பிறவிச் சுழலில் நீந்த உதவுவான்!

அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன்உணர்ந்து ஊழி இருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.  –  (திருமந்திரம் – 548)

விளக்கம்:
யாரையும் விட  வல்லவன் சிவபெருமான். அவன் நாம் பெறும் ஞானத்தினுள் தோன்றி அருள்வான். அளவில்லாத பெருமை கொண்ட நம் பெருமான் நாம் பிறவிச்சுழலை நீந்திக் கடக்க உதவி செய்வான். நம்மிடம் மட்டில்லாத உரிமை கொண்டுள்ள அவன் நம்முடைய தேடலை உணர்ந்து நெடுங்காலம் நமக்குத் துணையாக இருப்பான். இவையெல்லாம் பெறுவதற்கு முதலில் நாம் ஞானம் பெற வேண்டும். அந்த ஞானம் பெற நாம் சிறந்த சிவனடியார்களின் துணையைப் பெற வேண்டும்.


சிவபுரத்தில் சிறப்பான வரவேற்பு உண்டு!

உடையான் அடியார் அடியா ருடன்போய்
படையார் அழல்மேனிப் பதிசென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலம் என் றாரே. –  (திருமந்திரம் – 547)

விளக்கம்:
எல்லாம் உடையவனான சிவபெருமானின் அடியார்களைத் தேடிச் சென்று நாமும் சிவனடியாராய் ஆவோம். அப்பெரியவர்களின் துணையோடு நாம் தழல் போன்ற மேனியன் ஆன சிவபெருமான் தனது படைகளுடன் வசிக்கும் சிவபுரத்தை அடையலாம். சிவபுர வாயிலை நாம் அடையும் போது நாம் அங்கே வரும் செய்தியை சிவபெருமானிடம் அறிவிக்க, பெருமானும் நம்மை வருக என வரவேற்பார். நாமும் மகிழ்ச்சி தாங்காமல் ஓலமிட்டு அழுவோம்.