குழந்தை ஆணா பெண்ணா என்பது முக்கியம் இல்லை!

மாண்பது வாக வளர்கின்ற வன்னியுங்
காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே.  – (திருமந்திரம் – 477)

விளக்கம்:
தாயின் வயிற்றில் உண்டாகும் குழந்தை ஆணா, பெண்ணா, அலியா என்பதெல்லாம் முக்கியம் இல்லை. உடலோடு உயிராகத் தோன்றி வளர்வது பெருமையான விஷயம். எந்தக் குழந்தையாக இருந்தாலும், அது தாய் தந்தையின் தன்மையைக் கொண்டிருக்கும். நாம் எல்லாம் இந்த உடலைப் பெற்றிருப்பது சிவபெருமானின் வல்லமையினாலே!


சிவனும் சக்தியும் நம்முள்ளே நிறைந்திருக்கிறார்கள்!

வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே.  – (திருமந்திரம் – 476)

விளக்கம்:
நமது முற்பிறவியின் வினைகளுக்கு ஏற்ப நமக்கு புதிய பிறவியை வகுக்கிறாள் சக்தி. நமது நல்வினைகளுக்கு ஏற்ப துன்பம் என்னும் இருளை நீக்குகிறான் நற்சோதியான சிவபெருமான். இருவரும் சேர்ந்தே உலகின் படைப்பை முடிவு செய்கிறார்கள். சிவனும் சக்தியும் நமக்கெல்லாம் உயிரைக் கொடுத்து, உணர்வைக் கொடுத்து, நமக்குள்ளேயும் நிறைந்து நிற்கிறார்கள்.


சிவனும் சக்தியும் நமது வளர்ப்புத் தாயார்கள்!

அருளல்ல தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.  – (திருமந்திரம் – 475)

விளக்கம்:
சிவனும் அன்பும் வேறு வேறு இல்லை. அன்பு இல்லாமல் சிவன் இல்லை, சிவன் இல்லாமல் அன்பு இல்லை. அப்படி அன்பே வடிவான சிவன் நமக்கு இந்த உயிரைத் தந்திருக்கிறான். சிவனும் சக்தியும் நமக்கு வளர்ப்புத் தாயார்களாக இருந்து நம்மை அன்போடு வளர்க்கிறார்கள்.


இயல்பாகவே நமக்கு வேதங்களைப் பிடிக்கும்!

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடைப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாக வகுத்துவைத் தானே.  – (திருமந்திரம் – 474)

விளக்கம்:
நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமான், நம்முடைய உடலைப் படைக்கும் போது தானும் அதில் கலந்து விடுகிறான். நம்முடைய ஆன்மா தன்னுடைய தளையில் இருந்து விடுபட வேதங்களைப் படைத்தான். நம்முடைய ஐம்புலன்களும் வேதங்களை விரும்பிக் கற்கும்படியான ஒரு அமைப்பை, நம் உடல் உருவாகும் போதே படைத்திருக்கிறான் அவன். நாம் வேதங்களைக் கற்று உணர்ந்து, நம்முடைய தளைகளில் இருந்து விடுபடுவோம்.


நுண்ணுடலைக் கட்டுவதும் அவிழ்ப்பதும் அவனே!

எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பை
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.  – (திருமந்திரம் – 473)

விளக்கம்:
நம்முடைய பருவுடலின் கருவிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை செயல்பட, நுண்ணுடலின் கருவிகளான மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது. நுண்ணுடலின் துணை இல்லாமல் பருவுடல் இயங்காது. இந்த உலகத்தின் மீது உள்ள பற்றுதலால் பிறப்பெடுத்துள்ள நம் உடலில் நுண்ணுடம்புக் கருவிகளைக் கட்டுவதும், நம்முடைய வாழ்நாளின் முடிவில் அவற்றை அவிழ்ப்பதும் சிவபெருமானே! இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


கருவிலேயே சிவன் நம்முடன் கலந்து விடுகிறான்!

