கருவில் அமையும் விஷயங்கள்!

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே.  – (திருமந்திரம் – 457)

விளக்கம்:
கருவில் அமைய வேண்டியவை இவை எனத் திருமூலர் சொல்கிறார். போகின்ற எட்டு – சுவை, ஒளி, பரிசம், ஓசை, வாசனை, மனம், புத்தி, அகங்காரம் ஆகியன. புகுகின்ற பத்து – பிராணனன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் ஆகியன. புகுகின்ற எட்டு – காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், துன்பம், அகங்காரம் ஆகியன. ஒன்பது துளைகள் – கண்கள், செவிகள், நாசித்துளைகள், வாய், கருவாய், எருவாய்த் துளைகள் ஆகியன. இவற்றுடன் குண்டலினியும், பிராணன் என்னும் புரவியும் அமைய வேண்டும். இவையனைத்தும் கருவினில் சரியாகப் பொருந்தாவிட்டால், பன்றியைப் போன்ற இழிவான பிறவியாகி விடும்.