நெய் தேவைப்படாத விளக்கு

கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து
மெய்விட்டி லேன்விகிர் தன்அடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிலாத விடிஞ்சிலு மாமே.  – (திருமந்திரம் – 503)

விளக்கம்:
நான் எப்போதும் சிவபெருமானின் திருவடியை நினைத்தே இருக்கிறேன். தாயின் வயிற்றில் கருவாக இருந்த போதே அவனை நினைத்தபடி இருந்தேன். பொய்யில்லாத மெய்யன்போடு அவன் திருவடியைத் தேடுகிறேன். சிவனடி என்னும் விளக்கு எப்போதும் ஒளி தருவதாகும். அந்த விளக்குக்கு நெய் எதுவும் தேவையில்லை.