சிவ அமுதம்!

ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வானூறல் பாயும் வகையறி வாரில்லை
வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்
தேனூறல் உண்டு தெளியலு மாமே – 804

விளக்கம்:
தொடர்ந்து கேசரி யோகப்பயிற்சி செய்யும் போது நம் உடலில் அமுதம் ஊறும், அவ்வமுதம் சுழுமுனை நாடியின் உச்சிவரை பாயும். உடலில் அமுதம் ஊறும் போது, தலை உச்சியில் உள்ள சகசிரதளத்திலும் அமுதம் ஊறும். ஆனால் தலை உச்சியில் ஊறும் அமுதத்தை எல்லோராலும் உணர முடியாது. தேர்ந்த கேசரியோகப் பயிற்சியாளர்கள் மட்டுமே அதை உணர்வார்கள். தேன் போன்ற அந்த வானூறலை உண்பவர்கள் சிவானந்தம் பற்றியத் தெளிவைப் பெறுவார்கள்.

ஊனூறல் – உடலில் ஊறும் அமுதம், வானூறல் – தலையின் உச்சியில் உள்ள சகசிரதளத்தில் ஊறும் அமுதம்