மாயையின் கீழ்மை!

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே.  – (திருமந்திரம் – 486)

விளக்கம்:
முந்தைய பாடலில் பார்த்தது போல, நமக்கு இந்த உடலைப் பற்றிய அறிவு மட்டும் தான் உள்ளது. அருவமாக உள்ள உயிரைப் பற்றிய ஞானம் நமக்கு இல்லை. நாம் பிறக்கக் காரணமான தந்தைக்கும் உயிரின் தன்மைப் பற்றித் தெரியாது. நம்மை வயிற்றில் சுமந்த தாய்க்கும் அது பற்றித் தெரியாது. நம்மைப் படைத்த பிரமனுக்குத் தெரிந்தாலும், அவன் அதை யாருக்கும் சொல்வதில்லை. உண்மை தெரிந்த சிவன் நமக்குள்ளே தான் இருக்கிறான். அவனை நாடினால் அவன் நமக்கு அந்த ரகசியத்தைச் சொல்வான். ஆனால் நாம் மாயையில் சிக்கிக் கொண்டு, சிவனை நாடாமல், இழிவான வாழ்க்கையை நடத்துகிறோம்.