தியானிப்பவர்களால் நுட்பமான ஒசைகளைக் கேட்க முடியும்

மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.  –  (திருமந்திரம் – 606)

விளக்கம்:
தியானத்தில் நிலைத்திருக்கும் போது நுட்பமான ஓசைகளைக் கேட்க முடியும். அவை – மணி, கடல், யானை, புல்லாங்குழல், மேகம், வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் ஆகிய பத்து ஒலிகள் ஆகும். இவையெல்லாம் தியானத்தில் பணிந்திருந்தால் கேட்க முடியும்.


தியானத்தில் எண்ணங்களை நீக்குவோம்

நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்
டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே.  –  (திருமந்திரம் – 605)

விளக்கம்:
கண்கள் இரண்டின் பார்வையையும் மூக்கின் மேல் பகுதியாகிய புருவ மத்தியில் வைத்து, மூச்சுக்காற்றை உயர்ந்தெழுந்து வெளியே போகா வண்ணம் உள்ளே அடக்கி, துன்பம் தரும் எண்ணங்களை நீக்கித் தியானித்திருப்போம். அப்படி தியானம் செய்வதால் உண்டாகும் பயன் என்னவென்றால், இந்த உடலைப் பற்றிய பயம் நீங்கும்.

மனத்தில் எண்ணமில்லாமல் செய்து, புருவ மத்தியில் தியானித்திருந்தால் மரண பயம் இராது.


தியானம் பழகலாம் வாங்க!

நாட்டமும் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவனவ நாமே.  – (திருமந்திரம் – 604)

விளக்கம்:
இரு கண்களின் பார்வையும் நடு மூக்கை நோக்கி இருக்குமாறு நிறுத்தி தியானம் செய்யப் பழகினால், வாழ்வில் வருத்தத்திற்கு  இடம் இராது. இந்த உடலுக்கு அழிவிருக்காது. மனத்தின் ஓட்டம் அடங்கும். புற உணர்வு மங்கும். தான் என்ற அகங்காரம் அழியும். தேடுதல் நிற்கும். நாம் சிவனாகவே மாறி விடலாம்.


தியானத்தில் மனம் உள்நோக்கி இருக்க வேண்டும்

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை
உண்ணாடிக் குள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.  –  (திருமந்திரம் – 603)

விளக்கம்:
மனத்தை வெளியே செல்ல விடாமல், உள் நோக்கு முகமாக வைத்துத் தியானித்திருந்தால், நம் உள்ளத்தில் ஒளி கலந்திருப்பதை கண்ணாடி பிரதிபலிப்பது போல் பார்க்கலாம். மனம் உள் திரும்பாமல் எண்ணாயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்தாலும், கண்ணுள் மணியும், அம்மணியுணர் அமிழ்தும் போன்ற சிவனைக் கண்டு அறிய முடியாது.

உண்ணாடி – உள் நாடி


வெளிச்சப் பூவே வா

ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திரப்  பூவே.  –  (திருமந்திரம் – 601)

விளக்கம்:
நாம் நமது உடலைப் பற்றியே நினைக்கிறோமே தவிர, ஒரு பொழுதும் இந்த உடலோடு பொருந்தியுள்ள உயிரைப் பற்றி நினைப்பதில்லை. அவ்வுயிரினுள் உறையும் சிவனை நினைப்பதில்லை. அந்தச் சிவனின் மீது சிந்தையை நிறுத்தி தியானம் செய்யும் முறையையும் நினைப்பதில்லை. தியானத்தினால் காணக் கிடைக்கும் சந்திரன் போன்ற வெண்மையான ஒளியைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவில்லை.

நம் உயிரினுள் உறையும் சிவனின் மேல் சிந்தையை நிறுத்தி தியானம் செய்தால், சந்திரன் போன்றதொரு வெண்மையான ஒளியை உள்ளே உணரலாம்.

உன்னார் – நினைக்க மாட்டார்,  சந்திரப்பூ – சந்திரன் போன்ற வெண்மையான ஒளி


தியானத்தில் வான்கங்கையைக் காணலாம்

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.   –  (திருமந்திரம் – 600)

விளக்கம்:
ஞானக்கண் கொண்டு உணரப்படும் அந்த சோதியில்  இரண்டு கண்களும் பொருந்தியிருக்குமாறு செய்து, புருவங்களுக்கு மத்தியில் சலனமில்லாமல் தியானம் செய்வோம். அவ்வாறு தியானித்திருந்தால் வான்கங்கை பாயும் அருள்வெளியைக் காணலாம். அவ்வெளியிலே மனம் ஓடினால் சுயம்புவான மூர்த்தியைக் காணலாம்.

