தாயை விட மேலானவன்!

கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்குங்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்
தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே – 811

விளக்கம்:
அண்ணாக்கில் மனம் ஒன்றிட்டு கூர்ந்து அறிந்தால், நம்முள்ளே சிவன் கோயில் கொண்டு அமர்ந்திருப்பதை உணரலாம் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். அந்தக் கோயிலில் குடி கொண்டிருக்கும் சிவன், இந்த உலகத்துக்கே தாய் போன்றவன், சொல்லப்போனால், தாயை விட மேலானவன். சிவபெருமான் சினம் கொண்டவர் என்றாலும் நல்லவர். தன் மேல் கோபம் கொண்டவர்கள் உள்ளும் சிவன் குடியிருப்பார், ஆனால் அவர்களால் அதை உணர முடியாது. தீவினையாளர்களுக்கு, சிவபெருமான் தீயை விடத் தீமைகளைக் கொடுப்பார்.

தரணி – உலகம், காயினும் – சினந்தாலும், காய்ந்தவர் – சினந்தவர்