பின்னிக் கிடப்பேன் பேரன்பிலே

பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே. – (திருமந்திரம்-271)

விளக்கம்:
பொன்னை விடப் பிரகாசிக்கும் புலித்தோலை ஆடையாக உடுத்தியிருப்பவன் சிவபெருமான்.  அவன் மின்னி மிளிரும் பிறைச் சந்திரனைச் சூடியிருப்பவன். நெற்றியில் எப்போதும் திருநீறுடன் இருப்பவன், கூத்தாடுபவன். பேரன்பினாலே அவன் நினைவில் பின்னிக் கிடந்தேனே!

(துன்னி – பொருந்தியிருக்கின்ற,  சுடுபொடி – திருநீறு).


அன்பே சிவம்

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. – (திருமந்திரம்-270)

விளக்கம்:
அன்பும் சிவமும் வேறானவை என்று ஒருவர் சொன்னால், அவர் ஒன்றும் அறியாதவர் ஆவார். அன்புதான் சிவம் என்பதை அவர்கள் தெரிந்துகொள்வதில்லை. அன்புதான் சிவனை அறியும் வழி என்பதை ஒருவர் அறிந்தபின், அவர் அன்பானவராய் இருப்பார், சிவத்தன்மை அடைவார்.