ஒரு ஃபேஸ்புக் உரையாடல்

மீனா – ஹாய்

ரமேஷ் – ஹலோ மேடம்!

மீனா – என்னங்க இது? அஃறிணைல கூப்பிடுறீங்க?

ரமேஷ் – ஆமால்ல! மேடம்னா தமிழில் ஆடுன்னு அர்த்தம் வருது. சாரிங்க.

மீனா – சாரியெல்லாம் பெரிய வார்த்தை. உங்க கவிதையெல்லாம் படிச்சுகிட்டு வர்றேன். வாய்ப்பே இல்லைங்க! ரொம்ப நல்லாருக்கு. அதுவும் இன்னைக்கு வந்த கவிதைய படிச்சிட்டு உங்களை பாராட்டலாம்னு தான் சாட்ல கூப்பிட்டேன். தொந்தரவு பண்ணிட்டேனோ?

ரமேஷ் – இதெல்லாம் ஒண்ணும் தொந்தரவு இல்லைங்க.

மீனா – ‘மதியொளி காய்ந்த மேனி கண்டு மதியழிந் தோய்ந்த தனியன்.’ வாய்ப்பே இல்லைங்க! இந்த வரி என்னை என்னவோ பண்ணிருச்சு.

ரமேஷ் – சந்தோஷம்ங்க.

மீனா – என்னங்க இது? உங்க கவிதை என்னை என்னென்னமோ பண்ணுதுங்கிறேன். நீங்க சந்தோஷம்ங்கிறீங்க?

ரமேஷ் – அது ஒண்ணுமில்லை. என் எழுத்து பெண்ணான உங்களை இந்த அளவு பாதிப்பது எனக்கு சந்தோஷம் தானே?

மீனா – நான் ரொம்ப பேசுறேனோ?

ரமேஷ் – இல்லைங்க.

மீனா – இந்த அளவு ஒருத்தர் எழுதனும்னா, அவர் ரொம்ப ரசனை உள்ளவரா இருக்கணும். அனுபவமும் இருக்கணும் இல்லையா?

ரமேஷ் – ரசனை இருக்கணும்கிறது சரிதான். ஆனால் அனுபவம்? அது சந்தேகம் தாங்க.

மீனா – அனுபவம் இல்லாமலா இந்த அளவு ரசிச்சு எழுதுறீங்க?

ரமேஷ் – உங்க கிட்ட சொல்றதுக்கு என்னங்க! வாய்ப்பு கிடைக்கிறவன் அனுபவிக்கிறான். கிடைக்காதவன் இப்படி கவிதை எழுதுறான்.

மீனா – நீங்க நகைச்சுவையா பேசுறீங்க.

ரமேஷ் – அடுத்தவங்க வேதனை பெண்களுக்கு நகைச்சுவை.

மீனா – உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.

ரமேஷ் – ஸாஃப்ட்வேர்காரன் நான். பொழுது போக்கு கவிதை.

மீனா – திருமணம்?

ரமேஷ் – ஆயிடுச்சுங்க. ரெண்டு பசங்க இருக்காங்க.

மீனா – மனைவி உங்கள் ரசனைக்கேற்றவரா?

ரமேஷ் – என் ரசனைக்கு ஏற்ற பெண்ணெல்லாம் கவிதையில் மட்டுமே.

மீனா – ரொம்ப வெறுத்துப் போய் பேசுறீங்க.

ரமேஷ் – இதெல்லாம் வெளியே பேசக் கூடாது. அதென்னவோ உங்க கிட்ட கொட்டிட்டேன்.

மீனா – என்னாலும் ஒரு விஷயம் சொல்லாமல் இருக்க முடியலை. வெளியில என் அழகை நிறைய பேர் ஜாடைமாடையா வர்ணிக்கிறாங்க. வீட்டில் உள்ளவர் வர்ணிக்க வேண்டாம். ரசிக்கவாச்சும்  வேணாமா?

ரமேஷ் – நீங்கள் திருமணம் ஆனவரா?

மீனா – ஆமாங்க. ஒரு பொண்ணு உண்டு.

ரமேஷ் – நீங்க வேலை பார்க்கிறீங்களா?

மீனா – ஆமாம். பஜாஜ் இன்ஸூரன்ஸ் கம்பெனில.

ரமேஷ் – சென்னை தானா?

மீனா – ஆமாம். நுங்கம்பாக்கம்.

ரமேஷ் – உங்க முழுப்பேர் மீனலோசினியா?

மீனா – அட! உங்களுக்கு எப்படி தெரியும்?

ரமேஷ் – வீட்டில லோசினின்னு கூப்பிடுவாங்களா?

மீனா – நீங்க யாரு?

ரமேஷ் – அடிப்பாவி. நான் ரமேஷ்குமார்.

மீனா – அதென்ன டி போட்டு பேசுறீங்க? நாம டைவர்ஸ் ஆகி நாலு வருஷம் ஆகிடுச்சு.

ரமேஷ் – ஸாரி. நல்லாருக்கியா?

மீனா – இருக்கேன். போன மாசம் கூட அடையார்ல ஒரு பங்களா வாங்கிப் போட்டோம்.

ரமேஷ் – நீ இருக்கிற வசதிக்கு ஏன் வேலைக்குப் போகனும்? உன் ஹஸ்பண்ட் பேரு சுந்தர் தானே?

மீனா – ஆமாம். வேலைக்குப் போனால் தான் கொஞ்சம் நேரம் போகுது. உன் வொய்ப் என்ன பண்றா?

ரமேஷ் – வீட்டில தான் இருக்கா. நான் ஆஃபிஸில் ஓவர் டைம் எடுத்து கவிதை எழுதுறேன்.

மீனா – நாம ரெண்டு பேரும் ஒரு முறை மீட் பண்ணுவோமா? ஸாரி. வேண்டாம்.

ரமேஷ் – வேண்டாம்.

மீனா – வேண்டாம்.

ரமேஷ் – வேண்டாம்.

மீனா – உன்னை ஃபேஸ்புக்கில் இருந்து அன்ஃபிரெண்ட் பண்ணிடறேன்.

ரமேஷ் – நானும் பண்ணிடறேன்.

மீனா – இந்த சாட் ஹிஸ்டரி எல்லாம் டெலீட் பண்ணிடு.

ரமேஷ் – சரி. ஆனா ஒண்ணு.

மீனா – என்ன?

ரமேஷ் – உன்னை மாதிரி வராது!

மீனா – ஆமாம். உன்னை மாதிரி வராது!