சமாதியில் அறுபத்து நான்கு சித்திகள் கைகூடும்

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.  –  (திருமந்திரம் – 631)

விளக்கம்:
சமாதியில் இருப்பவர்களுக்குப் பல விதமான யோகங்கள் கைகூடும். அவர்கள் அறுபத்து நான்கு சித்திகள் கிடைக்கப் பெறுவார்கள். யோக நெறியில் நின்று இறைவனை அடைந்து விட்டவர்களுக்கு பிறகு எந்தப் பயிற்சியும் தேவையில்லை. ஏனென்றால் இறைவனை அடைந்தவர்கள் தாமும் சிவமாகி விடுவார்கள்.


சமாதி நிலையில் சிவன், சக்தி, ஆன்மா எல்லாம் ஒன்றே!

சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும்  உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே.  –  (திருமந்திரம் – 630)

விளக்கம்:
சமாதி நிலையில் நம்முடைய ஆன்மா,  நிகரில்லாத ஒளியாய் விளங்கும் சிவபெருமானோடும், ஆதி பராசக்தியோடும் ஒன்றாகக் கலந்து விடும். அந்நிலையில் படைப்புக்கு முதல்வனான பிரமனும், கடல் போன்ற நீல நிற மேனியுடைய திருமாலும் ஆதிக்கடவுளான சிவபெருமானிடம் அடி பணிந்து அன்பு செலுத்துவதை நாம் உணரலாம்.


குண்டலினி வசப்பட்டால் கோபம் அகலும்

தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளுங்
குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந்
துலைப்பட் டிருந்திடுந் தூங்கவல் லார்க்கே.  –  (திருமந்திரம் – 629)

விளக்கம்:
நம் சிரசின் மேல் உள்ள சகசிரதளத்தில் நாட்டம் செலுத்தி தியானித்திருந்தால் சமாதி நிலை கைகூடும். சமாதி நிலையில் ஆன்மாவைப் பற்றிய தத்துவங்கள் நன்கு விளங்கும், மெய்ப்பொருளை உணரலாம். குண்டலினி சக்தி வசப்படும். இத்தனை வருடங்களாக நாம் சேர்த்து வைத்திருக்கும் மிகுதியான கோபங்கள் அகலும். எதிலும் நடுவு நிலையோடு இருக்க இயலும்.


சிவனுடன் கலந்து விடும் நிலை சமாதி

கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே.  –  (திருமந்திரம் – 628)

விளக்கம்:
மனத்தில் தோன்றும் கற்பனைகளை எல்லாம் நிறுத்தி விட்டு, நமது நாட்டத்தை குண்டலினியிலே செலுத்தி, அந்தக் குண்டலினியை சுழுமுனை வழியாக மேலே சகசிரதளத்திற்குக் கொண்டு செல்வோம். அங்கே இந்த உலகையும், எல்லா உலகையும் படைத்த அந்த சிற்பனை அழகிய பேரொளி வடிவில் காணலாம். அவனை நாடி அந்த பரம்பொருளுடன் கலந்து நாமும் சிவமாகவே மாறுவோம். இந்த நிலையே குளிர்ச்சி தரும் சமாதியாகும்.

சிற்பன் – உலகை படைத்தவன்,   பொற்பு – அழகு,  தற்பரம் – பரம்பொருள்


அட்டாங்கயோகம் நூலுக்கான முன்னுரை

உங்களால் தலை உச்சியின் மேல் கவனம் வைத்து தியானம் செய்து, அதில் கிடைக்கும் மகிழ்வை உணர முடிகிறதா? அந்த மகிழ்வை உணர்ந்தால் நீங்கள் வானுலகில் உள்ள தேவர்களை விட மேலானவர்கள் என்று திருமூலர் சொல்கிறார்.  வானுலகத் தேவர்கள்  பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதை விட நமது உச்சியில் ஊறும் அமுது மேலானது. அவர்களால் அகத்தில் ஊறும் அமுதைக் கடைந்து எடுக்கும் வழி தெரியவில்லை, அதனால் புற உலகின் அமுதத்தை நாடினார்கள். தேவர்களுக்கும் தெரியாத அந்த வழியை, அகத்தியானம் செய்யும் முறையை, திருமூலர் நமக்குச் சொல்லித் தருகிறார்.

