கணக்கு அறிந்தவர்!

கணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது
கணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சி
கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே. – (திருமந்திரம் – 316)

விளக்கம்:
நன்கு கல்வி கற்றவர்களே இறைவனைக் காணும் வழி தெரிந்தவர் ஆவார்கள். அவ்வாறு வழி தெரிந்தவர்களால், இறைவனின் தன்மையை உணர முடியும். அவர்களுக்கு இறைவனின் காட்சி கிடைக்கும். இந்த உலகம் முழுவதும் உள்ள எல்லாவற்றிலும், அந்த இறைவன் பரவியிருக்கும் தன்மையை அவர்கள் உணர்வார்கள்.


நோக்கம் உயர்ந்து இருக்க வேண்டும்

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே. – (திருமந்திரம் – 315)

விளக்கம்:
வானளவு உயர்ந்திருக்கும் மரத்தில் விளைந்திருக்கும் விளாம்பழத்தை உண்ண விரும்பினால், நம்முடைய கண் பார்வை மேல் நோக்கி இருக்க வேண்டும். அப்போது தான் உயர்ந்த கிளைகளில் இருக்கும் விளாம்பழம், பறிப்பதற்கு வசதியாக, நம் கண்களுக்குத் தெரியும். அதை விட்டு விட்டு நாம் மரத்தின் கீழே உதிர்ந்து கிடக்கின்ற பிஞ்சுக்காய்களை எடுத்துக் கொண்டு, அதையே கிடைப்பதற்கு அரிய விஷயமாக நினைக்கக் கூடாது. சிலர் அப்படித்தான். உலக விஷயங்களைப் பெரிதாக நினைத்து அவற்றைப் பற்றி எழுதி வீணாகப் போகிறார்கள்.

கல்வியினால் நமது நோக்கங்கள் உயர்ந்ததாக இருக்க வேண்டும். அற்ப விஷயங்களில் மனம் மயங்கக் கூடாது.


கல்வி கற்ற வல்லவர்கள்!

நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.  – (திருமந்திரம் – 314)

விளக்கம்:
கற்று அறிந்த வல்லவர்கள், இந்த உடலில் உயிர் நிலையாக நில்லாது என்பதைப் புரிந்து கொள்வார்கள். நிலையாமையைப் பற்றிப் புரிந்திருப்பதால் அவர்கள் தான தர்மத்திலும், தவத்திலும் தங்கள் காலத்தைக் கழிப்பார்கள். இறை பற்றிய கல்வி இல்லாதவர்கள் கீழானவர் ஆவார்கள். அவர்கள் இந்த உலகத்தில் கொடிய வினைகளால் விளையும் துயரங்களை அனுபவிப்பார்கள்.


எனக்குத் தெரிந்த கல்வி

கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்
கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்
கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே.  – (திருமந்திரம் – 313)

விளக்கம்:
சிவநெறியைக் கல்லாதவர்களுக்கு என்னைப் பார்த்தால் கல்வி கற்காதவனாகத் தோன்றுகிறது. என்னை அயலானாகப் பார்க்கிறார்கள். அவர்கள் துயர் தரும் உலக விஷயங்களையே செய்ய வேண்டியக் கடமைகளாக நினைக்கிறார்கள். அவற்றை செய்யும் ஆற்றல் இல்லாதவனாக இருந்து விட்டுப் போகிறேன். உலகாய வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை பிறருக்கு வழங்கும் வல்லமை எனக்கு இல்லை. காரணம் அவற்றைச் சம்பாதிக்கும் கல்வியைப் பற்றி என் மனம் நினைக்கவில்லை. எனக்குத் தெரிந்த கல்வி எல்லாம் எதிலும் பற்றில்லாமல், விலகி நின்று ஆனந்தம் கொள்வதே!


நிலையாமையைப் பற்றிய கல்வி அவசியம்

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.  – (திருமந்திரம் – 312)

விளக்கம்:
நமது மனம் நிலை இல்லாதவற்றை எல்லாம் நிலையானதாக நினைத்தே பழகி விட்டது. அதனால் தான் மனம் இந்த  உடலையும் நிலையானதாக உணர்கிறது.  ஈசன் எல்லா உயிருக்கும் இறைவன் தான், ஆனாலும் கல்வி இல்லாத நெஞ்சத்தால் அவனை உணர முடியாது.

நிலையாமையைப் பற்றிய தெளிவு தரும் கல்வி நமக்கு அவசியம்.