புருவ மத்தியில் தியானம் செய்து அதிலே கலந்து விட்டால், அருட்பெருவெளி ஒன்றைக் காணலாம், அங்கே சிவபெருமானை தரிசிக்கலாம்.

ஒண்ணா நயனம் – ஒன்றான ஞானக்கண்,   விண்ணாறு – வான கங்கை,  பண்ணாமல் நின்றது – செய்யப்படாத சுயம்பு மூர்த்தி


தியானத்தில் குண்டலினியின் ஒளியை உணரலாம்

கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்(டு)
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.    –  (திருமந்திரம் – 599)

விளக்கம்:
மெய், கண், நாக்கு, செவி, மூக்கு ஆகிய ஞானக் கூட்டத்தினுள் இசைந்து நிற்கும் பழம்பொருள் ஒன்று நம்முள்ளே உண்டு. அது பரம்பொருளாகிய நம் சிவபெருமான் ஆகும். அண்ணாக்கின் உள்ளே மூச்சுக்காற்றில் மனம் செலுத்தி தியானம் செய்தால், பிளந்த நாக்கை உடைய பாம்பினைப் போன்ற குண்டலினியின் அகண்ட ஒளியை உணரலாம்.  நீண்ட காலம் உயிர்ப்புடன் வாழலாம்.

பண் – இசை,   அண்ணாக்கு – உள்நாக்கின் மேல் உள்ள துளை,   பிண்ணாக்கு – (பிள் + நாக்கு) பிளவு உடைய நாக்கு


பரத்தியானமும் சிவத்தியானமும்

வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னுங்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.  –  (திருமந்திரம் – 598)

விளக்கம்:
நம் பிறப்பிற்கு காரணமானவை பூதங்கள் ஐந்து, புலன்கள் ஐந்து, கரணங்கள் நான்கு, மாயை ஒன்று, ஆருயிர் ஒன்று. இந்த பதினாறு ஆதாரங்களிலும் நாம் தியானம் செய்வோம். தியானத்தினால் நம் அறிவும் புலன்களும் ஒன்றுக்கொன்று மாறுபாடு இல்லாமல் இயங்கச் செய்யலாம். வடிவுடைய சக்தியை நினைத்து செய்யப்படுவது பரத்தியானம். ஒளி உருவான சிவனை நினைத்து செய்வது சிவத்தியானம் ஆகும். இவ்விரெண்டும் யோகத்தின் இரண்டு பகுதிகளாம்.

வரும் ஆதி – வந்த காரணம்,   பொருவாத – உராய்தல் இல்லாத,  மேவல் – அடைதல்,    குரு – ஒளி


ஆன்மா சிவனோடு பொருந்தியிருக்கும் நிலை தாரணை

அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசித் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.    –  (திருமந்திரம் – 597)

விளக்கம்:
பசி, நோய், மூப்பு ஆகியவற்றால் அரிக்கப்படும் இந்த உடல் ஐம்பூதங்களால் ஆனது. அப்பூதங்கள் சத்தாதி முதலான தன்மாத்திரைகளில் அடங்குபவை (தன்மாத்திரைகள் – சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்). மனாதி எனச் சொல்லப்படும் நினைவு, அகங்காரம், புத்தி ஆகியவை சித்தத்தில் அடங்குபவை. அது போல நம்முடைய ஆன்மா சிவனுடன் ஒடுங்கி இருக்கும் நிலை தாரணை ஆகும்.


வந்தவர் யாரும் தங்கியதில்லை

முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னூறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே.    –  (திருமந்திரம் – 596)

விளக்கம்:
இந்த உலகில் இதுவரை வந்தவர் யாரும் இங்கே தங்கியதில்லை, எல்லாரும் முடிந்து விட்டனர். அப்படி இருக்கும் போது புதிதாய் வருபவர் யாரும் நிரந்தரமாய் இருப்பார் என்று எப்படி உறுதிமொழி கொடுக்க முடியும்? இதுவரை வந்து போனவர்களைப் பற்றிப் பேசினால் அது அளவில்லாதவையாகும். இதில் மாயம் என்னவென்றால் ஆற்றின் கரை மெதுவாக நீரில் கரைவது போல, நாளும் நமக்குத் தெரியாமலேயே நமது உடல் அழிந்து கொண்டிருக்கிறது.