அழிவு நிச்சயம்!

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிசையாதி
ஒன்றின் பதந்செய்த ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே.   – (திருமந்திரம் – 424)

விளக்கம்:
மலைகளின் மேலே உள்ள மேகங்களில் இருந்து மழையாக இறங்கி வரும் குலமகள், நீர்நிலைகளிலும், கடலிலும் தங்கி நமக்கெல்லாம் வாழ்வளிக்கிறாள். அதே நேரத்தில், நம் சிவபெருமான் தான் பக்குவம் செய்த இந்த மொத்த உலகத்தின் மீது நெருப்பை திரட்டி வைக்கிறான். அதனால் இந்த உலகிற்கு அழிவு என்பது உண்டு என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.


சிவபெருமானின் வல்லமை

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம்
விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே.   – (திருமந்திரம் – 423)

விளக்கம்:
பல வகையான உயிர்கள் வாழ இடம் தரும் நிலப் பகுதி, உச்சியில் பனி படர்ந்திருக்கும் மலைகள், நீர் நிறைந்த ஏழு கடல்களின் பரப்பு, இவை அனைத்தையும் சிவபெருமான்  அக்கினியால் அழித்து வெட்டவெளி ஆக்கி விடுவான். இதைச் செய்ய அவனுக்குத் தும்மல் போடும் நேரம் போதும். அவனது வல்லமையை உணர்ந்தவர்க்கு இதில் வியப்பு அடைய எதுவுமில்லை.

பதம் – இடம், உத(க)ம் – தண்ணீர், குதம் – தும்மல், ஓதம் – கடல் அலை


கற்ப சங்காரம்

இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த
நிலையன் றழிந்தமை நின்றுணர்ந் தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மானிலந் தான்வெந் ததுவே.   – (திருமந்திரம் – 422)

விளக்கம்:
மூன்று வகையான சங்காரங்களில் கற்ப சங்காரம் என்பதும் ஒன்று. அச்சங்காரத்தின் போது இந்த மொத்தப் படைப்பும் அழிக்கப்படும். அந்நிகழ்வை கற்பனை செய்து பார்த்தால், கற்ப சங்காரத்தின் போது இந்த உலகம் உலையில் கொதிக்கும் மெல்லிய அரிசி போல் உழன்று தவிக்கும். அப்போது மலைகள் நிரம்பிய பெரிய நிலப்பகுதிகளும் கூட எரிந்து அழியும்.

சங்காரம் – அழித்தல்


நெருப்பு – சிவபெருமானின் கை அம்பு!

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது
அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது
அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது
அங்கியவ் வீசற்குக் கைஅம்பு தானே.   – (திருமந்திரம் – 421)

விளக்கம்:
சிவபெருமான் உலகை அழிப்பது நெருப்பினாலே. கடல் நீர் மிகாதவாறு தடுப்பதும் நெருப்பினாலே. அசுரர்களை அழித்ததும் நெருப்பினாலே. நெருப்பு சிவபெருமானின் கை அம்பாக விளங்குகிறது.


உள்ளொளி நாடி ஞானம் பெறுவோம்!

அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே.   – (திருமந்திரம் – 420)

விளக்கம்:
சிவன் நாம் அணுகுவதற்கு எட்டாத தூரத்தில் இருப்பவன் போலத்தான் தோன்றும். நாம் நமது உள்ளொளியான குண்டலினியை நாடித் தியானம் செய்தால் ஞான வடிவில் சிவபெருமானை உணரலாம். ஞானத்தினால் மட்டுமே அவனை உணரலாம், அவனை அடையலாம், பிறவி அறுக்கலாம். உள்ளொளி நாடி ஞானம் பெறாமல், அவனைப் பணிந்தாலும், நாம் ஞானம் பெறும் வரை அவன் நமக்கு அடுத்தடுத்து பிறவிகளைத் தந்து கொண்டே தான் இருப்பான்.