திருவடியிலே விழுந்து கிடக்க விரும்புகிறேன்

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம் கடந்துஅண்டம் ஊடறுத் தான்அடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே.. – (திருமந்திரம் – 181)

விளக்கம்:
நம் வாழ்நாளில் மூன்று பருவங்களைக் கடக்கிறோம். பாலன், இளைவன், முதியவன் ஆகிய இந்தப் பருவ மாற்றம் சொல்லும் சேதியை நாம் உணர்வதில்லை. எந்தப் பருவத்திலும் நாம் நின்று விட முடியாது, நம்மை அறியாமலே அடுத்தப் பருவத்திற்கு சென்று விடுகிறோம். இதை உணர்ந்த நான், இந்த பூமி மட்டுமில்லாமல் எல்லா உலகத்திலும் ஊடிப் பரவியிருக்கும் அந்த ஈசனின் திருவடியிலேயே மேலும் மேலும் விழுந்து கிடக்க விரும்புகிறேன்.


இளமையில் கரும்பு, முதுமையில் எட்டிக்காய்

விரும்புவர் முன்என்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே. – (திருமந்திரம் – 180)

விளக்கம்:
அது ஒரு காலம். அப்போது நான் இளமையாக இருந்தேன். மெல்லிய இயல்பு கொண்ட பெண்கள் என்னை இனிதாக விரும்புவார்கள். எந்த அளவு இனிமையாக என்றால், கரும்பைப் பிழிந்து அதன் கடைசிச் சாறையும் பிழிந்து எடுத்தால் எவ்வளவு இனிமை இருக்குமோ அவ்வளவு இனிமை. மெல்லிய அரும்பு போன்ற முலைகளைக் கொண்ட அந்தப் பெண்களுக்கு அப்போது கரும்பாக இனித்தேன். இப்போது என் இளமை போன பிறகு அவர்களுக்கு நான் எட்டிக்காயாக கசக்கிறேன்.


இளமை அது போனா திரும்பாது

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்று கொள்ளும் உயிருள்ள போதே. – (திருமந்திரம் – 179)

விளக்கம்:
நம்முடைய இளமை நாள்தோறும் தேய்ந்து அழியும் தன்மை கொண்டதாகும். இளமை குறுகி ஒழிந்தபின் முதுமையில் செயற்கரிய செயல்கள் செய்வது கடினமானது. தன்னுடைய சடையில் பாயும் தன்மை கொண்ட கங்கையை படர விட்டிருக்கும் சிவபெருமானை கூர்ந்து நினைத்து, அவன் நினைவில் பொருந்திக் கொள்வோம், உயிர் உள்ள போதே.

ஆன்மிக விஷயங்களில் அடியெடுத்து வைக்க இளமைப் பருவமே பொருத்தமானது.

கடைமுறை – முடிவில்,  ஆய்ந்து – குறுகி,  உற்று – கூர்ந்து,  ஓர்ந்து – நினைத்து


எவ்வளவு ஆயுள் கிடைத்தாலும் நாம் விளக்கின் சுடரை அறிவதில்லை

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே.   – (திருமந்திரம் – 178)

விளக்கம்:
நம் வாழ்நாளில் பல ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆயினும் அப்பனாகிய ஈசனை நம் மனம் இன்னும் நாடவில்லை. சிவ போதத்தில் புகுந்து அவனை அறியவும் இல்லை. நமக்கு நீண்ட ஆயுள் கிடைத்தும், அது நீட்டிக்கப் பெற்றும் தூண்டு விளக்கின் சுடராய் விளங்கும் ஈசனை அறியாமல் இருக்கின்றோமே!


தினமும் ஏறுகிறது நம் வயசு!

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டும் தேறார் வியனுல கோரே.  – (திருமந்திரம் – 177)

விளக்கம்:
இந்த உலகம் மிகவும் வியப்பானது. கிழக்குத் திசையில் தோன்றும் சூரியன் மாலையில் மேற்கே மறையும் போது, நமக்கு ஒருநாள் வயசு அதிகமாகி விட்டது என்பதை நாம் உணர்வதில்லை. இதை உணராத நாம் கண்ணிருந்தும் குருடராக இருக்கிறோம். இளங்கன்று ஒன்று வெகு சீக்கிரம் வளர்ந்து எருதாகி பிறகு தளர்ந்து விடுவதைப் பார்க்கிறோம். இதைப் பார்த்தும் நம் இளமை நிலையில்லாதது என்பதை நாம் உணர்வதில்லை.


