வேள்விகளால் உலகில் துன்பங்கள் நீங்கும்

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்
தங்கி இருக்கும் வகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே.  – (திருமந்திரம் – 223)

விளக்கம்:
வேள்விகளைத் தவறாது செய்து வரும் அந்தணர்கள், இந்த உலகில் வேதங்கள் நிலைத்து நிற்க வகை செய்தவர் ஆவார்கள். அவர்கள் பெருந்தவம் செய்தவர்கள். உலகெங்கும் அவர்கள் வேள்வித்தீயை நிலை நிறுத்துவதால், துன்பங்கள் எல்லாம் சோர்ந்து தொலைந்து போகும். இதனால் வேதங்களின் புகழ் உலகில் என்றும் நிலைத்து நிற்கும்.


சுடுகாட்டுத்தீயில் நின்று நம் ஆன்மாவைத் தாங்கிப் பிடிக்கிறான்

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்மிறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே.  – (திருமந்திரம் – 222)

விளக்கம்:
நாம் செய்யும் வேள்விகளின் தீயின் உள்ளே நம் இறைவனாம் சிவபெருமான் வசிக்கிறான். அவன் சுடுகாட்டுத் தீயிலும் உள்நின்று ஆடி, நமது சாரமான ஆன்மாவைத் தாங்கிப் பிடிக்கிறான். வேள்வித்தீயும் சுடுகாட்டுத்தீயும் தவிர மற்ற அக்னிகள் எல்லாம் வினைகளைத் தரக்கூடியவை. அந்த வினைகளின் அளவு பெரிய மத்தால் கடையப்படுவது போல் ஒலி எழுப்பும் கடலின் அளவு ஆகும்.


வேள்விகளால் அருஞ்செல்வம் கிடைக்கும்

பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த
தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வதது இன்பம் வரஇருந் தெண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றீரே.  – (திருமந்திரம் – 220)

விளக்கம்:
நாம் தேடும் பொன்னும் பொருளும் துன்பத்தைத் தரக்கூடியவை என்பதால் தான், நம் தலைவனாம் சிவபெருமான் அருமையான ஞானச்செல்வங்களை முன்பே நமக்குத் தந்துள்ளான். அந்த சிவபெருமானை நினைத்து நாம் செய்யும் வேள்விகளால் கிடைக்கக் கூடிய உண்மையான இன்பத்தை நினைத்துப் பார்ப்போம். அந்த இன்பத்தைப் பெற சிறந்த வேள்விகளைச் செய்வோம்.


வேள்வித்தீ வினைகளைப் பொசுக்கும்

பாழி அகலும் எரியும் திரிபோலிட்டு
ஊழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய்து அங்கி வினைசுடு மாமே.  – (திருமந்திரம் – 219)

விளக்கம்:
ஆழ்ந்த அகலில் நின்று எரியும் திரி, விளக்கில் உள்ள எண்ணெய் எல்லாவற்றையும் காலி செய்கிறது. அது போல நாம் செய்யும் வேள்விகளின் தீ நமது ஊழ்வினைகளை அகற்றும். நமது வினைகளால் ஏற்பட்ட நோய்களும், துன்பங்களும் தீரும். இறைவனைப் போற்றி நாம் செய்யும் வேள்விகள் வினைகளைச் சுட்டுப் பொசுக்கும்.


புருவ மத்தியின் சுடர்

நெய்நின்று எரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின்று எரியும் வகையறி வார்க்கட்கு
மைநின்று அவிழ்தரும் அத்தின மாம் என்றும்
செய்நின்ற செல்வம் தீயது வாமே.  – (திருமந்திரம் – 218)

விளக்கம்:
நெய் நின்று எரியும் வேள்வித்தீயை வளர்ப்பதுடன், புருவ மத்தியில் விளங்கும் சுடரின் இயல்பையும் அறிந்து கொள்வோம். புருவ மத்தியின் சுடரை நாம் உணரும் நாள், நம்முடைய பாவங்கள் எல்லாம் நீங்கும் நல்ல நாளாகும். தொடர்ந்து புருவ மத்தியின் சுடரை நின்று எரியச் செய்வதே இன்பம் தரும் சிறந்த வேள்வியாகும்.

