குண்டலினியை வெவ்வேறு வடிவங்களில் உணரலாம்

மூலத்து மேலது முச்சது ரத்தது
காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.  –  (திருமந்திரம் – 627)

விளக்கம்:
கும்பகத்தின் போது நமது மூச்சுக்காற்று, மூலாதாரத்திற்கு மேல் உள்ள சுவாதிட்டானத்தில் நின்று பிறகு சுழுமுனை வழியாக மேற்செல்லும். அப்போது வானில் உள்ள பிறை போன்ற நமது நெற்றியில் குண்டலினியினை வெவ்வேறு வடிவங்களில் உணரலாம்.

காலத் திசையிற் – கால் அத்திசையில் (கால் – காற்று)


சமாதி நிலையில் சிவனைக் காணலாம்

நம்பனை யாதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.  –  (திருமந்திரம் – 626)

விளக்கம்:
நம்பிக்கைக்கு உரியவனும், முதற்பொருளாக விளங்குபவனும், நான்கு வேதங்களாலும் ஓதப்படுபவனும், செம்பொன்னின் உள்ளே விளங்கும் சோதியைப் போன்றவனும் ஆனவன் சிவபெருமான். அன்பு மிகக் கொண்டு, ஆசைகளை ஒடுக்கி, நமது நாட்டம்  நடுநாடி வழியாக உச்சி ஏறுமாறு செய்து சிரசினில் தியானித்திருந்தால், சகசிரதளத்தில் அந்த சிவபெருமானைக் கும்பிட்டு அவனுடன் கலந்து நிற்கலாம்.

புகலிடம் தரும் சிவபெருமானின் திருவடியை அடைய அவனை வெளியுலகில் அலைந்து தேட வேண்டியதில்லை. குண்டலினியினை உச்சியில் ஏற்றி தியானித்திருந்தால் சகசிரதளத்தில் அந்த ஈசனைக் கண்டு அவனுடன் கலந்து விடலாம்.

நான்மறை – நான்கு வேதங்கள்,   அருத்தி – ஆசை,   கூட்டமிட்டார் – கலந்திருந்தார்


செல்லையா காவியத்தலைவன் பார்க்கிறான்

‘செல்லாத துட்டோட பயணம் போகலாம், ஆனா செல்லையாவோட படத்துக்குப் போகக்கூடாது’ன்னு எங்க ஊர்ப்பக்கம் ஒரு சொலவட உண்டு. சினிமா பாத்துட்டு விமர்சனம்னு ஒன்னு பேசுவான், அதுக்கு பயந்து யாரும் அவங்கூட படத்துக்கு போறதில்ல. “இங்க நல்லா படம் எடுக்கத் தெரிஞ்சவனுக்கு ரசன இல்ல. ரசன இருக்கிறவனுக்கு அத நல்லா எடுக்கத் தெரில” ங்கிறது அவனோட பொது விமர்சனம். ரஜினி படத்தப் பத்தி மட்டும் கொற சொல்ல மாட்டான். கமல் ரசிகனைப் பாத்தா கூப்பிட்டு வச்சு வம்பிழுப்பான். “ஒங்க ஆளு அழுதா தியேட்டர்ல கை தட்றானுங்க. அதுவாடா நடிப்பு? எங்க ஆளு அழ மாட்டாரு, ஆனா அழ வைப்பாரு”ன்னு ஆரம்பிச்சான்னா ‘சரி செல்லையா, சரி செல்லையா ரஜினி தான் பெஸ்ட்’ன்னு சொல்லித்தான் தப்பிக்கணும்.

அந்த செல்லையா கூடத்தான் நான் காவியத்தலைவன் பாக்க வேண்டியதாப் போச்சு. நான் பயந்த அளவுக்கு ஒன்னும் ஆகல, படம் ஆரம்பிச்சு பத்தாவது நிமிஷம் சுவாரசியமானவன் பெறகு அப்படியே படத்தோட ஐக்கியமாயிட்டான். ரொம்ப நிம்மதியா இருந்தது எனக்கு. இண்டர்வலுக்குப் பிறகு அப்பப்போ ஏதாவது சொல்ல வந்தான், என்ன நெனச்சானோ திரும்ப படத்துல முங்கிட்டான். செல்லையாவ பாத்த யாரும் எங்க பக்கத்துல வந்து உட்காரல, வேற பக்கம் போயிட்டாங்க. எனக்கு படம் பாக்க ஃப்ரீயா இருந்தது. நான் பொழுது போறதுக்காக சினிமா பாக்குறவன், அந்த வகைல நல்லாவே பொழுது போச்சு.

