பதினெட்டு மொழிகள் அறிந்த பண்டிதர்

பண்டிதர் ஆவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. – (திருமந்திரம் – 59)

பண்டிதர் என்பவர் பதினெட்டு மொழிகளிலும் கூறப்பட்டுள்ள ஆகமங்களின் பொருள் தெரிந்தவராக இருக்க வேண்டும். பதினெட்டு மொழிகளிலும் பண்டிதர்கள் எழுதிய பொருள், அண்டங்களுக்கு முதல்வனான சிவபெருமானால் என்ன பொருளில் உபதேசிக்கப் பட்டதோ அவ்வாறே இருக்க வேண்டும்.


அண்ணல் அருளிய சிவாகமங்கள்

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே. – (திருமந்திரம் – 58)

சிவபெருமான் அருளிய ஆகமங்கள் எண்ணிக்கையில் இருபத்தெட்டு ஆகும். ஆனால் அதில் உள்ள பொருள்கள் இருபத்தெண் கோடி நூறாயிரம், அதாவது அந்த ஆகமங்கள் அளவில்லாத பொருள் உடையவையாகும். தேவர்களால் பெருமையாக சொல்லப்பட்ட அந்த ஆகமங்களின் பொருள் உணர்ந்து நம் சிவபெருமானை வணங்குவோம்.


ஆகமங்கள் இருபத்தெட்டு

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே. – (திருமந்திரம் – 57)

விளக்கம்
கருமை நிறம் கொண்ட உமையம்மையை தன்னுடைய ஒரு பாகமாகக் கொண்டவன் சிவபெருமான். அந்த சிவபெருமான் அருள் செய்த ஆகமங்கள் மொத்தம் இருபத்து எட்டு. ஈசனுக்கு மொத்தம் ஐந்து முகங்கள் உண்டு. ஐந்தாவது முகம், ஈசான முகம் என்று சொல்லப்படும். இருபத்து எட்டு ஆகமங்களையும் அருள் செய்தது, உச்சி நோக்கி இருக்கும் அந்த ஐந்தாவது முகம் ஆகும். அந்த ஆகமங்களை நேரடியாகக் கேட்கப் பெற்றவர்கள் அறுபத்து ஆறு பேர்.

இருபத்தெட்டு ஆகமங்கள் – காமிகம், யோகசம், சிந்தியம், காரணம்,அசிதம், தீத்தம், சூக்குமம், சகத்திரம், அஞ்சுமான், சுப்பிர பேதம், விசயம், நிசுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற் கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பாரமேசுவரம், கிரணம், வாதுளம்.


சிந்தையெல்லாம் நீயே!

சிந்தையின் உள்ளே எந்தை திருவடி
சிந்தையும் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை அறியகி லான்ஆகில்
எந்தையை யானும் அறியகி லேனே. – (திருமந்திரம் – 2428)


வேதத்தின் ஆறு அங்கங்கள்

ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. – (திருமந்திரம் – 55)

விளக்கம்:
ஆறு அங்கங்கள் உடைய வேதத்தை அருளியவன் சிவபெருமான். அப்பெருமானை நம்முள் ஒரு அங்கமாக உணர்ந்து நாம் வழிபடவில்லை. அவனை நம்மில் வேறாகவே நினைத்து இந்தப் பிறவிப் பயனை அடைய மறுக்கிறோம், வரும் பிறவிகளின் எண்ணிக்கையை பெருக்குகிறோம்.

வேதத்தின் ஆறு அங்கங்கள் இவை:

  1.  சிட்சை –  வேதத்தின் எழுத்து மற்றும் ஒலி முதலியவற்றைப் பற்றிச் சொல்வது.
  2. வியாகரணம் – சொற்களின் இலக்கணத்தை ஆராய்வது.
  3. சந்தம் – செய்யுள் இலக்கணம் பற்றிச் சொல்வது.
  4. சோதிடம் – கோள் நிலைகளை வைத்து காலத்தை ஆராய்வது.
  5. நிருக்தம் – வேதச் சொற்களுக்கு பொருள் கூறுவது.
  6. கல்பம் – செயல் முறைகளை உரைக்கும் நூல்.
Lord Siva grant us the Vedas, which has six organs.
We don't see the Lord as part of us.
We are seeing Him separate from us,
Thus we are wasting this life-time.

திருநெறி என்பது சிவனை மட்டுமே நினைத்திருப்பது!

