காதல் யோகம்!

கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது அங்கமே – 827

விளக்கம்:
முந்தைய பாடல்களில் பார்த்தபடி, குண்டலினி சக்தி மேலேறி சகசிரதளத்தை அடைவது என்பது, சிவனும் சக்தியும் செய்யும் காதல் யோகம் ஆகும்..

இடைகலை, பிங்கலை ஆகிய இரண்டு மூச்சுக்களையும், கவனத்தை வெளியே சிதற விடாமல், சுழுமுனையில் நிறுத்தி மேலே ஏற்றினால் உச்சந்தலைக்கு மேல் உள்ள மதி மண்டலத்தில் வான் கங்கை ஊறும். இவ்வாறு குண்டலினி சக்தியை மேலே ஏற்றி, நாம் பரியங்கயோகத்தில் நின்றால் நம்முடைய முதுக்குத்தண்டு ஒருகாலும் தளராது. உடலும் தளராமல் நீண்ட காலம் வாழலாம்.

இடைகலை, பிங்கலை ஆகிய இரு சக்கரங்களைக் கொண்ட வண்டியை, அங்கேயும் இங்கேயுமாக பாதை மாற்றாமல், மேலே ஏற்றுவோம்.

கண்டன் – தலைவனாகிய சிவபெருமான், கண்டி – தலைவியாகிய சக்தி, மண்டலம் – உச்சந்தலைக்கு மேல் விளங்கும் மதி மண்டலம், தண்டு – முதுகுத்தண்டு


Also published on Medium.