திருவடியைக் கண்டேன் அன்பினாலே

கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.   – (திருமந்திரம் – 285)

விளக்கம்:
நறுமணம் தரும் கொன்றை மலரை அணிந்துள்ள சிவபெருமானின் திருவடியைக் கண்டேன். ஆணவம் எனும் யானையைக் கிழித்த ஈசனின் திருவடியைக் கண்டேன். என் இதயத் தாமரையில் எப்போதும் வீற்றிருக்கும் அவன் திருவடியைக் கண்டேன். அப்பெருமானின் திருவடியை நான் கண்டு கொண்டது என் அன்பினாலேயே!

(கமழ் – மணம்,  கரி – யானை,  கழல் – பாதம்)


ஈசனை அன்பால் வசப்படுத்தலாம்

உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தெரிந்தறி வாரில்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.  – (திருமந்திரம் – 284)

விளக்கம்:
பக்தியுடன் பணிந்து தொழும் அடியார்களுக்கு சிவபெருமான் முக்தி கொடுத்து காட்சியும் தருகிறான். தன்னையே சார்ந்திருக்கும் அடியார்களிடம் வசிக்கும் அந்த ஈசனின் அன்பிற்கு உருகும் தன்மையைப் பற்றி சித்தர்களும் இன்னும் அறிந்து கொள்ளவில்லை.


பேரின்பம் பெறும் வழி

புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு
உணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுவிது வாமே.  – (திருமந்திரம் – 283)

விளக்கம்:
சிவபோதத்தில் லயிக்கும் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்றால், கூடலின் போது ஆடவர் தனது பெண் துணையின் மேல் வைத்திருக்கும் அன்பின் அளவில் இருக்க வேண்டும். பிற உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல், சிவபெருமானை நினைத்து போதத்தில்  சஞ்சரித்து மகிழ்வது பேரின்பமாகும். அப்போது அது என்று சொல்லப்படும் சிவத்தினுள் இது என்று சொல்லப்படும் நம் ஆன்மா கலந்து ஒன்றாய் நிற்கும்.

(ஆயிழை – பெண்,  ஒடுங்குதல் – லயிப்பு,  குலாவி – மகிழ்ந்து,  உலாவி – சஞ்சரித்து)


சிந்தையில் அன்பு இருந்தால் போதும்

அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே. – (திருமந்திரம் – 282)

விளக்கம்:
நம் சிந்தையில் அன்பிருந்தால் அங்கே ஒளி வடிவான சிவபெருமான்,  இன்பம் தரும் அருட்கண்களை உடைய சக்தியுடன் சேர்ந்து அருள் புரிவான். துன்பம் தரும் ஐம்பொறிகளின் பிடியில் அகப்படாமல் நன்மை தரும் சிந்தையை நாடுவோம்.

(துடக்கற்று – அகப்படாமல்)


இன்பப்பிறவி

இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே. – (திருமந்திரம் – 281)

விளக்கம்:
இன்பப்பிறவி அடைவதற்கு வேண்டிய வழிகளை இறைவன் நமக்கு அருளியிருக்கிறான். துன்பம் மிகுந்த இப்பிறவியைப் பல கடமைகளைச் செய்துதான் கடக்க வேண்டியிருக்கிறது. நாம் அன்பினால் சிவபெருமானோடு கலந்திருந்தால், அவன் திருவருள் தரும் வலிமையால் இந்தப் பிறவியை இன்பமாய்க் கடக்கலாம்.

(முன்பு – வலிமை)


கொழுந்து விடும் அன்பு

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே. – (திருமந்திரம் – 280)

விளக்கம்:
நமக்கெல்லாம் மகிழ்ந்து அருள் செய்திடுவான் உத்தமநாதனான சிவபெருமான். நாம் அவனிடம் வைத்திருக்கும் அன்பின் அளவையும் தன்மையையும் தெரிந்தே இருக்கிறான். அவன் தன்னிடம் மிகுந்த அன்பு கொண்டவர்க்கு விரும்பி அருள் செய்வான். அந்த சிவபெருமான் அருளே வடிவானவன்.

(கொழுந்து அன்பு செய்து – சுவாலிக்கும் அளவு மிகுதியான அன்பு செய்து)


அன்பிருக்கும் இடத்தில் சிவன் இருப்பான்

அன்பின் உள் ளான்புறத்தான் உட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பின்உள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே. – (திருமந்திரம் – 279)

விளக்கம்:
இறைவன் நமக்கு உள்ளேயும் இருக்கிறான், வெளியேயும் இருக்கிறான். நமக்குள்ளே அன்பே வடிவாய் இருக்கிறான். அவன் நமது உடலாகவும் இருக்கிறான். இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே அவன் இருக்கிறான். அவன் முனிவர்களுக்கெல்லாம் தலைவன். அன்பிருக்கும் இடத்தில் எல்லாம் அவன் இருப்பான். அன்பிருப்பவர்களுக்கு அவன் என்றும் துணையாக இருக்கிறான்.


எல்லாம் தெரிஞ்சவங்க இப்படி பண்ணலாமா?

நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந் தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று
நச்சியே அண்ணலை நாடுகி லாரே. – (திருமந்திரம் – 278)

விளக்கம்:
இறைவன் நமது வினைகளுக்கு ஏற்ப பிறப்பையும் இறப்பையும் வைத்ததன் காரணத்தைப் புரியாதவர்களை விடுங்கள். அதைப் புரிந்தவர்களும் உலக போதத்திலே தான் ஆசை கொள்கிறார்கள். நம் இறைவனான சிவபெருமானை ஆசையுடன் நாடிச்சென்று வணங்குவதில்லை.


அன்பினால் விருத்தி கிடைக்கும்

கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே. – (திருமந்திரம் – 277)

விளக்கம்:
உருக்கும் போது ஒளிரும் செம்பொன் போன்ற ஒளி வடிவானவன் இறைவன். அவனை நம் நினைவில் இருத்தி எப்போதும் வணங்கி இருப்போம். அன்பு கொண்டு சிவனருளை யார் வேண்டினாலும், அவன் விருத்தி கொடுப்பான்.


உலகைப் படைத்தவன் இன்பத்தையும் படைத்திருக்கிறான்

முன்படைத்து இன்பம் படைத்த முதலிடை
அன்புஅடைத்து எம்பெரு மானை அறிகிலார்
வன்படைத்து இந்த அகலிடம் வாழ்வினில்
அன்புஅடைத் தான்தன் அகலிடத் தானே. – (திருமந்திரம் – 276)

விளக்கம்:
நமக்கெல்லாம் மிகுந்த மனவலிமை தேவைப்படுகிறது இந்த வாழ்வினை நடத்துவதற்கு. இந்த உலகத்தைப் படைத்த இறைவன் இன்பங்களையும் படைத்திருக்கிறான் என்பதை நாம் அறியவில்லை.  அந்த இறைவனிடம் அன்பு கொள்ளவும் நமக்குத் தெரியவில்லை. அகண்ட உலகமாய் உள்ள இறைவன் அன்பையும் படைத்திருக்கிறான். அன்பினாலே நம் துயரமெல்லாம் நீங்கும்.