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.  – (திருமந்திரம் – 472)

விளக்கம்:
பூவைப் போன்ற யோனியுடன் மொட்டுப் போன்ற ஆண்குறி பொருந்தும் போது, அங்கே யோனி மலர்கின்றது. மலர்ந்த பின், அங்கே வயிற்றில் சுமக்கக்கூடிய கரு ஒன்று ஒளிமிகுந்த சிவ அணுக்களுடன் பிறக்கிறது. அந்தக் கருவின் பருவுடலோடு, நீரில் கலந்திருக்கும் குமிழியின் நிழல் போலே, நுண்ணுடலின் கருவிகள் எட்டும் பரவி நின்று அக்கருவைக் காத்திடும்.


கருவுக்கு உரு கொடுத்தவன்!

கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு
நீட்டுநின் றாகத்து நேர்ப்பட்ட வாறே.  – (திருமந்திரம் – 471)

விளக்கம்:
அனைத்து வேதங்களிலும் இருந்து நான் கேட்டுத் தெரிந்து கொண்டது என்னவென்றால், இந்த உலகத்தைப் படைத்தவன் நம் சிவபெருமான் என்பதையே! அழிவில்லாத பெரும் சுடராகிய அவன், இந்த உலகின் முதல் படைப்பாளி ஆவான். ஆண் பெண் கூட்டுறவின் போது சேரும் விந்து மற்றும் சுரோணிதத்திலிருந்து கருவை உருவாக்குபவன் அவனே! உருவான கருவுக்கு உருவம் கொடுத்து நல்லதொரு உடலை உருவாக்குபவனும் அவனே!


உடலும் உயிரும் மட்டுமில்லை! இன்னொன்று இருக்கிறது!

உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.  – (திருமந்திரம் – 470)

விளக்கம்:
நமக்கு உடல் அமைத்துக் கொடுத்தது போலவே, அதில் உயிர் வைத்தது போலவே, உடல் சரியாக இயங்க ஒன்பது வாசல்களை வைத்தது போலவே, உறுதி கொண்ட நமது சிரசின் மேலே ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரையின் உச்சியில் குண்டலினி என்னும் அக்னியை வைத்திருக்கிறான் ஈசன். சகசிரதளமான நமது சிரசின் உச்சியில் இருக்கும் அந்த ஈசனை, தியானத்தினால் கண்டடைந்து அவனுடன் கலந்திருந்தேனே!

நாம் உடலும் உயிருமாய் மட்டும் ஆனவர்கள் இல்லை. நமக்குள்ளே ஒரு அக்னி இருக்கிறது. அதை உணர்ந்தால், நாம் ஈசனை உணரலாம்.


நாம் சந்திக்கும் ஆறு விதமான துன்பங்கள்!

அறியீ ருடம்பினி லாகிய வாறும்
பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்
செறியீ ரவற்றினுட் சித்திகள் இட்ட
தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே.  – (திருமந்திரம் – 469)

விளக்கம்:
நம்முடைய உடல் ஆறு விதமான துன்பங்களை எதிர்கொள்கிறது என்பதை நாம் அறிவதில்லை. நம்முள்ளே பெருகும் தாமச, ராசத, சாத்துவீக குணங்களை விட்டு நாம் பிரிவதில்லை. நமக்குக் கிடைத்துள்ள எட்டு சித்திகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதில்லை, அவற்றில் நமது மனத்தை செலுத்துவதும் இல்லை. பத்து மாதங்கள் கருவில் இருந்து தோன்றிய பிண்டங்களாகிய நாம் இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆறு துன்பங்கள் – பேறு, இழவு, துன்பம், பிணி, மூப்பு, சாக்காடு.  எட்டு சித்திகள் – அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்வம், வசித்வம்.


இந்த உடல் என்னும் மண்பானை!

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே.  – (திருமந்திரம் – 468)

விளக்கம்:
ஆணும் பெண்ணும் இன்பமாகக் கூடும்போது, துன்பம் மிகுந்த பிறவியைத் துவக்கும் ஒரு உயிரை அங்கே உருவாக்குகிறான் நம் சிவபெருமான். தண்ணீரை இறைக்கும் கலங்களான ஒன்பது வாசல்களையும், அவற்றை செயல்படுத்தும் பதினெட்டு உறுப்புக்களையும் கொண்டு இந்த உடல் என்னும் மண்பானையை அவன் படைக்கிறான்.