தியேட்டர்ல அமைதியா இருந்த செல்லையா வெளிய வந்து வறுக்க ஆரம்பிச்சான், நான் வேக ஆரம்பிச்சேன். ஒன்னு புரிஞ்சது எனக்கு,  ‘நடிப்புங்கிறது கைதட்டல் வாங்குறது இல்ல, பாக்குறவங்கள உணர்ச்சி வசப்பட வைக்கிறது’ன்னு சொல்ற விஷயம் அவனுக்கு ரொம்ப பிடிச்சுப் போயிருக்கு. “இதத்தானடா இத்தன வருஷமா சொல்லிட்டுருக்கேன்!”ன்னு ஃபீல் பண்ணான். ஒவ்வொரு சீனா சொல்லி அத தான் ரசிச்ச விதத்த விவரப்படுத்தி, என்னை ரொம்பவே படுத்தினான். நானும் உன்கூட தானடா படம் பாத்தேன்னு சொல்ல நெனச்சு சொல்லாம விட்டுட்டேன்.

செல்லையாவ நிப்பாட்ட வேற வழி தெரியாம “ஆமா செல்லையா! படம் சூப்பர். அத்தன பேரு நடிப்பும் சூப்பர்”ன்னேன். சொல்லி முடிக்கல “என்ன சூப்பர கண்டுட்ட நீ”ன்னு ரிவர்ஸ் அடிச்சான். “புராண நாடக சீன எல்லாம் ஓரளவுக்கு மெனக்கெட்டவங்க, சுதந்திரப் போராட்ட சீன பூராவும் லோரம் இப்சம் போட்டு நிரப்பியிருக்காங்க. வந்தே மாதரம்ங்கிறது டம்மி வார்த்தையா போச்சு. நடிப்புலயும் பாரு சித்தார்த்தும் ப்ருத்வியியும் நல்லா பண்ணியிருக்காங்க, ஆனா நாசர் அவங்களுக்கு ஏத்த மாதிரி தன்ன ட்யூன் பண்ணிக்கல.” “ம்யூசிக்”ன்னு ஆரம்பிச்சேன், “எடே! தமிழ்நாட்டுல ம்யூசிக் பத்தி பேசக்கூடாதுன்னு ஒன்கிட்ட யாரும் சொல்லலியா?”ன்னு கேட்டான்.

நடந்துகிட்டே பேசிட்டிருந்த எங்க பின்னால “ஏண்டா டேய்!”ன்னு ஒரு சத்தம் ஆல்கஹால் வாசனையோட வந்தது. கொரல் குடுத்த ஆசாமி நாங்க பேசிக்கிட்டு இருந்தத கேட்டுகிட்டே வந்திருப்பார் போல. “வெரல் விட்டு எண்ணுனா ஒரு நாலு பேரு தான் பாக்குற மாதிரி படம் எடுக்குறான். இப்பிடி நொட்ட பேச்சு பேசி பேசியே அவங்களையும் மொடக்கிப் போடுங்க. சரியாடே!”ன்னு சொல்லிட்டு வேகமா நடந்து போயிட்டார்.


பாற்கடல் அமுதம் நமக்கும் உண்டு

உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்
அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே.  –  (திருமந்திரம் – 625)

விளக்கம்:
ஆன்ம சொரூபத்தை அறிந்து கொண்ட நமக்கு பரிசொன்று கிடைத்துள்ளது. அது தேவர்களுக்கும் கிடைக்காதது. குண்டலினியினை சிரசில் ஏற்றி தியானித்திருந்தால் உச்சியில் அமுதூறும். அவ்வமுதினை உண்போர்க்கு, முடிவில்லாத ஆசை கொண்ட மனம் அடங்கப்பெற்று சமாதி நிலை வாய்க்கும். இந்த முறை அறியாத தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து அமுது உண்டார்கள்.

தேவர்கள் பாற்கடல் கடைந்து எடுத்த அமுதை விட நாம் அகத்தியானம் செய்து உச்சியில் ஊறச்செய்யும் அமுதம் உயர்வானது.

உரு – ஆன்ம சொரூபம்,   கருவரை – கருங்கல்லால் ஆன வரை,   அரு – உருவமில்லாத,  வரையா மனம் –  அடங்காத மனம்


தியானத்தின் போது மனத்தை பூட்டி வைப்போம்

பூட்டொத்து மெய்யிற் பொறிபட்ட வாயுவைத்
தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே.  –  (திருமந்திரம் – 624)

விளக்கம்:
தியானத்தின் போது மனத்தை வெளியே செல்ல விடாமல் பூட்டி, உடம்பினுள் இயங்கும் பிராணவாயுவுடன் பொருந்தியிருக்கச் செய்வோம். அப்படி கவனத்தை மீட்டி, கண் அசையாமல் தியானம் செய்திருந்தால் அனுகூலம் தரக்கூடிய சமாதியில் அழுந்தியிருக்கலாம்.

