கல்வி மட்டும் போதாது!

கல்லா தவரும் கருத்தறி காட்சியை
வல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்
கல்லாதார் இன்பம் காணுகி லாரே. – (திருமந்திரம் – 310)

விளக்கம்:
கல்லாதவர் சிலரும் தமது மனத்தில் இறைவனின் காட்சியை உணருகிறார்கள். அதே போலக் கற்றவர்கள் எல்லோருக்குமே இறைவன் காட்சி தந்து விடுவதில்லை. அருட்கண்களை உடைய அந்த சிவபெருமானைத் தியானித்தும், உண்மையான நெறியைப் பற்றியும் நிற்பவர்களுக்கு அந்த இறைவன் காட்சி தருகிறான். அப்படி இல்லாதவர்கள் கற்றவர்கள் ஆனாலும், அவர்களுக்கு அந்த காட்சி இன்பம் கிடைப்பதில்லை.


உணர்ந்தால் வருவான்

வைத்துணர்ந் தான்மனத் தொடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன்று ஒவ்வாது
அச்சுஉழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சு உணர்ந் தார்க்கே நணுகலு மாமே. – (திருமந்திரம் – 309)

விளக்கம்:
சிவபெருமானை நாம் மனத்தில் வைத்து உணர வேண்டும். வாயினால் அவன் புகழ் பேசி அவனுடன் ஒன்ற வேண்டும். அந்தப் பெருமான் பல வேறுபட்ட உருவங்களில் இருக்கிறான். நம் உயிர் என்னும் அச்சாணி, உலக வாழ்க்கையில் சிக்கி எவ்வளவு கலங்கினாலும், அந்த ஆதிப்பிரானை விரும்பி உணர்வோம். அவன் நம்மிடம் நெருக்கமாக இருப்பான்.


தன்னை உணர்ந்தவர்க்கு அருள்வான்

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக்கு இடமாம்
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே. – (திருமந்திரம் – 308)

விளக்கம்:
இந்த உலகில் மிகப் பழமையானவன் நம் ஈசன். பழமையான அந்தக் கடவுள் தன்னைத் துதிப்பவரிடம் நெருங்கி வருவான். தன்னை இகழ்வோர்க்குத் துன்பத்தின் இடமாய் இருப்பான். மகிழ்ந்து நின்று அந்த சிவபெருமானின் பெருமையை ஓதி உணர்வோம். அவன் பெருமையை உணர மறுப்பவர்களுக்கு அந்த சிவன் கற்பசு போலாவான்.

கல்லினால் செதுக்கப்பட்டப் பசு பால் தருவதில்லை. அது போல தன்னை உணராதவர்க்கு அந்த சிவபெருமான் அருள் செய்ய மாட்டான்.

(இடும்பை – துன்பம், கழிய நின்றார் – விலகி நின்றார்)


சிவனடியை நினைத்தால் பிறவி நீங்கும்

உறுதுணை யாவது உயிரும் உடம்பும்
உறுதுணை யாவது உலகுறு கேள்வி
செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே. – (திருமந்திரம் –307)

விளக்கம்:
நம்முடைய உடலும் உயிரும் ஒன்றுக்கொன்று துணையாய் இருக்கின்றன. அப்படி இரண்டும் இணைந்து நாம் வாழ்வதற்குத் துணையாய் இருப்பது, உலகியல் வாழ்க்கை பற்றிய நம்முடைய கேள்வி ஞானம். அதற்கு மேலும் சிறந்த துணையாய் இருப்பது சிவனடி குறித்த நமது சிந்தனை. பெறுவதற்கு அரிய அந்த சிவனடியை அடையும் வழியைக் கேட்டுத் தெரிந்து கொண்டால், நாம் அடுத்து பிறவி இல்லாத நிலையை அடையலாம்.


சுட்டிக்காட்ட முடியாத அவன் – இறைவன்!

சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை
அறியாது இருந்தார் அவராவார் அன்றே. – (திருமந்திரம் –306)

விளக்கம்:
சிறுவர்கள் விளையாடும்போது மணல் சோறு சமைத்து அதில் நிறைவு பெறுவது போல், உலக விஷயங்களின் போகத்தினால் இன்பம் உண்டு என நினைப்பவர் பலர் உண்டு. அவர்கள் ‘இது தான் இறை என்று சுட்டி அறிய முடியாத’ அந்த இறைவனைக் குறித்துத் துதிக்காதவர். அவர் உண்மையான ஆனந்தத்தை அறியவில்லை, தம்முடைய ஆன்ம சொரூபத்தையும் அறிந்திருக்கவில்லை.

