பரியங்க யோகம்

பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திக்
காயக் குழலி கலவி யொடுங்கலந்
தூசித் துளையுறத் தூங்காது போகமே – 825

விளக்கம்:
வாசனைத் திரவியங்கள் பூசிய தலை மயிரை உலர வைத்து, மணம் மிகுந்த பூக்களைச் சூட்டி சிவ கலவிக்குத் தயார் ஆகிறாள் நம்முடைய மூலாதாரத்தில் குடியிருக்கும் குண்டலினி ஆகிய சக்தி. சிவ கலவிக்கு தயாராக இருக்கும் சக்தியை, நாம் நமது யோகப் பயிற்சியால் சகசிரதளத்தில் இருக்கும் சிவனோடு சேர்ந்து கலவி கொள்ளச் செய்யலாம். முந்தைய பாடல்களில் பார்த்தது போல், மனத்தை ஊசி துளைப்பது போல் சுழுமுனையில் ஒன்றச் செய்து யோகப்பயிற்சி செய்தால், சகசிரதளத்திற்கான படிக்கதவு திறக்கப் பெறும். சக்தியும் அவ்வழியே மேலே சென்று சிவனோடு கலவி கொள்வாள். அக்கலவியினால் நீடித்த இன்பம் பெறலாம்.

அகக் கலவியினால் நீடித்த இன்பம் பெறலாம்.

காயக்குழலி – குண்டலினி, போகம் – இன்பம்