யோக இன்பத்தில் நிலை கொள்வோம்!

அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ
மங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே – 828

விளக்கம்:
மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியாகிய சக்தியும், சகசிரதளத்தில் இருக்கும் சிவனும் ஒன்று சேரும் தத்துவத்தை புரிந்து கொள்ள, அச்சேர்க்கையை அங்கப்புணர்ச்சியாகிய உடலுறவுடன் ஒப்பிடலாம்.

அங்கப்புணர்ச்சியில் ஒரு தலைவன், கலவியின் போது தனது விந்தை சேதப்படாமல், நன்றாகத் தேங்கும்படி செய்து தலைவிக்குக் கொடுக்கிறான். பரியங்கயோகத்தில் யோகியானவன், குண்டலினி சக்தி சகசிரதளத்தை அடையும் போது, உச்சந்தலையில் ஊறும் அமுதத்தை தேக்கி நிறுத்தி சாதகம் செய்கிறான்.

யோகநிலையில் ஏற்படும் இன்பத்தை புரிந்து கொள்வதற்காக, அந்த இன்பம் மனித உடல் புணர்ச்சியோடு ஒப்பிட்டு சொல்லப்படுகிறது என்பதை இந்த பாடலின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

அங்கம் – உடல், பங்கப் படாமல் பரிகரித்து – சேதம் ஏற்படாதவாறு அடக்கி


Also published on Medium.