சமாதி நிலையில் சிவனைக் காணலாம்

நம்பனை யாதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.  –  (திருமந்திரம் – 626)

விளக்கம்:
நம்பிக்கைக்கு உரியவனும், முதற்பொருளாக விளங்குபவனும், நான்கு வேதங்களாலும் ஓதப்படுபவனும், செம்பொன்னின் உள்ளே விளங்கும் சோதியைப் போன்றவனும் ஆனவன் சிவபெருமான். அன்பு மிகக் கொண்டு, ஆசைகளை ஒடுக்கி, நமது நாட்டம்  நடுநாடி வழியாக உச்சி ஏறுமாறு செய்து சிரசினில் தியானித்திருந்தால், சகசிரதளத்தில் அந்த சிவபெருமானைக் கும்பிட்டு அவனுடன் கலந்து நிற்கலாம்.

புகலிடம் தரும் சிவபெருமானின் திருவடியை அடைய அவனை வெளியுலகில் அலைந்து தேட வேண்டியதில்லை. குண்டலினியினை உச்சியில் ஏற்றி தியானித்திருந்தால் சகசிரதளத்தில் அந்த ஈசனைக் கண்டு அவனுடன் கலந்து விடலாம்.

நான்மறை – நான்கு வேதங்கள்,   அருத்தி – ஆசை,   கூட்டமிட்டார் – கலந்திருந்தார்


பாற்கடல் அமுதம் நமக்கும் உண்டு

உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்
அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே.  –  (திருமந்திரம் – 625)

விளக்கம்:
ஆன்ம சொரூபத்தை அறிந்து கொண்ட நமக்கு பரிசொன்று கிடைத்துள்ளது. அது தேவர்களுக்கும் கிடைக்காதது. குண்டலினியினை சிரசில் ஏற்றி தியானித்திருந்தால் உச்சியில் அமுதூறும். அவ்வமுதினை உண்போர்க்கு, முடிவில்லாத ஆசை கொண்ட மனம் அடங்கப்பெற்று சமாதி நிலை வாய்க்கும். இந்த முறை அறியாத தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து அமுது உண்டார்கள்.

தேவர்கள் பாற்கடல் கடைந்து எடுத்த அமுதை விட நாம் அகத்தியானம் செய்து உச்சியில் ஊறச்செய்யும் அமுதம் உயர்வானது.

உரு – ஆன்ம சொரூபம்,   கருவரை – கருங்கல்லால் ஆன வரை,   அரு – உருவமில்லாத,  வரையா மனம் –  அடங்காத மனம்


தியானத்தின் போது மனத்தை பூட்டி வைப்போம்

பூட்டொத்து மெய்யிற் பொறிபட்ட வாயுவைத்
தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே.  –  (திருமந்திரம் – 624)

விளக்கம்:
தியானத்தின் போது மனத்தை வெளியே செல்ல விடாமல் பூட்டி, உடம்பினுள் இயங்கும் பிராணவாயுவுடன் பொருந்தியிருக்கச் செய்வோம். அப்படி கவனத்தை மீட்டி, கண் அசையாமல் தியானம் செய்திருந்தால் அனுகூலம் தரக்கூடிய சமாதியில் அழுந்தியிருக்கலாம்.

மெய் – உடல்,   நாட்டம் – கவனம்,   நயனம் – கண்


ஈசனின் திருவடியைப் பொருந்தி இருக்கும் நிலை சமாதி

மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.  –  (திருமந்திரம் – 623)

விளக்கம்:
தியான நிலையில் பஞ்ச பூதங்களின் எல்லைகளான ஐந்து மண்டலங்கள், பன்னிரண்டு பிரணவ கலைகள், ஆறு ஆதாரச் சக்கரங்களில் உள்ள அட்சரங்களை இடமாகக் கொண்ட நாற்பத்தெட்டு தேவதைகள் ஆகியவற்றைக் காணலாம். இவை எல்லாவற்றிலும் பரந்து நிற்கும் அந்த ஈசனின் திருவடிகளில் பொருந்தி இருந்து சமாதி நிலை அடையலாம்.


சகசிரதளத்தில் அகண்ட பெருவெளியைக் காணலாம்

மூல நாடி முகட்டல குச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்டபின்
காலன் வார்த்தை கனவிலும் இல்லையே.  –  (திருமந்திரம் – 622)

விளக்கம்:
தியானத்தின் போது நாம் கண், காது, மூக்கு, நாக்கு ஆகிய நான்கு வாசல்களின் நடுவில் பொருந்தி இருக்கிறோம். அத்தியானத்தில் சிவனை நாடி இருந்து தலை உச்சியுள் உள்ள சகசிரதளத்தில் மனம் பொருந்தியிருக்குமாறு செய்வோம் . அப்போது சகசிரதளத்தின் மேலே அகண்டவெளி ஒன்றைக் காணலாம். அவ்வெளியைக் கண்டு விட்டால் பிறகு காலன் என்ற சொல் கனவிலும் கிடையாது.

