கர்ம வினைகள் தீரும்!

மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிற்
பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே – 818

விளக்கம்:
கேசரியோகப் பயிற்சியால் மதி மண்டலம் மலர்ந்து நிற்கும் நிலையை முந்தையப் பாடலில் பார்த்தோம். மதி மண்டலத்தில் ஊறும் அவ்வமுதத்தை கழுத்துப் பகுதிக்குக் கீழே போகாதவாறு, மூச்சைக் கட்டி, நாம் பயிற்சி செய்ய வேண்டும். மனத்தளவில் ஒரு ஒட்டியாணத்தைக் கட்டி, நம் பிராணன் கீழே இறங்காதவாறு  பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பயிலும் போது, நம் உடலுக்குள்ளே சூரிய ஒளி பாய்வது போன்ற ஒரு வெளிச்சமும் தெளிவும் உண்டாகும். தனது காதுகளில் குண்டலங்களை அணிந்திருக்கும் நம் சிவபெருமானும், நம்மை நம் கர்மவினைகளில் இருந்து விலக்கிக் காப்பான்.

கேசரியோகத்தினால் கர்ம வினைகள் தீரும்.

கண்டகம் – கண்டம், தொண்டைப்பகுதி, பண்டகம் – உடலின் உள்ளே, கூத்தொழிந் தானே – கர்ம வினைகளில் இருந்து காத்து நிற்பானே


Also published on Medium.