நம் சிரசில் பரவி இருப்பார் அகத்தியர்

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே. – (திருமந்திரம் – 338)

விளக்கம்:
நம்முள்ளே குண்டலினி என்னும் அக்னியை உண்டாக்கி வளர்ப்பவர் அகத்தியர். வளரும் அந்த அக்னியை நம்முடைய சிரசில் ஏற்ற உதவுபவர் அகத்தியர். சிரசில் ஏறிய அக்னியை சீராகப் பரவச் செய்பவர் அகத்தியர். அகத்திய முனிவர் நம் சிரசில் எங்கும் ஒளியாகப் பரவி இருக்கிறார்.


அகத்தில் இருப்பவர் அகத்தியர்

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே. – (திருமந்திரம் – 337)

விளக்கம்:
”உலகத்து மக்களெல்லாம், தம் மனத்தை சுழுமுனையில் பொருந்தி இருக்கச் செய்யாமல், உலக விஷயங்களையே விரும்புகிறார்கள். அதனால் இந்த உலகம் சமநிலை இல்லாமல் சரிகிறது பெருமானே!” என்று தேவர்களெல்லாம் சிவபெருமானிடம் சென்று வேண்டினர். பெருமானும் “அக்னி சொரூபமாக மூலாதாரத்தில் நிற்கும் அகத்தியரே! நீ சீவன்களின் தலைப்பகுதிக்கு விரைந்து சென்று அங்கேயே பொருந்தி இரு” என்றார்.