சிவனின் கோயில் நம்முள்ளே!

வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்
கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலு மாமே – 810

விளக்கம்:
கேசரியோகம் செய்பவர்களுக்கு, வான கங்கை நீரைப் பருகும் நல் வாய்ப்பு அமையும் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். அவ்வாறு சிவனருள் வாய்ந்து, அந்த சிவனை மனத்துள்ளே வைத்து வழிபடுபவர்களுக்கு, சிவன் கருணை பொழிவான், அறிவு மினுங்கப் பெறும். வான்கங்கை பாயப் பெற்று, படிக்கதவு ஆகிய அண்ணாக்கில் மனம் ஒன்றிட்டு கூர்ந்து அறிந்தால், நம்முள்ளே சிவன் கோயில் கொண்டு அமர்ந்திருப்பதை உணரலாம்.

காய்ந்த அறிவு – மினுங்கும் அறிவு, படிக்கத வொன்றிட்டு – படிக்கதவு ஒன்றி, கூய்ந்தறி – கூர்ந்து அறி


Also published on Medium.