சிவபெருமானின் எண்குணங்கள்

விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉல காக்குங்
கொடையுடை யான்குணம் எண்குண மாகுஞ்
சடையுடை யாஞ்சிந்தை சார்ந்துநின் றானே.   – (திருமந்திரம் – 444)

விளக்கம்:
சிவபெருமானை யாருடனும் ஒப்பிட முடியாது. அவனை யாரும் படைக்கவில்லை, அவன் தான் அனைத்தையும் படைக்கிறான். அதனால் தான் அவனை நாம் விகிர்தன் என்று அழைக்கிறோம். அந்த விகிர்தன் காளையை ஊர்தியாகக் கொண்டவன், மிகுந்த பூதப் படைகளைக் கொண்டவன். நமக்கெல்லாம் அவன் கொடுத்தப் பரிசே இந்த உலகம். எட்டு குணங்களைக் கொண்ட நம் சிவபெருமான் நாம் வேண்டியவற்றை எல்லாம் அருளும் கொடைத்தன்மை உடையவன். அவன் நம் சிந்தையில் எப்போதும் இருக்கிறான்.

சிவபெருமானின் எட்டு குணங்கள் –
1. தன் வயத்தன்
2. தூய உடம்பினன்
3. இயற்கை உணர்வினன்
4. முற்றும் உணர்ந்தவன்
5. பாசங்களை விட்டு நீங்கியிருப்பவன்
6. பேரருள் உடையவன்
7. முடிவில்லாத ஆற்றல் உடையவன்
8. வரம்பில்லாத இன்பம் உடையவன்