தீயதுவாமே – தீ (வேள்வி) + அதுவாமே


ஆகமங்களை விரும்பிக் கற்போம்

போதிரண் டோ திப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்குந்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.  – (திருமந்திரம் – 217)

விளக்கம்:
ஆணும் பெண்ணும் இரு வேறு மலர்களின் வண்டுகளைப் போன்றவர்கள். அவர்களுடைய விருப்பங்களும் வேறு வேறாகவே இருக்கும். ஆனால் ஒரு விஷயத்தில் அவர்கள் ஒன்றுபடுகிறார்கள். வேதங்களையும் சிவாகமத்தையும் புரிந்து கொண்டுக் கற்கிறார்கள். இதனால் அவர்களிடம் குண்டலினி சக்தியும் ஞான சக்தியும் மேம்பட்டு விளங்குகிறது.


அட்டாங்கயோகத்தில் சமாதியின் பலன்கள்

காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரணம் மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.  –  (திருமந்திரம் – 639)

விளக்கம்:
பரம்பொருளான சிவபெருமானைச் சேர்ந்திருக்கும் நிலை சமாதி. அந்த சமாதி நிலையால் கிடைக்கும் பலன்கள் மேலானவை.

உடல், மனம், இந்த உலகம், செல்வம் ஆகியவை எல்லாம் மாயையின் தோற்றங்கள் என உணர்ந்து அவற்றை நாம் கடந்து விடலாம். மாயத்தோற்றத்திற்குக் காரணமான ஏழு தத்துவங்களும் நம் அறிவுக்கு விளங்கும். தொடர்ந்து கிளைத்து வரும் வினைகளுக்கிடையே ஒழுங்குடன் நின்று பரம்பொருளுடன் சேர்ந்திருக்கும் சமாதி நிலையால் கிடைக்கும் பலன்கள் இவை.


அட்டாங்கயோகத்தால் ஈசன் திருவடியை அடையலாம்

தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிடந்
தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதம்முன்
தாங்கவல் லார்க்குந்தன் தன்இட மாமே.  –  (திருமந்திரம் – 638)

விளக்கம்:
சமாதி நிலையில் இருந்து தூங்க வல்லவர்கள், ஏழு உலகங்களிலிருந்தும் மனத்தை வாங்கி உள்நோக்கித் திருப்பும் பிரத்தியாகரத்தில் இருக்க வல்லவர்கள், அந்த நிலையிலே நிலையாக நிற்கும் தாரணையில் தேங்க வல்லவர்கள், உள்ளூறும் அமுதத்தை தியானத்தில் இருந்து தாங்க வல்லவர்கள், இவர்கள் எல்லோரும் எதை நோக்கித் தியானம் செய்கிறார்களோ அந்த நிலையை அடைவார்கள். அதாவது ஈசனின் திருவடியை அடைவார்கள்.


அட்டாங்கயோகம் தரும் பரிசு

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.  –  (திருமந்திரம் – 637)

விளக்கம்:
அட்டாங்கயோகம் நம்மை சரியான பாதையில் நடத்திச் செல்லும் வழிகாட்டி ஆகும். அட்டாங்கயோகத்தின் பலன் நம்மை நல்வழியை மட்டுமே நாடியிருக்கச் செய்யும். எமனிடம் அழைத்துச் செல்லும் தீய வழியில் செல்ல விடாமல் தடுக்கும். மேலும் நமக்குக் கிடைக்கும் குறைவில்லாத பரிசு என்னவென்றால், நமக்குத் தேவலோகத்தில் உள்ள எல்லா வழிகளும் பூலோகத்தைப் போல எளிதாகவே இருக்கும். அங்கே எட்டுத் திசைகளிலும் தங்கு தடை இன்றி சென்று வரலாம்.


இவனும் சிவனே என தேவர்கள் வாழ்த்துவார்கள்

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.  –  (திருமந்திரம் – 636)

விளக்கம்:
நாம் சிவகதி அடையும் காலத்தில் சிவலோகத்தின் காவலர்கள் ”யார் இவன்?” என தேவர்களிடம் விசாரிப்பார்கள். அப்போது அந்த அழகு மிக்க தேவர்கள் “அட்டாங்கயோகத்தில் நின்ற இவனும் சிவனே ஆவான்!” என வாழ்த்தி வரவேற்பார்கள். அந்த உலகத்தில் நம் இறைவனாம் திருநீலகண்டப் பெருமானைக் காணலாம்.