தியானத்தில் மனத்தை நிறுத்துவோம்

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வௌiயுறத் தானோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே.    – (திருமந்திரம் – 588)

விளக்கம்:
கோணாத மனத்தைக் குறிக்கோளாய்க் கொண்டு, நம் மனம் கீழ் நோக்காதவாறு பார்த்துக் கொள்வோம். நடு நாடியின் வழியாகச் செல்லும் மூச்சுக்காற்றில் நம் மனம் பொருந்துமாறு செய்து கண்களைத் திறந்து வைத்து தியானம் செய்வோம். காணும் காட்சிகளிலும், காதில் விழும் ஒசைகளிலும் மனம் செல்லாமல் தியானம் செய்ய வல்லவர்க்கு வாழ்நாளைப் பற்றிய கவலை இராது.

குறிக்கொண்டு – குறிக்கோளாய்க் கொண்டு,   வீணாத்தண்டு – நடு நாடி,   வாணாள் – வாழ்நாள்


திருமூலரின் குறிப்பினுள் குவலயம் தோன்றும்

குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரனு மாமே.  .    – (திருமந்திரம் – 587)

விளக்கம்:
திருமூலர் அருளியுள்ள அட்டாங்க யோகம் பற்றிய குறிப்புகளை நன்கு ஆராய்ந்து உணர்ந்தால், அவற்றின் உள்ளே  ஒரு பெரிய உலகமே தோன்றுவதைக் காணலாம். அவருடைய உபதேசத்தின் படி, மனத்தில் உள்ள வெறுப்பு இருளை அகற்றி, முறையான யோகப் பயிற்சி செய்து அந்த சிவபெருமானை நாடி இருப்போம். நம் சிந்தை சிறப்புறும், அந்த இறைவனைக் காட்சியாய் உணரலாம்.

திருமூலரின் குறிப்புகள் சுருக்கமாகத் தோன்றினாலும், அவற்றைத் தெளிவாக படித்து உணர்ந்தால், அவற்றில் உள்ள செய்திகள் விஸ்தாரமானவை என்பது புரியும்.