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. – (திருமந்திரம் – 54)

விளக்கம்:
திருநெறி என்று சொல்லப்படும் தெய்விக நெறி என்பது அறிவு, அறியாமை ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது. அப் பெருநெறியில் செல்ல சிவபெருமான் ஒருவனை மட்டும் நினைத்திருந்தால் போதுமானது. குருவினால் உணர்த்தப்படுவதும், சிவனோடு பொருந்தியிருக்கும் அந்நிலை பற்றியதே ஆகும். வேதம் சொல்லும் வழியும் அதுவே!

The path towards the Lord is beyond intelligence and ignorance.
The way to that great path is simple - just think of Siva always.
The  Masters are teaching about this only.
This is the only path described by Vedanta.

வேதத்தின் சிறப்பு

வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. – (திருமந்திரம் – 51)

விளக்கம்:
வேதத்தில் கூறப்படாமல் விடுபட்ட அறம் எதுவும் இல்லை. படித்து உணர வேண்டிய அறம் எல்லாமே வேதத்தில் உள்ளன. அறிஞர்கள் வீண் வாக்குவாதத்தை விட்டு பொருள் வளம் மிகுந்த வேதத்தை ஓதி முக்தி பெற்றார்கள்.

No Dharma is left in the Vedas.
All the necessary Dharmas have been described in Vedas.
The wise people don't argue but learn
the Vedas and attain Mukthi.

சத்தாதி நான்கிலும் இளையராஜா

உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே. – (திருமந்திரம் – 1593)

விளக்கம்:
குண்டலினி சிரசினில் பொருந்தியிருக்கும் நிலை சமாதியாகும். அதுவே திருவடிப் பேறுமாகும். நாம் அந்நிலை அனுபவிக்கும் போது பேச்சு அற்று போகும், உணர்வு அழிந்து நான் என்ற நிலை மறந்து போகும். அலையில்லாத தெளிந்த நீரைப் போன்ற சிவத்தன்மை அனுபவமாகும். நான்கு வகை ஓசைகளான செவியோசை, மிடற்றோசை, நினைவோசை, நுண்ணோசை ஆகியவற்றைக் கடந்து விடலாம். அந்த சிவபெருமான் நம்மை நம்முடைய உண்மையான சொரூபத்தில் இருத்தினான், அதனால் பேச்சற்றுப் போனோமே.

சமாதி நிலையில் சிரசினில் இறைவன் திருவடியை மட்டுமே உணர்ந்திருப்போம். மற்ற எல்லா உணர்வுகளும் அற்றுப் போகும்.

சத்தாதி என்பது நான்கு வகை ஓசைகளைக் குறிக்கும். இது பற்றி எளிதாகப் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், இளையராஜா ரசிகர்களை வைத்து உதாரணம் சொல்லலாம். முதலில் செவியோசை, நம் காதில் விழும் சுற்றுப்புற ஒசை. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு ராஜாவின் இசை தவிர மற்ற இசை கேட்டால் காது சிவந்து ஒவ்வாமை ஏற்படுகிறது. அடுத்து மிடற்றோசை, நம் தொண்டையிலிருந்து வந்து நமக்கே கேட்கும் ஓசை. ராஜாவின் பாடல்களைக் கேட்டு ஹம் செய்வோமே, அதேதான். மூன்றாவது நினைவோசை, அந்த தென்றல் வந்து பாட்டு மண்டைக்குள்ளயே சுத்திகிட்டு இருக்குன்னு சொல்வாங்களே, அதேதான். ஒரு முறை கேட்ட பாட்டு திரும்பத் திரும்ப நினைவில் சுற்றி வரும் ஓசை அது. கடைசியாக நுண்ணோசை, இது அவ்வளவு எளிதாகக் கேட்க முடியாதது. நம் உடலினுள் ரத்தம் பாய்வது, மூச்சு உள்ளே சென்று வருவது போன்ற கேட்க முடியாத நிறைய ஓசைகள் உண்டாம். ஒரு பூ மலர்ந்து விரியும் போது அங்கே ஒரு நுண்ணோசை நிகழுமாம். ராஜா ரசிகர்களைக் கேட்டுப் பாருங்கள், மனம் நெகிழும் ஓசையை நிறைய முறை கேட்டிருப்பதாகச் சொல்வார்கள்.

In the state of Samadhi, we'll be speechless,
There will be no other feelings. Our egotism will be dissolved.
We'll be unite with Lord Siva. We'll not hear any sound surround us.
The Lord will keep us in our natural state .

