிந்திருக்கவில்லை.

குறியாதது ஒன்று – சுட்டி அறிய முடியாத ஒன்று. இரண்டு வார்த்தைகளில் கடவுளைப் பற்றிய  ஒரு நுண்மையான விளக்கம்.