யோக வழியை நாடியவர்களுக்குத் துன்பம் இல்லை

நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்கட்குக் கூறலு மாமே – 764

விளக்கம்:
யோகவழியை நாட வல்லவர்களுக்கு, காலச்சக்கரம் பற்றிய கவலை இல்லை. காலம் அவர்களைப் பாதிக்காது, அதனால் அவர்களுக்குத் துன்பம் எதுவும் நேராது. அவர்கள் மக்களை வழி நடத்தும் தலைவராக விளங்குவார்கள். இவையெல்லாம் யோகத்தில் நிற்பவர்களுக்குத் தெரிந்த உண்மை ஆகும். நாமும் இதுபற்றி நம்முடைய நண்பர்களுக்கு எடுத்துச் சொல்வோம்.


நந்தியம்பெருமானாக நம்மை வழி நடத்துவான்

கண்ணன் பிறப்பிலி காண்நந்தி யாய்உள்ளே
எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடும்
திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாய்நிற்கும்
நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே – 763

விளக்கம்:
சிவபெருமான் நெற்றிக்கண்ணை உடையவன், பிறப்பில்லாதவன். மனத்தை உள்முகமாகத் திருப்பிப் பார்த்தால் உள்ளே நந்தியம்பெருமானாக, நம்மை வழி நடத்தும் குருவாகப் பார்க்கலாம். சிவபெருமான் தனிப் பெரும் ஜோதியானவன், அதன் வெம்மை எல்லாத் திசைகளிலும், எல்லாவற்றிலும் வியாபித்திருக்கிறது. அவனை நாடி தொடர்ந்த தியானத்தினால் நெருங்க வல்லவர்களுக்கு, அந்த சிவபெருமான் உறுதியான துணையாய் நிற்பான்.


என்றும் நிலைத்து நிற்கும் மெய்ப்பொருள்

கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
கழிகின்ற அப்பொருள் காணலுமாகும்
கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்
கழியாத அப்பொருள் காணலு மாமே – 762

விளக்கம்:
உயர்ந்த ஒரு இடத்தில் இருந்து கீழே பார்க்கும் போது, காணும் காட்சி எல்லாம் சிறிதாக, சாதாரணமாகத் தோன்றும். அதுபோல யோகநிலையில், உயர்ந்த ஒரு இடத்திற்குப் போகும் போது, கால வெள்ளத்தில் எந்தப் பொருளும், எந்த விஷயமும் தங்குவதில்லை என்பதை உணரலாம். எல்லாமே கணப்பொழுதில் கடந்து விடுகிறது, ஆனால் அவற்றில் நமது மனம் சிக்கித் தவிக்கிறது. மனத்தை உள்முகமாகத் திருப்பி, கருத்து ஊன்றி தொடர்ந்து தியானித்து வந்தால், நமது மனத்தைக் கால வெள்ளத்தில் சிக்காமல் காக்கலாம். என்றும் நிலைத்து நிற்கும் மெய்ப்பொருளான சிவபெருமானைக் காணலாம்.


இறை அனுபவத்தை பயிற்சியால் மட்டுமே பெற முடியும்

காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
நாணகி லார்நயம் பேசி விடுவர்கள்
காணகி லாதார் கழிந்த பொருளெலாம்
காணகி லாமற் கழிகின்ற வாறே – 761

விளக்கம்:
முந்தைய பாடல்களில் சொல்லப்பட்டவாறு, தொடர்ந்து யோகப்பயிற்சி செய்பவர்கள் சிவசக்தியரைக் காண்பார்கள். யோகத்தில் நாட்டம் இல்லாதவர்கள் காலச்சக்கரத்தின் சுழற்சியில் சிக்கி அழிவார்கள். யோகத்தை அனுபவத்தில் உணராத வெட்கம் கெட்டவர்கள், சாத்திரத்தைப் பற்றி நயமாகப் பேசிக் காலத்தை வீணாக்குகிறார்கள். இறை அனுபவத்தை யோகப்பயிற்சியினால் மட்டுமே உணர முடியும். நாம் அந்த அனுபவத்தைப் பெறாமல் காலத்தை வீணாகக் கழிக்கிறோம்.


சிவயோகியரால் இந்த உலகம் நன்மை பெறுகிறது

உயருறு வார்உல கத்தொடுங் கூடிப்
பயனுறு வார்பலர் தாமறி யாமற்
செயலுறு வார்சிலர் சிந்தையி லாமல்
கயலுறு கண்ணியைக் காணகி லாரே – 760

விளக்கம்:
மனம் ஒன்றி, அறிவு கூர்ந்து, பல ஆண்டுகள் தொடர்ந்து யோகப்பயிற்சி செய்பவர்கள் உயர்வு அடைவார்கள். இது போன்ற யோகிகள் இந்த உலகத்தில் வாழ்வதால், இந்த உலகம் நன்மை பெறுகிறது. சிவயோகிகளால் நன்மை பெறுகிறோம் என்பதை உலகத்தார் ஆகிய நாம் உணர்வதில்லை. சிவயோகியரால் கிடைக்கும் நன்மை பற்றிய சிந்தை இல்லாமல், நாம் தான் எல்லாவற்றையும் சாதிக்கிறோம் என நினைப்பவர்கள், கயற்கண்ணியாகிய பராசக்தியைக் காண மாட்டார்கள்.


