மூலாதாரம் இருக்கும் இடம்

மாறா மலக்குதந் தன்மேல் இருவிரல்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசங் கொண்டது காணுமே – 733

விளக்கம்:
நம் உடலில் மலம் சேரும் இடமான குதத்தில் இருந்து இரு விரற்கிடை அளவுக்கு மேலேயும், நாம் அதைப்பற்றிப் பேசக் கூச்சப்படும் குறிக்குக் கீழேயுமான இடத்தில் மூலாதாரம் உள்ளது. சூடு தணியாத இந்த உடலில் வசிக்கும் சிவபெருமான், மூலாதாரத்திலும் குடியிருக்கிறான். யோகத்தின் போது நாம் நம் மனத்தை மூலாதாரத்தில் நிறுத்தி அங்குள்ள அபானனை மேலே எழுப்பிப் பயிற்சி செய்ய வேண்டும். இப்பயிற்சியினால், உபதேசம் இல்லாமலேயே பல நன்மைகளைக் காணலாம்.