முப்புரம் என்னும் மும்மலங்களை அழித்தவன்

திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே. – (திருமந்திரம் – 348)

விளக்கம்:
நம் மனத்தினுள் அலைந்து திரிகின்ற மும்மலங்களை அழிப்பவன் சிவபெருமான். அவனைக் கண்டு அடைவது அரிதான செயல் என்று நினைத்து சோர்வடைய வேண்டாம். அன்புடையவர்க்கு ஈசன் அருள் பொய்ப்பதில்லை. சிவபெருமான் அன்புடனே நம்முடன் பொருந்தி இருப்பான். நமக்கு வேண்டிய பரிசு அவன் அறிவான்.

செற்ற – அழித்த,    முப்புரம் – மும்மலங்கலான ஆணவம், கன்மம், மாயை,   புரிவு – அன்பு

புரிவு என்பதற்கு விருப்பம், தெளிவு என்று வேறு பொருட்களும் உண்டு. எந்தப் பொருள் கொண்டாலும் இங்கு பொருத்தமாய் இருக்கும்.