மனம் இல்லாத நிலை

உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று
அகங்கோடி கண்டுள் அயலறக் காண்பர்கள்
சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்கு
உகங்கோடி கண்டங்குஉயருறு வாரே – 759

விளக்கம்:
தொடர்ந்த யோகப்பயிற்சியில் பல ஆண்டு காலம் வாழ்பவர்கள், தளர்வு ஏதும் இல்லாமல் மனத்தில் எண்ணம் இல்லாத நிலையை அடைவார்கள். எண்ணங்கள் அகன்று, மனம் இல்லாத நிலையில் சிவம் நமக்கு அந்நியமாகத் தெரியாது. சிவனுடன் கலந்து தாமே சிவமாக உணர்ந்து, காலச்சக்கரத்தைக் கடந்து பல யுகங்கள் உயர்வுடன் வாழ்வார்கள்.


கோடி யுகம் வாழலாம்

சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துஉடல் ஆயிரங் கட்டுஉறக் காண்பர்கள்
சேர்த்துஉடல் ஆயிரஞ் சேர இருந்தவர்
மூத்துடன் கோடி யுகமது வாமே – 758

விளக்கம்:
தொடர்ந்து தலை உச்சியில் கூத்தனாகிய சிவபெருமானை உணர்ந்தவர்கள் நூறு ஆண்டு காலம் குறைவின்றி வாழ்வார்கள். நூறு ஆண்டுகள் தொடர்ந்து யோகப்பயிற்சி செய்பவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது எளிதான விஷயம் ஆகும். ஆயிரம் ஆண்டுகள் இந்த உடலில் வாழ்ந்தவர், காலத்தை வென்று கோடி யுகம் வாழ்வார்.


மனம் ஒன்றினால் அறிவு கூர்மை பெறும்

கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே
ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்
சாத்திடு நூறு தலைப்பெய்ய லாமே – 757

விளக்கம்:
யோகப்பயிற்சியில் மனம் ஒன்றினால் வளர்ச்சி பெறலாம் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். யோகத்தில் மனம் ஒன்றும் போது, அறிவு கூர்மை அடைவதை உணரலாம். கூர்ந்த அறிவுடன் கூத்தனாகிய சிவபெருமானைப் பற்று கொண்டு துதித்தால், எட்டுத் திசைகளிலும் தாமரை மலர்வதைப் போல சிவம் தோன்றுவதைப் பார்த்து மகிழலாம். தொடர்ந்த இப்பயற்சியால் நூறு ஆண்டு காலம் குறைவின்றி வாழலாம்.


ஒன்றில் வளர்ச்சி!

ஒன்றில் வளர்ச்சி உலப்புஇலி கேள்இனி
நன்றுஎன்று மூன்றுக்கு நாள்அது சென்றிடும்
சென்றிடும் முப்பதும் சேர இருந்திடில்
குன்றிடைப் பொன்திகழ் கூத்தனும் ஆமே – 756

விளக்கம்:
யோகப்பயிற்சியின் போது, மனம் அப்பயிற்சியில் ஒன்றி நிற்க வேண்டும். அதனால் கிடைக்கும் பலன்கள் அளவில்லாதவை. முதலில் மூன்று நாட்கள் மனம் ஒன்றி நிற்கும் நிலையை முயற்சி செய்து பார்ப்போம். பிறகு அந்த மூன்று நாட்களை முப்பது நாட்களாக நீடிக்கச் செய்வோம். தொடர்ந்து மனம் ஒன்றி யோகப்பயிற்சி செய்யும் போது, நம் தலை உச்சியில் கூத்தனாகிய சிவபெருமான் பொன் போல் திகழ்வதை உணரலாம்.


சாத்திரத்தின் பலன்களைத் தலையில் உணரலாம்

கூத்தன் குறியில் குணம்பல கண்டவர்
சாத்திரம் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந்து உள்ளே அனுபோகம் நோக்கிடில்
ஆத்தனும் ஆகி அமர்ந்திடும் ஒன்றே – 755

விளக்கம்:
கூத்தனாகிய நம் சிவபெருமானைக் குறித்து, யோகநிலையில் பலவித அனுபவங்களை உணர்ந்தவர்கள் சிவயோகி ஆவார்கள். சாத்திரங்களைப் படிப்பதால் ஏற்படும் பலனை, தமது சகசிரதளத்தில் அனுபவமாக உணர்வார்கள். தொடர்ந்து சிவபெருமானைக் குறித்துத் தியானம் செய்து திளைப்பவர்களுக்கு, அந்த சிவபெருமான் நண்பனாக வந்து உள்ளே அமர்வான். இதை விட வேறு என்ன பேறு வேண்டும்?