செய்வதற்கு அரிய பரியங்கயோகம்!

பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே – 831

விளக்கம்:
முன் கையில் சரிகின்ற வளையலை அணிந்திருப்பவளும், மார்பில் சந்தனம் பூசப்பெற்று வாசனை மிகுந்தவளாகவும் இருப்பவள் குண்டலினியாகிய சக்தி. அந்த குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் இருத்தாமல், மேலே எழச்செய்து, சகசிரதளத்தில் இருக்கும் சிவனைத் தொட்டுத் தழுவி இன்பம் பெறச் செய்வோம். ஐந்து நாழிகை நேரம் பரியங்கயோகத்தில் நிற்கும் யோகிகளால் மட்டுமே சிவசக்தியரை கூடச் செய்வது சாத்தியம்.

செய்வதற்கு அரியதாகிய, ஐந்து நாழிகை நேர பரியங்கயோகம் செய்யும் யோகிகள் மட்டுமே சிவசக்தியரை ஒன்று சேரக் காண்பார்கள்.

பஞ்ச கடிகை – ஐந்து நாழிகை நேரம், சரிவளை முன்கைச்சி – முன் கையில் சரிகின்ற வளையலை அணிந்திருப்பவள்.