தியானத்தால் பிறவிப் பெருங்கடல் நீந்தலாம்

நரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத்து ஒருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடநது எய்த லாமே. – (திருமந்திரம் – 49)

விளக்கம்:
நம்முடைய ஆன்மா மற்றும் ஆன்மாவை கட்டியிருக்கும் தளை ஆகியவற்றின் தலைவனான சிவபெருமானை நினைத்திருப்போம். மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவை ஒருங்கே இருக்கச் செய்ய வல்லவர் அலைகள் நிறைந்த பாவக்கடலை நீந்தி முக்தி எனும் கரையை அடையலாம்.

மனம், உடல், ஆன்மா ஆகியவை ஒருங்கிணைந்து இருக்கும் நிலை தியானமாகும். தியானப் பயிற்சியினால் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்கலாம்.

(நரை – பழமை,  பசு – ஆன்மா, பாசம் – தளை, உள்ளி – நினைத்து,  திரை – அலை)

Let us think of our Lord, who is the master of this body and soul.
Those who can make their mind, body and soul be concentrated together,
are able to swim this ocean of sin
and reach the shore of Mukthi.

தெளிவு!

அது ஒரு நண்பகல். ஊரெங்கும் ஒரே இருட்டு. வீட்டில் இருந்த மூன்றாவது மாடியில் நான் மட்டும் தனியாக திருமணமாகாத என் மனைவியுடன் இருந்தேன். எங்கள் வீட்டில் இரண்டே தளங்கள், மூன்றாவது மற்றும் ஐந்தாவது. இரவு நீண்ட நேரம் தூங்கிய களைப்பில் என் மனைவி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவளது மூச்சு இனிமையான இசையாக வெளி வந்தது. வியப்புடன் எப்படி என்பது போல் அவளை பார்த்தேன்.

“மூங்கில் மூச்சு” என்றாள்.

எனக்கு மூக்கில் மூச்சு மட்டும் தான் தெரியும். பசி எடுத்தது . ஏதாவது இருக்கிறதா என்று தேடிய போது அவள் சாப்பிட்ட மீதம் கொஞ்சம் இருந்தது. அதை எடுத்து முகர்ந்து பார்த்து பசியாறினேன். அப்போது தான் ஐந்தாவது மாடியில் இருந்து அழைப்பு மணி ஒலித்தது. கீழே இறங்கிப் போய் அங்கிருந்த மெழுகுவர்த்தி ஒன்றை ஊதினேன். வெளிச்சம் பரவியது. வீட்டின் நடுவிலிருந்த ஃப்ரிட்ஜை திறக்க முயன்று, முடியாது என்பதை உணர்ந்தேன்.

“மன்னிக்கவும். எனது கைகளை மாட்டிக் கொள்ள மறந்து விட்டேன். நீங்களாக கதவை திறந்து வாருங்கள்” என்றேன்.

உள்ளே வந்த அந்த பெண்ணுக்கு பதினெட்டு வயது இருக்கும். யோசித்ததில் அவள் எனது முன்னால் காதலி என்பது நினைவில் வந்தது.

அது ஒரு இனிமையான காலம். நாங்கள் இருவரும் ஒரே காகிதத்தில் தேர்வு எழுதினோம், ஒரே ஃபோனில் இருவரும் பேசிக்கொள்வோம், ஒரே பயணச்சீட்டில் பிரயாணம் செய்வோம். ம்ஹூம், இப்போது எதுக்கு அந்த இருபது வருஷத்துக்கு முந்திய கதையெல்லாம்!

“எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டேன்.

“உன் நினைவுகளை சுமந்து கர்ப்பமாகி விட்டேன்” என்றாள்.

அவள் வயிற்றுக்குள் இருந்து ஒரு சிறுவன் எட்டிப் பார்த்து ‘ஆமாம் அப்பா’ என்றான்.

“ரொம்ப சந்தோஷம்” சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன். மறந்து விட்டிருந்த கைகளை எடுத்து வந்திருந்தாள் என் மனைவி.

நிமிர்ந்து பார்க்கவே கூசிற்று எனக்கு.

“இப்போது நாம் என்ன செய்வது ?” முணுமுணுப்புடன் நிமிர்ந்து பார்த்தேன். அங்கிருந்த என் மனைவியை காணவில்லை.

அங்கே சிரித்தபடி இளையராஜா ‘நான் தேடும் செவ்வந்தி பூ இது” பாடிக் கொண்டிருந்தார்.