குண்டலினியாகிய அழகிய நங்கை

வெங்கதி ருக்கும் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கு ஓரானந்தம்
தங்களில் பொன்இடை வெள்ளிதா ழாமுனம்
திங்களில் செவ்வாய் புதைந்திருந் தாரே – 836

விளக்கம்:
மூச்சுப் பயிற்சியின் போது, வெண்மையான ஒளி மிகுந்த சகசிரதளத்திற்கும், சனி போன்ற இருள் மிகுந்த மூலாதாரத்திற்கும் இடையே நகர்பவள் குண்டலினியாகிய நங்கை. அந்நங்கையை யோகப்பயிற்சியால் உச்சந்தலைக்கு மேல் இருக்கும் சகசிரதளத்திற்கு மேலே எழச் செய்வோம். அங்கே சக்தியின் திங்கள் போன்ற அழகிய முகத்தில், தமது சிவந்த வாயைப் புதைத்துப் புணரும் சிவத்துக்குக் கிடைக்கும் ஆனந்தம் பேரானந்தம். அந்நிலையில் நம்முடைய உயிர்சக்தி சகசிரதளத்தில் இருக்கும் நாதத்துடன் கலந்து நாம் சிவ இன்பம் பெறலாம்.

யோகப்பயிற்சியில் கிடைக்கும் இன்பத்தை நாம் உணர்ந்து கொள்வதற்காக, திருமூலர் அப்பயிற்சியை ஆண் பெண் கலவியுடன் ஒப்பிடுகிறார்.

வெங்கதிர் – வெண்மையான ஒளி மிகுந்த சகசிரதளம், சனி – இருள் மிகுந்த மூலாதாரம், புல்லிய – புணர்ந்த