அட்டாங்கம் என்றால் எட்டு உறுப்புக்கள் என்று அர்த்தம். அட்டாங்க யோகத்தின் எட்டு உறுப்புக்கள் – இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவை ஆகும். இயமம் என்பது தீய எண்ணங்கள், தீய செயல்கள் ஆகியவற்றை விலக்குவது. ஒழுக்க நெறியை நாடி அதில் தொடர்ந்து நிற்பது நியமம். அடுத்து பயல வேண்டியது பல வகைப்பட்ட ஆசனங்கள். ஆசனங்கள் கற்ற பிறகு பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி. அடுத்த பாடம் பிரத்தியாகரம் என்னும் மனத்தை உள்நோக்கித் திருப்பும் பயிற்சி. உள் நோக்கித் திரும்பும் மனத்தை அங்கேயே நிலை நிறுத்தும் பயிற்சி தாரணை ஆகும். மனம் அகத்திலே நிலை பெற்றால் தியானப் பயிற்சி சாத்தியமாகும். தியானத்திலே நிலைபெறப் பயின்றால் சமாதி நிலை அடையலாம். சமாதி என்பது பூரண நிலை. நமது மூலாதாரத்தில் (குறிக்கு இரு விரல் அளவு கீழே) இருக்கும் குண்டலினி வடிவிலான சக்தி, நமது தலையின் உச்சியில் இருக்கும் சிவனைச் சென்று சேர்வது சமாதி நிலையாகும்.

இயமமும் நியமமும் இல்லாமல் மற்ற பயிற்சிகள் சாத்தியமில்லை.

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.  –  (திருமந்திரம் – 618)

இயமம், நியமம் முதலியவற்றைக் கடைப்பிடிப்பவர்களால் சமாதி வரை செல்ல இயலும். இயமம், நியமத்தில் ஆரம்பித்து சமாதி வரை சென்றவர்கள் அட்டமாசித்திகளை அடைவார்கள். இயமம் முதல் சமாதி வரையிலான அட்டாங்க யோகத்தில் நிலைத்து நிற்பவர்களே யோகத்தின் பூரண நிலையை அடைய முடியும்.

பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு திருமூலரின் அட்டாங்கயோகம், இன்னும் சிறந்த அனுபவத்தை நோக்கி நகர உதவும். சிறு வயதில் நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரெண்டு அங்குல நீள அளவில் இயங்கும். வயது ஏற ஏற சுவாசிப்பின் நீளம் குறைகிறது. யோகப்பயிற்சியின் நோக்கம் சுவாசிப்பின் நீளத்தை மறுபடியும் பன்னிரெண்டு அங்குல நீளத்திற்கு கொண்டு வருவதாகும். முறைப்படி தொடர்ந்து பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் என்று திருமூலர் சொல்கிறார். அரைகுறையாக பயிற்சி செய்யும் நானே இதை அனுபவ உண்மையாக உணர்கிறேன்.

யோகம் பயில்பவர்களுக்கு திருமூலர் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறார். திருமூலரின் அட்டாங்கயோகத்தை வெறுமனே படிப்பதால் உபயோகம் இல்லை, பயிற்சியும் அவசியம். தொடர்ந்த பயிற்சியும், நமது குருநாதரான திருமூலரின் வழிகாட்டுதலும், நம் மனத்தையும் புத்தியையும் செம்மைப் படுத்தும். ஆன்மிகம் தவிர்த்துப் பார்த்தாலும் அட்டாங்கயோகப் பயிற்சி நம்மை இன்னும் சிறந்த மனிதனாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.


குண்டலினியை வெவ்வேறு வடிவங்களில் உணரலாம்

மூலத்து மேலது முச்சது ரத்தது
காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.  –  (திருமந்திரம் – 627)

விளக்கம்:
கும்பகத்தின் போது நமது மூச்சுக்காற்று, மூலாதாரத்திற்கு மேல் உள்ள சுவாதிட்டானத்தில் நின்று பிறகு சுழுமுனை வழியாக மேற்செல்லும். அப்போது வானில் உள்ள பிறை போன்ற நமது நெற்றியில் குண்டலினியினை வெவ்வேறு வடிவங்களில் உணரலாம்.

