கடலில் இருந்து எழும் சூரியன்

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய் எழுஞ் சூரிய னாமே.   – (திருமந்திரம் – 116)

விளக்கம்:
மூங்கிலில் மறைந்திருக்கும் தீயைப் போன்று,  தலைவனான நந்தி பெருமான் நம் உடல் எனும் கோயிலில் குடி கொண்டுள்ளான். ஒரு தாய் தன்னுடைய குழந்தையின் அழுக்கு தீர குளிக்க வைப்பதைப் போல, அந்த சிவபெருமான்  நம்முடைய மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை நீக்கி அருளுகிறான்.  அவன் கடலில் இருந்து உதித்து எழும் சூரியன் போன்றவன் ஆவான்.

(வேய் – மூங்கில்,   தயா – அருள்,   தோயமதாய் – கடலிடமாய்)