கண்டம் கறுத்த கருத்து அறிவாரில்லை!

அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே.   – (திருமந்திரம் – 521)

விளக்கம்:
சிவபெருமானின் ஆறாவது முகம் அதோமுகமாகும். அதோமுகம் கீழ் நோக்கியதாக இருக்கும். இந்த உலகத்தையும் சுற்றி உள்ள எட்டுத்திசைகளையும் சிவபெருமானின் அதோமுகமே தாங்கி நிற்கிறது. சிவபெருமானின் கழுத்து கறுத்திருப்பதில் உள்ள கருத்தை யாரும் இங்கே தெரிந்து கொள்ளவில்லை. விஷம் குடித்தார், அதனால் கழுத்து கறுத்தது என மேம்போக்காக புரிந்து கொள்பவர் உணர்வில்லாதவர். கறுத்த அக்கழுத்தில் வெண்மையான மாலையாக இறந்தவர்களின் கபாலங்கள் விளங்குகின்றன.