சிரமன் தந்த சிரமங்கள்

”தூங்கி எந்திரிச்சாலே அவங்களுக்கு ஏதோ ஆயிடுது!” என்றாள் சிரமி. சிரமனின் மனைவி.

“ஆமாமா! சின்ன வயசுலயே அவன் தூக்கத்துல புலம்புவான்” என்றேன்.

“அய்யோ! இது வேற. நடந்தத சொல்றேன். அன்னைக்கு ஒருநாள் ராத்திரி நல்ல சாப்பாடு..”

“ஹோட்டல்ல தானே?” இடைமறித்தேன்.

முறைக்க நினைத்தவள் தொடர்ந்தாள் “ரொம்ப உற்சாகம் ஆயிட்டாங்க. பெரிய எழுத்தாளர் மாதிரில்லாம் பேச ஆரம்பிச்சிட்டாங்க”

“எழுத்தாளர் மாதிரியா? அவனா? என்ன சொன்னான்?”

“இருங்க யோசிக்கிறேன்… ஆங்… இப்படிச் சொன்னாரு. என்னைப் பலவீனப்படுத்தும் காரணிகள் நல்ல கவிதைகளும், எதிர் பாலினத்தவரின் வட்ட வடிவங்களும்” சொல்லும் போது லேசான வெட்கத்தைப் பார்க்க முடிந்தது. “நான் கூட அசந்துட்டேன், இந்த மனுஷன் இவ்வளவு ரொமான்ஸா பேசுவாரான்னு”.

என்னாலேயே அதை நம்ப முடியவில்லை “இப்படித்தான் வயசான காலத்துல சில பேருக்கு புத்தி கெடும். ஆனா உனக்கு இது நல்ல விஷயம் ஆச்சே”ன்னு கேட்டேன்.

“மறுநாள் தூங்கி எந்திரிச்சதுல இருந்து ஒரே பிரச்சனை தான். அது எப்படி நான் பொம்பளையக் கேவலப்படுத்திப் பேசலாமுன்னு ஒரே புலம்பல். வீட்டுல இருக்குற சாமான்லாம் எடுத்து உடைக்க ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் புரிஞ்சது, வீட்டுல எதெல்லாம் வட்டமா இருக்கோ அதப்பூராவும் உடைக்க ஆரம்பிச்சிட்டாங்க.”

எனக்கு சில மனோதத்துவக் கணக்குகள் தோன்றி, உடனே அதையெல்லாம் அழித்து விட்டேன். அவன் தந்திருக்கும் துன்பங்கள் போதாதா? “சரிம்மா நான் வேணா பேசிப்பாக்குறேன். நான் சொன்னாக் கேப்பான்” என்றேன்.

சிரமி பெருமூச்சு விட்டுச் சொன்னாள் “நான் இவ்வளவும் சொன்னதே நீங்க அவங்கள கொஞ்ச நாளைக்கு பாக்காதீங்கன்னு சொல்லத்தான்”.

”எனக்கென்ன ப்ரச்சனை இதுல? புரியலையே!”

“நேத்து ராத்திரியும் நல்ல சந்தோஷமா இருந்தாங்க. நிறைய பேச ஆரம்பிச்சிட்டாங்க. பூராவும் உங்களப் பத்தியும், சின்ன வயசுல இருந்து உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற நட்ப பத்தியும்.”

“அது நல்ல விஷயம் தானே?”

“ஒரு கட்டத்துல ஓவராப் போயிட்டாங்க. உங்கள சாண்டில்யன் விஜயமாதேவிய வர்ணிக்கிற மாதிரி வர்ணிக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னால அத விவரமா சொல்ல முடில. வெட்கமா இருக்கு. இன்னைக்கு காலைல இருந்து தான் நேத்து பேசுனத நெனச்சு புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க. உங்கள நேர்ல பாத்தா என்ன ஆகுமுன்னு தெரில!”