காலத் திசையிற் – கால் அத்திசையில் (கால் – காற்று)


சமாதி நிலையில் சிவனைக் காணலாம்

நம்பனை யாதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.  –  (திருமந்திரம் – 626)

விளக்கம்:
நம்பிக்கைக்கு உரியவனும், முதற்பொருளாக விளங்குபவனும், நான்கு வேதங்களாலும் ஓதப்படுபவனும், செம்பொன்னின் உள்ளே விளங்கும் சோதியைப் போன்றவனும் ஆனவன் சிவபெருமான். அன்பு மிகக் கொண்டு, ஆசைகளை ஒடுக்கி, நமது நாட்டம்  நடுநாடி வழியாக உச்சி ஏறுமாறு செய்து சிரசினில் தியானித்திருந்தால், சகசிரதளத்தில் அந்த சிவபெருமானைக் கும்பிட்டு அவனுடன் கலந்து நிற்கலாம்.

புகலிடம் தரும் சிவபெருமானின் திருவடியை அடைய அவனை வெளியுலகில் அலைந்து தேட வேண்டியதில்லை. குண்டலினியினை உச்சியில் ஏற்றி தியானித்திருந்தால் சகசிரதளத்தில் அந்த ஈசனைக் கண்டு அவனுடன் கலந்து விடலாம்.

நான்மறை – நான்கு வேதங்கள்,   அருத்தி – ஆசை,   கூட்டமிட்டார் – கலந்திருந்தார்


பாற்கடல் அமுதம் நமக்கும் உண்டு

உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்
அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே.  –  (திருமந்திரம் – 625)

விளக்கம்:
ஆன்ம சொரூபத்தை அறிந்து கொண்ட நமக்கு பரிசொன்று கிடைத்துள்ளது. அது தேவர்களுக்கும் கிடைக்காதது. குண்டலினியினை சிரசில் ஏற்றி தியானித்திருந்தால் உச்சியில் அமுதூறும். அவ்வமுதினை உண்போர்க்கு, முடிவில்லாத ஆசை கொண்ட மனம் அடங்கப்பெற்று சமாதி நிலை வாய்க்கும். இந்த முறை அறியாத தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து அமுது உண்டார்கள்.

தேவர்கள் பாற்கடல் கடைந்து எடுத்த அமுதை விட நாம் அகத்தியானம் செய்து உச்சியில் ஊறச்செய்யும் அமுதம் உயர்வானது.

உரு – ஆன்ம சொரூபம்,   கருவரை – கருங்கல்லால் ஆன வரை,   அரு – உருவமில்லாத,  வரையா மனம் –  அடங்காத மனம்


தியானத்தின் போது மனத்தை பூட்டி வைப்போம்

பூட்டொத்து மெய்யிற் பொறிபட்ட வாயுவைத்
தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே.  –  (திருமந்திரம் – 624)

விளக்கம்:
தியானத்தின் போது மனத்தை வெளியே செல்ல விடாமல் பூட்டி, உடம்பினுள் இயங்கும் பிராணவாயுவுடன் பொருந்தியிருக்கச் செய்வோம். அப்படி கவனத்தை மீட்டி, கண் அசையாமல் தியானம் செய்திருந்தால் அனுகூலம் தரக்கூடிய சமாதியில் அழுந்தியிருக்கலாம்.

மெய் – உடல்,   நாட்டம் – கவனம்,   நயனம் – கண்


ஈசனின் திருவடியைப் பொருந்தி இருக்கும் நிலை சமாதி

மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.  –  (திருமந்திரம் – 623)

விளக்கம்:
தியான நிலையில் பஞ்ச பூதங்களின் எல்லைகளான ஐந்து மண்டலங்கள், பன்னிரண்டு பிரணவ கலைகள், ஆறு ஆதாரச் சக்கரங்களில் உள்ள அட்சரங்களை இடமாகக் கொண்ட நாற்பத்தெட்டு தேவதைகள் ஆகியவற்றைக் காணலாம். இவை எல்லாவற்றிலும் பரந்து நிற்கும் அந்த ஈசனின் திருவடிகளில் பொருந்தி இருந்து சமாதி நிலை அடையலாம்.