பழமையான சிவபெருமானை நாடுவோம்

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடிநின் றோதலு மாமே.  – (திருமந்திரம் – 487)

விளக்கம்:
ஆணும் பெண்ணும் இன்பத்தை நாடிக் கூடுகிறார்கள். அதன் விளைவாக துன்பம் நிறைந்த பாசத்தில் ஒரு புதிய உயிர் தோன்றி இந்த மண்ணில் பிறக்கிறது. பிறந்த அந்தக் குழந்தை வளரும் போது, சிவபெருமானை நாடி அவனைத் துதித்து தனது பற்றுக்களில் இருந்து விடுபட வேண்டும். நம் சிவபெருமான், இந்த நிலமெல்லாம் தோன்றுவதற்கு முன்பே உள்ள பழமையானவன். அவனால் மட்டுமே நம்மை நமது துன்பங்களில் இருந்து விடுவிக்க முடியும்.


மாயையின் கீழ்மை!

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே.  – (திருமந்திரம் – 486)

விளக்கம்:
முந்தைய பாடலில் பார்த்தது போல, நமக்கு இந்த உடலைப் பற்றிய அறிவு மட்டும் தான் உள்ளது. அருவமாக உள்ள உயிரைப் பற்றிய ஞானம் நமக்கு இல்லை. நாம் பிறக்கக் காரணமான தந்தைக்கும் உயிரின் தன்மைப் பற்றித் தெரியாது. நம்மை வயிற்றில் சுமந்த தாய்க்கும் அது பற்றித் தெரியாது. நம்மைப் படைத்த பிரமனுக்குத் தெரிந்தாலும், அவன் அதை யாருக்கும் சொல்வதில்லை. உண்மை தெரிந்த சிவன் நமக்குள்ளே தான் இருக்கிறான். அவனை நாடினால் அவன் நமக்கு அந்த ரகசியத்தைச் சொல்வான். ஆனால் நாம் மாயையில் சிக்கிக் கொண்டு, சிவனை நாடாமல், இழிவான வாழ்க்கையை நடத்துகிறோம்.


உருவமில்லாத உயிர்!

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்
பருவம தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம தாவதிங் காரறி வாரே.  – (திருமந்திரம் – 485)

விளக்கம்:
தாயின் வயிற்றில் உருவான கரு, பத்து மாதங்களில் முழு உருவம் பெறுகிறது. முழு உருவம் பெற்ற சரியான பருவத்தில் அக்குழந்தை இம்மண்ணில் வந்து பிறக்கிறது. மாயையில் சிக்கி வளரும் உடலைப் பற்றி மட்டும் தான் நாம் அறிவோம். நம் உடலைத் தாங்கியிருக்கும் உருவமில்லாத உயிரைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.


வயிற்றில் உள்ள குழந்தை சோதியைப் போன்றது!

கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.  – (திருமந்திரம் – 484)

விளக்கம்:
திரண்ட வளைகரத்தைக் கொண்டப் பெண்ணின் வயிற்றில் உதிக்கும் குழந்தை, நம்முடைய யோக நிலையில், அண்ணாக்கில் அசையும் சோதியைப் போன்று ஒளிமயமானது. அக்குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ தாயின் வயிற்றில் சூரியனைப் போன்ற செந்நிறம் கொண்டதாக வளர்ந்து உருவம் பெறுகிறது.


கலவியின் போது மூச்சு இயங்கும் முறை!

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடுங்
கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில்
கொண்டதும் இல்லையாங் கோள்வளை யாட்கே.  – (திருமந்திரம் – 483)

விளக்கம்:
கூடலின் போது ஆணின் மூச்சு இயங்கும் முறையே பிறக்கும் குழந்தையின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது என்று முந்தைய பாடல்களில் பார்த்தோம். அக்கூடலின் போது பெண்ணின் மூச்சும் ஆணின் மூச்சோடு ஒத்து இயங்க வேண்டும். அப்படி ஒத்து இயங்கினால், பிறக்கும் குழந்தை அழகாக இருக்கும். கலவியின் போது இருவருக்கும் மூச்சு தடுமாறினால், திரண்ட வளைகரத்தைக் கொண்ட அப்பெண்ணுக்கு வயிற்றில் கரு தங்காது.


