தத்துவமசி

வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் எனாதுகண்டு இன்புறு வோர்களே  – (திருமந்திரம் – 225)

விளக்கம்:
அந்தணர் என்பவர்கள் வேதத்தின் நிறைவுப் பகுதியாகிய உபநிடத்தின் உண்மைப் பொருளை அறியும் விருப்பத்துடன் இருப்பார்கள். தத்துவமசி என்பதைப் புரிந்து கொள்ளும் அறிவின் எல்லையில் நின்று பிரணவத்தில் பொருந்தி நிற்பார்கள். நாதம், வேதம், அறிவு ஆகிய அனைத்தின் முடிவிலும் இருப்பது சிவபெருமானே என்பதைப் புரிந்து கொள்வார்கள். தமது ஆன்மிகப் பாதையில் இதுதான் முடிவு என்று எதையும் எண்ணாமல், தொடர்ந்து பயணம் செய்து இன்புறுவார்கள்.

தத்துவமசி – தத் + த்வம் + அசி. இதன் பொருள் நீ அதுவாகிறாய், அதாவது சீவனும் பரமனும் வேறு வேறானவை இல்லை. இதைப் புரிந்து கொள்வதே அறிவின் எல்லையாகும்.