நம்முடைய உடலே சிவாலயம் ஆகும்

தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகச் சிவாலய மாகுமே – 719

விளக்கம்:
வானமண்டலத்தில் தேவர்களுக்காக ஒரு உலகத்தைப் படைத்தவள், தத்துவ நாயகியாகிய நம் பராசக்தி. அத்தனை சக்தி கொண்ட அப்பராசக்தி, அட்டாங்கயோகப் பயிற்சி செய்யும் நம் உடலில் தாமே ஒரு வழியை உருவாக்கி உள்ளே வந்து அமர்கிறாள். அந்த அம்மையை நாம் மதித்துத் தொழுது, அவளுடைய அருளில் திளைத்திருந்தால் நம்முடைய உடல் சிவாலயம் ஆகும்.


Also published on Medium.