திருவிற்குடி

எங்குங் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபாற்
பொங்கும் சலந்தரன் போர்ச்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித் தாழிசெய் தானே. – (திருமந்திரம் – 342)

விளக்கம்:
எங்கும் கலந்திருக்கும் சிவபெருமான் நம் உள்ளத்திலும் எழுந்து அருள்கிறான். ஆறு அங்கங்களைக் கொண்ட அருமறைகளைத் தந்த நம் பெருமான், சினம் கொண்ட சலந்தரன் என்னும் அசுரனை, தன்னுடைய கால் விரலால் நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறி அதை அந்த அசுரனையே எடுக்க வைத்தான். அந்தச் சக்கரத்தை எடுத்த அசுரன் அழிந்து போனான். இந்த வீரச்செயல் நடந்த இடம் திருவிற்குடி.

யோகப் பயிற்சியின் போது, நீரை முகமாகக் கொண்ட சலந்தரன் என்னும் அசுரன், குண்டலினியை கீழ் நோக்கு முகமாக இறங்கச் செய்வான். அப்போது நாம் சிவபெருமானைத் தியானம் செய்தால், பெருமான் அந்த அசுரனை போர் செய்து அழித்து, குண்டலினியை மேல்நோக்கிச் செல்லுமாறு செய்வான்.