இறந்த பின் எடுத்துச் செல்லக்கூடிய பரிசு

உடம்போடு உயிரிடை விட்டோ டும் போது
அடும்பரிசு ஒன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்ந்நமன் தூதர்
சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.  – (திருமந்திரம் – 176)

விளக்கம்:
நம்முடைய உடலை விட்டு உயிர் பிரியும் நேரம்தான் நமக்கு ஒரு விஷயம் புரியும்.  இந்த வாழ்க்கையில் நாம் எந்தப் பரிசையும் வென்றிருக்கவில்லை என்பது தான் அது. நாம் சம்பாதித்திருப்பது  எல்லாம் உண்மையான பரிசு இல்லை. நம் உயிர் இந்த உடலை விட்டு பிரியும் போது நாம் எடுத்துச் செல்லக் கூடிய செல்வம் தான் உண்மையான பரிசு. அண்ணல் சிவபெருமானை நினைத்திருக்கும் மனநிலை தான் உண்மையில் நாம் எடுத்துச் செல்லக்கூடிய பரிசாகும். சுடுகாட்டில் எரியும் நெருப்பு கூட நம் உடலைத் தான் எரிக்கும், நம் சிவநினைவை அந்த நெருப்பு எரிக்காது.


உயிர் வெளியேற ஒன்பது வழி

வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.  – (திருமந்திரம் – 175)

விளக்கம்:
அர்த்தம் இல்லாத இந்த உலக வாழ்க்கையின் மீது நமக்கு ஆசை பெருகி விட்டது. இந்த வாழ்க்கை நிலையானது இல்லை என்னும் உண்மையை நாம் உணர்வது இல்லை. நமது உடலையும் உயிரையும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கும் தறி ஒன்று உள்ளது. அந்தத் தறியின் கட்டு அவிழும்போது உயிர் வெளியேற ஒன்பது வழியிருக்கிறது. நாம் இறந்த பிறகு நம்மை இந்த பூமிக்குக் கொண்டு வந்த தாய் மற்றும் உறவினர்கள் எல்லாம் வணங்கிச் சுடுகாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். அதற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.


போதாது போதாது என்பார்

வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள்
மேவு மதனை விரிவுசெய் வார்கட்குக்
கூவுந் துணையொன்று கூடலு மாமே.   – (திருமந்திரம் – 174)

விளக்கம்:
இல்லற வாழ்வில் மனைவி, பிள்ளைகள், உடன் பிறந்தோர் ஆகியவர்க்கு தேவையான பொருளுக்கு அளவு என்பதே கிடையாது. அவர்களுக்காக மிகுதியான பொருள் சேர்த்து அதை பெருக்கிக் கொள்வதிலேயே வாழ்நாளை செலவிடுபவர் இந்த உலகை விட்டு போகும் போது யாரையும் துணைக்கு கூப்பிட முடியாது.


அவிழ்கின்ற ஆக்கை இது!

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடுபே றாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே. – (திருமந்திரம் – 173)

விளக்கம்:
அளவில்லாத பொன்னையும், செல்வத்தையும் கண்டால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் அவையெல்லாம் வெள்ளம் வந்தால் கவிழ்கின்ற படகைப் போல அழியக்கூடியவை. நம் உடலையும், உயிரையும் பிணைத்துள்ள கட்டு ஒருநாள் அவிழ்ந்து விடும்.  மனத்தில் தெளிவில்லாதவர்கள், அழியப்போகிற இந்த உடலுக்கு செல்வம் சேர்த்து வைப்பதையே வீடு பேறாக நினைக்கிறார்கள்.

கலம் – படகு,    ஆக்கை – உடல்


தெளியுங்கள்! தெளிந்த பின் கலங்காதீர்கள்!

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே. – (திருமந்திரம் – 172)

விளக்கம்:
செல்வம் நிலையானதில்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். தெளிந்த பின் மீண்டும் மனக்குழப்பம் அடையாதீர்கள். ஆற்று வெள்ளம் போல செல்வம் வந்து சேர்ந்தாலும் மனம் மயங்கி விடாதீர்கள். பணத்தினால் ஏற்படக் கூடிய மனமாற்றத்தை மறுத்தால் மனம் தெளியும். மேலும் நம் வாழ்நாளின் இறுதியில், எமன் வந்து கூப்பிடும் போது செல்வத்தின் மேல் உள்ள பற்றை கடந்து செல்ல முடியும்.

பணத்து மேல ரொம்ப ஆசை வச்சுட்டா, கடைசியில சாவு ரொம்ப துன்பமானதா இருக்கும்.

கலங்கன்மின் – மனக்குழப்பம் அடையாதீர். கலக்கி மலக்காதே – குழம்பி மயங்காதே. குதித்தல் – கடந்து விடுதல்.