மெய் – உடல்,   நாட்டம் – கவனம்,   நயனம் – கண்


ஈசனின் திருவடியைப் பொருந்தி இருக்கும் நிலை சமாதி

மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.  –  (திருமந்திரம் – 623)

விளக்கம்:
தியான நிலையில் பஞ்ச பூதங்களின் எல்லைகளான ஐந்து மண்டலங்கள், பன்னிரண்டு பிரணவ கலைகள், ஆறு ஆதாரச் சக்கரங்களில் உள்ள அட்சரங்களை இடமாகக் கொண்ட நாற்பத்தெட்டு தேவதைகள் ஆகியவற்றைக் காணலாம். இவை எல்லாவற்றிலும் பரந்து நிற்கும் அந்த ஈசனின் திருவடிகளில் பொருந்தி இருந்து சமாதி நிலை அடையலாம்.


சகசிரதளத்தில் அகண்ட பெருவெளியைக் காணலாம்

மூல நாடி முகட்டல குச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்டபின்
காலன் வார்த்தை கனவிலும் இல்லையே.  –  (திருமந்திரம் – 622)

விளக்கம்:
தியானத்தின் போது நாம் கண், காது, மூக்கு, நாக்கு ஆகிய நான்கு வாசல்களின் நடுவில் பொருந்தி இருக்கிறோம். அத்தியானத்தில் சிவனை நாடி இருந்து தலை உச்சியுள் உள்ள சகசிரதளத்தில் மனம் பொருந்தியிருக்குமாறு செய்வோம் . அப்போது சகசிரதளத்தின் மேலே அகண்டவெளி ஒன்றைக் காணலாம். அவ்வெளியைக் கண்டு விட்டால் பிறகு காலன் என்ற சொல் கனவிலும் கிடையாது.

சகசிரதளத்தில் மனம் செலுத்தி தியானித்திருந்தால் அங்கே அகண்ட பெருவெளியைக் காணலாம், சமாதி நிலையை அடையலாம்.

மூலம் – சிவன்,  முகட்டலகு – சகசிர தளம்


சிரசில் உணர்வு பெற்றால் மனம் அடங்கும்

விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே.  –  (திருமந்திரம் – 621)

விளக்கம்:
தியானத்தின் போது நம்முடைய மனம் சிரசின் மேல் நிலைத்திருந்தால், அங்கே ஆகாய நீர் ஊற்றெடுப்பதை உணரலாம். மேலும் அங்கே விந்தமலையைக் கண்டு களிக்கலாம். சிரசில் தோன்றும் அந்த மலைப்பிரதேசத்தில் மனமெனும் குதிரையைப் பழக்கிச் செல்லக் கூடிய வீதி ஒன்றைக் காணலாம். அந்த வீதியில் நம்முடைய மனம் பயணம் செய்தால், அந்த மனம் கடிவாளம் இடப்பட்ட குதிரை போல் அடங்கி நிற்கும்.

கடப்பதற்கு மிகவும் கடினமான விந்தமலையை அகத்தியர் கடந்ததாக ஒரு செய்தி உண்டு. சிரசின் மேல் மனம் செலுத்தி தியானம் செய்தால் ஆன்மிகத்தில் அது போன்ற கடினப்பாதையைக் கடந்து செல்லலாம். மேலும் மனம் கடிவாளம் இடப்பட்ட குதிரை போல அடங்கி நிற்கும்.

விண்டு – ஆகாயம்,   கூபம் – நீர் ஊற்று,   விஞ்சத்தடவி – விந்தமலை,   செண்டு – குதிரையை பழக்கும் வீதி,  செழுங்கிரி – செழுமையான மலை,  குசை – கடிவாளம்


மனம் அடங்கும் நிலை சமாதி

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே.  –  (திருமந்திரம் – 620)

விளக்கம்:
மனம் எங்கே நிலைபெறுகிறதோ அங்கே பிராணவாயுவின் இயக்கம் சமாதி நிலைக்கு இட்டுச் செல்லும். மனம் தியானத்தில் நிலைபெறாமல் வெளியே ஓடினால் அங்கே சமாதி நிலை சாத்தியம் இல்லை. மனம் தியானத்தில் நிலைத்திருந்து அந்த நிலையில் மகிழ்ந்திருப்போர்க்கு மனத்தில் எண்ணங்கள் அழிந்து போகும்.

மனத்தில் எண்ணங்கள் அழியும் நிலை சமாதியாகும்.


சமாதி நிலையில் பேரொளியைக் காணலாம்

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.  –  (திருமந்திரம் – 619)

விளக்கம்:
தியானத்தின் போது ஒளியும் நாதமும் தலை உச்சியில் மிகுந்து விளங்கினால், ஆன்மாவும் இறைவனும் ஒன்றி நிற்கும் நிலையான சமாதி கைகூடும். முடிவில்லாத ஞான வடிவான சிவனை அழகான பேரொளியாய்க் காணலாம்.

விந்து – ஒளி,  சந்தி – கூடுகை,  அந்தம் – முடிவு