(குரம்பை – உடல்)


எங்கும் பரவி இருக்கிறான் அவன்

வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம் இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே. – (திருமந்திரம் – 311)

விளக்கம்:
கல்வி கற்ற வல்லவர்கள் எப்போதும் இறைவனை நோக்கிச் செல்லும் வழியில் ஒன்றி வாழ்கின்றார். மற்றவர்கள் பல வழி உண்டு என நினைத்து மயங்குவார். எல்லா இடத்திலும் கலந்து நிற்கிறான் நம் இறைவன். கல்லாதவர்கள் அந்த கலந்திருக்கும் தன்மை அறியமாட்டார்கள்.


கல்வி மட்டும் போதாது!

கல்லா தவரும் கருத்தறி காட்சியை
வல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்
கல்லாதார் இன்பம் காணுகி லாரே. – (திருமந்திரம் – 310)

விளக்கம்:
கல்லாதவர் சிலரும் தமது மனத்தில் இறைவனின் காட்சியை உணருகிறார்கள். அதே போலக் கற்றவர்கள் எல்லோருக்குமே இறைவன் காட்சி தந்து விடுவதில்லை. அருட்கண்களை உடைய அந்த சிவபெருமானைத் தியானித்தும், உண்மையான நெறியைப் பற்றியும் நிற்பவர்களுக்கு அந்த இறைவன் காட்சி தருகிறான். அப்படி இல்லாதவர்கள் கற்றவர்கள் ஆனாலும், அவர்களுக்கு அந்த காட்சி இன்பம் கிடைப்பதில்லை.


உணர்ந்தால் வருவான்

வைத்துணர்ந் தான்மனத் தொடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன்று ஒவ்வாது
அச்சுஉழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சு உணர்ந் தார்க்கே நணுகலு மாமே. – (திருமந்திரம் – 309)

விளக்கம்:
சிவபெருமானை நாம் மனத்தில் வைத்து உணர வேண்டும். வாயினால் அவன் புகழ் பேசி அவனுடன் ஒன்ற வேண்டும். அந்தப் பெருமான் பல வேறுபட்ட உருவங்களில் இருக்கிறான். நம் உயிர் என்னும் அச்சாணி, உலக வாழ்க்கையில் சிக்கி எவ்வளவு கலங்கினாலும், அந்த ஆதிப்பிரானை விரும்பி உணர்வோம். அவன் நம்மிடம் நெருக்கமாக இருப்பான்.


தன்னை உணர்ந்தவர்க்கு அருள்வான்

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம்
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே. – (திருமந்திரம் – 308)

விளக்கம்:
இந்த உலகில் மிகப் பழமையானவன் நம் ஈசன். பழமையான அந்தக் கடவுள் தன்னைத் துதிப்பவரிடம் நெருங்கி வருவான். தன்னை இகழ்வோர்க்குத் துன்பத்தின் இடமாய் இருப்பான். மகிழ்ந்து நின்று அந்த சிவபெருமானின் பெருமையை ஓதி உணர்வோம். அவன் பெருமையை உணர மறுப்பவர்களுக்கு அந்த சிவன் கற்பசு போலாவான்.

கல்லினால் செதுக்கப்பட்டப் பசு பால் தருவதில்லை. அது போல தன்னை உணராதவர்க்கு அந்த சிவபெருமான் அருள் செய்ய மாட்டான்.

(இடும்பை – துன்பம், கழிய நின்றார் – விலகி நின்றார்)


சிவனடியை நினைத்தால் பிறவி நீங்கும்

உறுதுணை யாவது உயிரும் உடம்பும்
உறுதுணை யாவது உலகுறு கேள்வி
செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே. – (திருமந்திரம் –307)

விளக்கம்:
நம்முடைய உடலும் உயிரும் ஒன்றுக்கொன்று துணையாய் இருக்கின்றன. அப்படி இரண்டும் இணைந்து நாம் வாழ்வதற்குத் துணையாய் இருப்பது, உலகியல் வாழ்க்கை பற்றிய நம்முடைய கேள்வி ஞானம். அதற்கு மேலும் சிறந்த துணையாய் இருப்பது சிவனடி குறித்த நமது சிந்தனை. பெறுவதற்கு அரிய அந்த சிவனடியை அடையும் வழியைக் கேட்டுத் தெரிந்து கொண்டால், நாம் அடுத்து பிறவி இல்லாத நிலையை அடையலாம்.