குறியாதது ஒன்று – சுட்டி அறிய முடியாத ஒன்று. இரண்டு வார்த்தைகளில் கடவுளைப் பற்றிய  ஒரு நுண்மையான விளக்கம்.


அளவில்லாத காலத்திற்கு அருள் பெறலாம்

விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விடாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.  – (திருமந்திரம் – 305)

விளக்கம்:
சிவபெருமானின் சிறப்பைப் படித்தும் கேட்டும் அறிந்து கொள்வோம்.   அதனால் கிடைக்கும் ஞானத்தினால் ஒழுக்கம் பெறுவோம். ஒழுக்கத்தினால் நம்மிடம் உண்டாகும் மாற்றத்தை சிந்தையில் உணர்வோம். உணர்ந்து ஒழுக்கத்தில் இருந்து வழுக்கி விடாமல் தொடர்ந்து நிலையாக இருந்தோமானால், வானவர் தலைவனான சிவபெருமான் தவறாமல் அருள்வான், அளவில்லாத காலத்திற்கு.


மலரின் வாசனை போல் விளங்குவான்

ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தி
நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.  – (திருமந்திரம் – 304)

விளக்கம்:
ஈசன் பிறப்பையும் இறப்பையும் அருளும் விதத்தைப் பற்றி நாம் பேசியும் பிதற்றியும் மகிழ்வோம். நாம் அப்படி ஈசனின் நினைவிலேயே இருந்தால், அந்தப் பெருமானும் நம்மிடையே நேசமுடன் சிவசோதியாய் விளங்குவான். மலரில் வாசம் நீங்காது இருப்பது போல் அவனும் நம்மை விட்டு நீங்காதிருப்பான்.

மலரின் இயல்பாய் அதன் வாசனை இருப்பது போல் சிவனும் நம்முடைய இயல்பாய் விளங்குவான்.

(பிதற்றி – உரை தடுமாறி (உணர்ச்சி வசப்பட்ட நிலை),   நிகழொளி – சிவசோதி,  கந்தம் – வாசனை)


ஆதிப்பிரான் அவன்!

பெருமான் இவனென்று பேசி இருக்கும்
திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.  – (திருமந்திரம் –303)

விளக்கம்:
சிவனே இந்த உலகில் மூத்தவன் என்பதை உணர்ந்து அவனைப் போற்றிப் புகழ்பவர்கள் சிறப்புடையவர்கள். அவர்கள் தம் வாழ்நாள் முடிந்த பிறகு வானுலகில் தேவர் ஆவார்கள். அரிய தவங்களைச் செய்யும் அந்த ஆதிப்பிரான் தன்னை நோக்கித் தவம் செய்பவர்களுக்கு மகிழ்ந்து அருள் செய்வான்.


சிவனை வேண்டினால் மற்ற தெய்வங்களும் அருள்வார்கள்

மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்பது அரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே.  – (திருமந்திரம் –302)

விளக்கம்:
நந்தியம் பெருமானை வேண்டினால் திருமாலின் அருட்செயலையும் புரிந்து கொள்ளலாம். சிவத்தொண்டு செய்தால் பிரமனின் அருட்செயலையும் புரிந்து கொள்ளலாம். எல்லாமே சிவன் செயல் என்பதைப் புரிந்து கொள்பவர்கள் வானுலகின் தேவர்கள் ஆவார்கள். உலகப்பற்று உடையவர்கள், இவற்றை எல்லாம் விட்டு, செய்யும் செயலுக்கு என்ன பயன் கிடைக்கும் என்று  யோசித்துத் தங்கள் காலத்தை வீணே கழிப்பார்கள்.


திவ்விய மூர்த்தியை அறிவோம்!

தேவர் பிரானைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேள்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.  – (திருமந்திரம் –301)

விளக்கம்:
சிவபெருமான் தேவர்களுக்கு எல்லாம் தலைவன் ஆவான். அந்த திவ்விய மூர்த்தியின் பெருமையைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவில்லை. அவனது பெருமையை நாம் அறிந்து கொண்டு, அவனைப் பற்றிய நூல்களைப் படிப்போம், அவனைப் பற்றி மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம். கற்றும் கேட்டும் அவனை உணர்வோம். உணர்ந்த பின் அவனது புகழைப் பாடி உயர்வு பெறுவோம்.