சிரசில் உணர்வு பெற்றால் மனம் அடங்கும்

விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே.  –  (திருமந்திரம் – 621)

விளக்கம்:
தியானத்தின் போது நம்முடைய மனம் சிரசின் மேல் நிலைத்திருந்தால், அங்கே ஆகாய நீர் ஊற்றெடுப்பதை உணரலாம். மேலும் அங்கே விந்தமலையைக் கண்டு களிக்கலாம். சிரசில் தோன்றும் அந்த மலைப்பிரதேசத்தில் மனமெனும் குதிரையைப் பழக்கிச் செல்லக் கூடிய வீதி ஒன்றைக் காணலாம். அந்த வீதியில் நம்முடைய மனம் பயணம் செய்தால், அந்த மனம் கடிவாளம் இடப்பட்ட குதிரை போல் அடங்கி நிற்கும்.

கடப்பதற்கு மிகவும் கடினமான விந்தமலையை அகத்தியர் கடந்ததாக ஒரு செய்தி உண்டு. சிரசின் மேல் மனம் செலுத்தி தியானம் செய்தால் ஆன்மிகத்தில் அது போன்ற கடினப்பாதையைக் கடந்து செல்லலாம். மேலும் மனம் கடிவாளம் இடப்பட்ட குதிரை போல அடங்கி நிற்கும்.

விண்டு – ஆகாயம்,   கூபம் – நீர் ஊற்று,   விஞ்சத்தடவி – விந்தமலை,   செண்டு – குதிரையை பழக்கும் வீதி,  செழுங்கிரி – செழுமையான மலை,  குசை – கடிவாளம்


மனம் அடங்கும் நிலை சமாதி

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே.  –  (திருமந்திரம் – 620)

விளக்கம்:
மனம் எங்கே நிலைபெறுகிறதோ அங்கே பிராணவாயுவின் இயக்கம் சமாதி நிலைக்கு இட்டுச் செல்லும். மனம் தியானத்தில் நிலைபெறாமல் வெளியே ஓடினால் அங்கே சமாதி நிலை சாத்தியம் இல்லை. மனம் தியானத்தில் நிலைத்திருந்து அந்த நிலையில் மகிழ்ந்திருப்போர்க்கு மனத்தில் எண்ணங்கள் அழிந்து போகும்.

மனத்தில் எண்ணங்கள் அழியும் நிலை சமாதியாகும்.


சமாதி நிலையில் பேரொளியைக் காணலாம்

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.  –  (திருமந்திரம் – 619)

விளக்கம்:
தியானத்தின் போது ஒளியும் நாதமும் தலை உச்சியில் மிகுந்து விளங்கினால், ஆன்மாவும் இறைவனும் ஒன்றி நிற்கும் நிலையான சமாதி கைகூடும். முடிவில்லாத ஞான வடிவான சிவனை அழகான பேரொளியாய்க் காணலாம்.

விந்து – ஒளி,  சந்தி – கூடுகை,  அந்தம் – முடிவு


சமாதி என்னும் பூரண நிலை

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.  –  (திருமந்திரம் – 618)

விளக்கம்:
இயமம், நியமம் முதலியவற்றைக் கடைப்பிடிப்பவர்களால் சமாதி வரை செல்ல இயலும். இயமம், நியமத்தில் ஆரம்பித்து சமாதி வரை சென்றவர்கள் அட்டமாசித்திகளை அடைவார்கள். இயமம் முதல் சமாதி வரையிலான அட்டாங்க யோகத்தில் நிலைத்து நிற்பவர்களே யோகத்தின் பூரண நிலையை அடைய முடியும்.

சமாதி என்பது நம் உயிர் இறைவனோடு ஒன்றி நிற்கும் நிலை.


சத்தாதி நான்கிலும் இளையராஜா

உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே. – (திருமந்திரம் – 1593)

விளக்கம்:
குண்டலினி சிரசினில் பொருந்தியிருக்கும் நிலை சமாதியாகும். அதுவே திருவடிப் பேறுமாகும். நாம் அந்நிலை அனுபவிக்கும் போது பேச்சு அற்று போகும், உணர்வு அழிந்து நான் என்ற நிலை மறந்து போகும். அலையில்லாத தெளிந்த நீரைப் போன்ற சிவத்தன்மை அனுபவமாகும். நான்கு வகை ஓசைகளான செவியோசை, மிடற்றோசை, நினைவோசை, நுண்ணோசை ஆகியவற்றைக் கடந்து விடலாம். அந்த சிவபெருமான் நம்மை நம்முடைய உண்மையான சொரூபத்தில் இருத்தினான், அதனால் பேச்சற்றுப் போனோமே.

சமாதி நிலையில் சிரசினில் இறைவன் திருவடியை மட்டுமே உணர்ந்திருப்போம். மற்ற எல்லா உணர்வுகளும் அற்றுப் போகும்.

சத்தாதி என்பது நான்கு வகை ஓசைகளைக் குறிக்கும். இது பற்றி எளிதாகப் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், இளையராஜா ரசிகர்களை வைத்து உதாரணம் சொல்லலாம். முதலில் செவியோசை, நம் காதில் விழும் சுற்றுப்புற ஒசை. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு ராஜாவின் இசை தவிர மற்ற இசை கேட்டால் காது சிவந்து ஒவ்வாமை ஏற்படுகிறது. அடுத்து மிடற்றோசை, நம் தொண்டையிலிருந்து வந்து நமக்கே கேட்கும் ஓசை. ராஜாவின் பாடல்களைக் கேட்டு ஹம் செய்வோமே, அதேதான். மூன்றாவது நினைவோசை, அந்த தென்றல் வந்து பாட்டு மண்டைக்குள்ளயே சுத்திகிட்டு இருக்குன்னு சொல்வாங்களே, அதேதான். ஒரு முறை கேட்ட பாட்டு திரும்பத் திரும்ப நினைவில் சுற்றி வரும் ஓசை அது. கடைசியாக நுண்ணோசை, இது அவ்வளவு எளிதாகக் கேட்க முடியாதது. நம் உடலினுள் ரத்தம் பாய்வது, மூச்சு உள்ளே சென்று வருவது போன்ற கேட்க முடியாத நிறைய ஓசைகள் உண்டாம். ஒரு பூ மலர்ந்து விரியும் போது அங்கே ஒரு நுண்ணோசை நிகழுமாம். ராஜா ரசிகர்களைக் கேட்டுப் பாருங்கள், மனம் நெகிழும் ஓசையை நிறைய முறை கேட்டிருப்பதாகச் சொல்வார்கள்.

In the state of Samadhi, we'll be speechless,
There will be no other feelings. Our egotism will be dissolved.
We'll be unite with Lord Siva. We'll not hear any sound surround us.
The Lord will keep us in our natural state .