குழந்தையைத் தீர்மானிக்கும் மூச்சுக்காற்று!

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபான னெதிர்க்கில்
குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே.  – (திருமந்திரம் – 482)

விளக்கம்:
ஆண் பெண் கலவியின் போது, ஆணின் மூச்சு வலப்பக்க நாசியில்  (சூரியகலை) இயங்கினால் பிறப்பது ஆண் குழந்தையாக இருக்கும். மூச்சு இடப்பக்க நாசியில் (சந்திரகலை) இயங்கினால் பிறப்பது பெண் குழந்தையாகும். அந்நேரம் பிராண வாயுவை அபானன் என்னும் மலக்காற்று எதிர்த்தால் இரட்டைக் குழந்தை பிறக்கும். இரண்டு நாசியிலும் மூச்சுக்காற்று ஒரே அளவு இயங்கினால் பிறக்கும் குழந்தை அலியாகும்.


கருவைச் சுமக்கும் தாய் கவனிக்க வேண்டியது!

மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.  – (திருமந்திரம் – 481)

விளக்கம்:
கருவைச் சுமக்கும் தாயின் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால், பிறக்கும் குழந்தை மந்த புத்தி உடையதாக இருக்கும். தாயின் வயிற்றில் நீர் மிகுந்திருந்தால், பிறக்கும் குழந்தை ஊமையாக இருக்கும். மலமும் நீரும் மிகுந்திருந்தால், குழந்தை குருடாகப் பிறக்கும்.


விந்துவை செலுத்தும் வாயு

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே.  – (திருமந்திரம் – 480)

விளக்கம்:
ஆண் பெண் கூடலின் போது, விந்துவை செலுத்தும் வாயுவானது குறைந்திருந்தால், பிறக்கும் குழந்தை உயரம் குறைந்ததாக இருக்கும். பாய்ச்சும் வாயு மெலிந்திருந்தால், பிறக்கும் குழந்தை முடமாக இருக்கும். விந்துவை செலுத்தும் வாயு தடைப்பட்டால், பிறக்கும் குழந்தை கூனாக இருக்கும். இதையெல்லாம் பார்க்கும் போது, ஆணின் விந்தைப் பாய்ச்சும் வாயு ஒன்று இருப்பது போல, பெண்களின் சுரோணிதத்தை பாய்ச்சும் வாயு என்று எதுவும் இல்லை என்பது புரியும்.


குழந்தையின் ஆயுள் சிறக்க …

பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே.  – (திருமந்திரம் – 479)

விளக்கம்:
கூடலின் போது, ஆணின் விந்து ஐந்து விரற்கடை அளவு பாய்ந்தால் பிறக்கும் குழந்தையின் ஆயுள் நூறு வருடங்களாகும். நான்கு விரற்கடை அளவு பாய்ந்தால் பிறக்கும் குழந்தையின் ஆயுள் எண்பது வருடங்களாகும். யோகிகளுக்கு இந்தக் கணக்கு தெரியும். கூடலின் போது மூச்சைக் கட்டுப்படுத்தி, விந்து அதிக தூரத்துக்கு பாயச் செய்யும் முறை அவர்களுக்குத் தெரியும். நாமும் யோக வழியில் நின்றால், இந்த மூச்சுக் கணக்கை அறியலாம்.


பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா?

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.  – (திருமந்திரம் – 478)

விளக்கம்:
கூடலின் போது, ஆணின் ஆளுமை அதிகமாக இருந்தால், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும். பெண்ணின் ஆளுமை அதிகமானால், பிறக்கும் குழந்தை பெண்ணாகும். ஆண், பெண் இருவரின் ஆளுமையும் சம அளவில் இருக்கும் போது, பிறக்கும் குழந்தை அலியாகும். கூடலின் போது ஆணின் விந்தில் உயிராற்றல் மிகுந்திருந்தால், பிறக்கும் குழந்தை இந்த உலகத்தை ஆளும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். பாய்கின்ற விந்து அழிக்கும் ஆற்றல் கொண்டதாக இருந்தால், உருவாகும் கரு பயனின்றி அழிந்து விடும்.