சிவன் நம்முள்ளே குடி கொள்வான்!

முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே
பன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும்
நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்
தன்னெழு கோயில் தலைவனு மாமே – 824

விளக்கம்:
தாமரை மலரைப் போல விரிந்து மேலே எழும் தன்மையுடைய குண்டலினி சக்தி நம்முடைய கொப்பூழுக்கு பன்னிரெண்டு விரற்கடை அளவு கீழே உள்ளது. இந்த குண்டலினி சக்தி பகலொளியைப் போன்றது என வேதங்களால் போற்றப்படுகிறது. நன்மை தரும் அந்த குண்டலினியின் எழுச்சியில் நம் சிந்தையை ஒளி விடும் தீபம் போல நேராக நிறுத்துவோம். சிந்தையில் குண்டலினியின் எழுச்சியைக் கவனித்து, நம் கவனத்தை அதிலேயே நிறுத்தினால், நம் உடல் என்னும் கோயிலில் சிவபெருமான் குடி கொள்வான்.

கேசரியோகத்தினால் சிவன் நம்முள்ளே குடி கொள்வான்.

பன்மம் – தாமரை, வேதப் பகலொளி – வேதத்தில் பகல் ஒளி எனப் போற்றப்படும் குண்டலினி