சகசிரதளத்தில் மனம் செலுத்தி தியானித்திருந்தால் அங்கே அகண்ட பெருவெளியைக் காணலாம், சமாதி நிலையை அடையலாம்.

மூலம் – சிவன்,  முகட்டலகு – சகசிர தளம்


சிரசில் உணர்வு பெற்றால் மனம் அடங்கும்

விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே.  –  (திருமந்திரம் – 621)

விளக்கம்:
தியானத்தின் போது நம்முடைய மனம் சிரசின் மேல் நிலைத்திருந்தால், அங்கே ஆகாய நீர் ஊற்றெடுப்பதை உணரலாம். மேலும் அங்கே விந்தமலையைக் கண்டு களிக்கலாம். சிரசில் தோன்றும் அந்த மலைப்பிரதேசத்தில் மனமெனும் குதிரையைப் பழக்கிச் செல்லக் கூடிய வீதி ஒன்றைக் காணலாம். அந்த வீதியில் நம்முடைய மனம் பயணம் செய்தால், அந்த மனம் கடிவாளம் இடப்பட்ட குதிரை போல் அடங்கி நிற்கும்.

கடப்பதற்கு மிகவும் கடினமான விந்தமலையை அகத்தியர் கடந்ததாக ஒரு செய்தி உண்டு. சிரசின் மேல் மனம் செலுத்தி தியானம் செய்தால் ஆன்மிகத்தில் அது போன்ற கடினப்பாதையைக் கடந்து செல்லலாம். மேலும் மனம் கடிவாளம் இடப்பட்ட குதிரை போல அடங்கி நிற்கும்.

விண்டு – ஆகாயம்,   கூபம் – நீர் ஊற்று,   விஞ்சத்தடவி – விந்தமலை,   செண்டு – குதிரையை பழக்கும் வீதி,  செழுங்கிரி – செழுமையான மலை,  குசை – கடிவாளம்


மனம் அடங்கும் நிலை சமாதி

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே.  –  (திருமந்திரம் – 620)

விளக்கம்:
மனம் எங்கே நிலைபெறுகிறதோ அங்கே பிராணவாயுவின் இயக்கம் சமாதி நிலைக்கு இட்டுச் செல்லும். மனம் தியானத்தில் நிலைபெறாமல் வெளியே ஓடினால் அங்கே சமாதி நிலை சாத்தியம் இல்லை. மனம் தியானத்தில் நிலைத்திருந்து அந்த நிலையில் மகிழ்ந்திருப்போர்க்கு மனத்தில் எண்ணங்கள் அழிந்து போகும்.

மனத்தில் எண்ணங்கள் அழியும் நிலை சமாதியாகும்.


சமாதி நிலையில் பேரொளியைக் காணலாம்

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.  –  (திருமந்திரம் – 619)

விளக்கம்:
தியானத்தின் போது ஒளியும் நாதமும் தலை உச்சியில் மிகுந்து விளங்கினால், ஆன்மாவும் இறைவனும் ஒன்றி நிற்கும் நிலையான சமாதி கைகூடும். முடிவில்லாத ஞான வடிவான சிவனை அழகான பேரொளியாய்க் காணலாம்.

விந்து – ஒளி,  சந்தி – கூடுகை,  அந்தம் – முடிவு


சமாதி என்னும் பூரண நிலை

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.  –  (திருமந்திரம் – 618)

விளக்கம்:
இயமம், நியமம் முதலியவற்றைக் கடைப்பிடிப்பவர்களால் சமாதி வரை செல்ல இயலும். இயமம், நியமத்தில் ஆரம்பித்து சமாதி வரை சென்றவர்கள் அட்டமாசித்திகளை அடைவார்கள். இயமம் முதல் சமாதி வரையிலான அட்டாங்க யோகத்தில் நிலைத்து நிற்பவர்களே யோகத்தின் பூரண நிலையை அடைய முடியும்.

சமாதி என்பது நம் உயிர் இறைவனோடு ஒன்றி நிற்கும் நிலை.


தியானத்தினால் சிவனருள் பெற்று மாயையை சிதைக்கலாம்

அறிவாய சத்தென்னு மாறா றகன்று
செறிவான மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.  –  (திருமந்திரம் – 617)

விளக்கம்:
நம்முடைய மனம் தியானத்தில் நிலைக்கப் பெற்றால், நிலையில்லாததாகிய முப்பத்தாறு தத்துவங்கள் நீங்குவதை உணரலாம். நம் முன்னே மிகுதியாக இருக்கும் மாயை சிவனருளாலே சிதையும். அந்த சிவபெருமானை விட்டு என்றும் பிரியாதிருக்கும் பேரருளைப் பெற்றிடலாம். தியான வழியில் செல்பவர்கள் எல்லாம் இந்த நிலையை உணர்ந்திடலாம்.

அசத்து – நிலையில்லாதது,   ஆறாறு – முப்பத்தாறு,   செறிவு – மிகுதி,    நெறி – வழி