எல்லா நாளும் முகூர்த்த நாளே!

ஆயும் பொருளும் அணிமலர் மேலது
வாயு விதமும் பதினா றுளவலி
போயம் மனத்தைப் பொருகின்ற வாதாரம்
ஆயவு நாளு முகூர்த்தமு மாமே – 796

விளக்கம்:
நாம் ஆராயும் பரம்பொருள் எங்கே இருக்கிறது என்றால், நம் உச்சந்தலையில் உள்ள சகசிரதளம் எனப்படும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் மேல் அந்தப் பரம்பொருள் விளங்குகிறது. சுழுமுனையில் பொருந்தி நமது மூச்சுக்காற்று மேலே உள்ள சகசிரதளத்தைத் தொடும்போது நாம் பரம்பொருளை உணரலாம். அந்நேரத்தில் வலி மிகுந்த நம் மனம் வலி எல்லாம் நீங்கி, நம்முடைய ஆதாரமான பரம்பொருளுடன் பொருந்தி நிற்கும். பரம்பொருளுடன் மனம் பொருந்தி நின்றால், நம்முடைய ஆயுளில் எல்லா நாளும் நல்ல முகூர்த்த நாளே!

மூச்சுக்காற்று சகசிரதளத்தைத் தொடும்போது பதினாறு வகையான வாயு அங்கே வெளிப்படும்.

ஆயும் பொருள் – நாம் ஆராயும் பரம்பொருள், அணிமலர் – நாம் சகசிரதளத்தில் அணிந்திருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர், வலி போய மனத்தை – வலி போய் அம்மனத்தை, பொருகின்ற – பொருந்துகின்ற,


மூச்சை சுழுமுனையில் நிறுத்தினால் சிவனைக் காணலாம்

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே – 795

விளக்கம்:
நம்முடைய மூச்சுக்காற்று நடுவே உள்ள சுழுமுனையில் ஒன்றி நிற்காமல், வலப்பக்கமும் இடப்பக்கமாகவும் அலைந்து ஓடி வருந்துகிறது. சிவயோகியர் தமது மூச்சுக்காற்றை அப்படி அலைய விடாமல் நடுவாக சுழுமுனையில் நிறுத்தி நிதானிக்கிறார்கள். மூச்சுக்காற்று சுழுமுனையில் நிற்கும் போது அங்கே குண்டலினியும் ஒன்று சேர்ந்து நம் தலையின் உச்சியில் ஒளி விடும் தீபமாக நின்று விளங்குகிறது. அந்தத் தீபமே சிவமாகும் என்பதை நாம் அனுபவத்தில் காணலாம்.

அடுகின்ற – வருந்துகின்ற, அந்தணன் – தூய்மையானவன், யோகி,  பணி – பாம்பு (குண்டலினி)


மூச்சு சீராக இருந்தால் உள்ளே பயமோ நடுக்கமோ ஏற்படாது

உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி ஓடுத லாம்அகன் றாரும்
உதித்தது வேமிக ஓடிடு மாகில்
உதித்த இராசி யுணர்ந்துகொள் உற்றே – 794

விளக்கம்:
முந்தைய வாரசரம் பற்றிய பாடல்களில் சொன்னபடி, வெள்ளி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் சுவாசம் இடநாடி இயங்கும். சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய கிழமைகளில் மூச்சு வலநாடி வழியாக இயங்கும். வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இடநாடி வழியாகவும், தேய்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் வலநாடி வழியாகவும் மூச்சு இயங்கும்.

வலது நாசி பக்கம் உதிக்க வேண்டிய மூச்சுக்காற்று இடது நாசி பக்கம் உதிக்கும் போது, மூச்சு இயல்பாக இயங்காமல் சிறிது அதிர்வதும், தனது பாதையை விட்டு விலகி பிறகு தனது நேரான பாதையில் வந்து சேருவதுமாகவும் இருக்கும். இதுவே வாரசரத்தில் சொன்னபடி மூச்சு இயல்பாக இயங்கினால், சிறிதும் அதிர்வில்லாமல், ஒரு ஒழுங்கு முறையுடன் இயங்கும். மூச்சை சீராக உற்று கவனித்து வந்தால் இந்த உண்மையை உணரலாம்.

