செல்வம் வேண்டாம், செல்வன் போதும்.

அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவ மன்றே.  – (திருமந்திரம் – 168)

விளக்கம்:
மக்களுக்குத் தேவையானதை அருளக்கூடிய அரசபதவி, யானைப்படை, தேர்ப்படை மற்றும் அளவில்லாத பொன் பொருள், இவை யாவுமே நிலையானவை கிடையாது. இவை எல்லாவற்றையும் ஒருநாள் பகைவன் வந்து அபகரித்துக் கொள்ளும் அபாயம் உண்டு. நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே, நிலையான செல்வத்தை உடைய ஈசன் அடியைச் சேர்ந்து இருந்தால் தெளிவான அறிவைப் பெறலாம். நம் துன்பமெல்லாம் மறைந்து போகும். ஈசன் திருவடியைச் சேர்ந்திருப்பதே சிறந்த தவமாகும்.

பொருட்செல்வத்தை விட அருட்செல்வமே நிலையானது. அச்செல்வத்தை நமக்கு அருளும் செல்வன் ஈசன் ஆவான்.

தெருள் – தெளிவான அறிவு