வாரசரத்தின் படி நமது மூச்சு இயங்கினால், நமக்குள்ளே பயமோ அதிர்வோ ஏற்படாது.

உதித்து வலத்திடம் – வலப்பக்கம் உதிக்க வேண்டிய மூச்சுக்காற்று இடப்பக்கம் உதிக்கும் போது, அகன்றாரும் – அகன்று ஆரும் (அகன்று சேர்தல்), இராசி – வரிசை, ஒழுங்கு


உயிர் ஊறும் இடம்!

மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரம்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே – 793

விளக்கம்:
நம்முடைய மூச்சுக்காற்று சந்திரகலை எனப்படும் இடைகலை வழியாகவும், சூரியகலை எனப்படும் பிங்கலை வழியாகவும் மாறி மாறி இயங்குகிறது. தியானத்தின் போது, மாறி மாறி இயங்கும் மூச்சுக்காற்றைக் கவனித்தால், சுழுமுனை எனப்படும் நடு நாடியில் உயிர் ஊறுவதைக் காணலாம். இன்னும் உற்று நோக்கினால், சுழுமுனையில் ஊறும் உயிரில் சிவபெருமானின் உக்கிரத்தை உணரலாம். இவ்வாறு மூச்சுக்காற்றைக் கவனித்து தியானித்து வந்தால், நம் உயிர் இயங்கும் முறையை தெளிந்து அறியலாம்.

மதி – சந்திரகலை எனப்படும் இடைகலை, இது இடது பக்க மூக்கில் ஓடும் மூச்சுக்காற்று, வெய்யவன் – சூரியகலை எனப்படும் பிங்கலை, இது வலது பக்க மூக்கில் ஓடும் மூச்சுக்காற்று, ஏறி இழியும் – ஏறி இறங்கும், தேறி அறிமின் – ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.


கிழமை அறிந்து மூச்சு இயங்கினால் பேரானந்தம்!

செவ்வாய் வியாழம் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே – 792

விளக்கம்:
செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மூச்சுக்காற்று வலப்பக்கமாக இயங்க வேண்டும் என்பதை உணர்ந்த யோகிகள் சிவனைப் போன்றவர் ஆவார்கள்.  மேற்கூறிய கிழமைகளில், மூச்சுக்காற்று மாறி இடப்பக்கமாக இயங்கினாலும், அவர்கள் வலப்பக்கமாக மாற்றி இயங்கச் செய்து ஆனந்தமடைவார்கள்.

ஒவ்வாத வாயு – மூச்சுக்காற்று மாறி இயங்குதல்


மூச்சு ஒளி பெறும்!

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே – 791

விளக்கம்:
முந்தைய பாடலில் சொல்லப்பட்டதைப் போல வெள்ளி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் மூச்சுக்காற்று இடப்பக்கமாக தள்ளி விடப்பட்டவாறு இயங்குமாகில், அம்மூச்சுக்காற்று ஒளி பெறும். இந்த உடல் அறிவு பெற்று வெகு காலத்திற்கு நிலைத்து இருக்கும். இந்த விஷயத்தை வள்ளல் தன்மை கொண்ட நந்தியம்பெருமான் நமக்கு எடுத்து உரைத்திருக்கிறான்.

ஒள்ளிய காயம் – அறிவு மிகுந்த இந்த உடல், தயங்குமே ஆகில் – ஒளி விடுமே ஆகில்


வாரசரம்

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே – 790

விளக்கம்:
திருமந்திரத்தில் வாரசரம் என்னும் தலைப்பில் ஆறு பாடல்கள் உண்டு. சரம் என்றால் சுவாசம் எனப்படும் முச்சுகாற்று. எந்தெந்தக் கிழமைகளில் மூச்சுக்காற்று எப்படி இயங்குகிறது என்பது பற்றி திருமூலர் அழகாக விவரிக்கிறார்.

வெள்ளி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் சுவாசம் இடநாடி இயங்கும். சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய கிழமைகளில் மூச்சு வலநாடி வழியாக இயங்கும். வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இடநாடி வழியாகவும், தேய்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் வலநாடி வழியாகவும் மூச்சு இயங்கும்.

ஒள்ளிய மந்தன் – அறிவு மிகுந்த சனி, வள்ளிய பொன் – பெருந்தன்மை உடைய வியாழன், இரவி – ஞாயிறு