வாரசூலம்-02

தெக்கண மாகும் வியாழத்துச் சேர்த்திசை
அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே – 798

விளக்கம்:
தன்னுடைய கழுத்திலே எலும்புகளை அணிந்திருக்கும் சிவபெருமானது சூலம், வியாழக்கிழமைகளில் தெற்குத் திசையில் இருக்கும். நம்முடைய பயணம் சூலத்திற்கு இடப்பக்கமாகவோ, பின்னோக்கியோ இருந்தால் துக்கம் ஏதும் ஏற்படாது. சூலத்திற்கு எதிராகவோ, வலப்பக்கமாகவோ நம் பயணம் அமைந்தால் மென்மேலும் தீவினைகள் வந்து சேரும்.

உதாரணத்திற்கு, கிழக்கே சூலம் என்றால், நம்முடைய பயணம் கிழக்குத் திசையிலோ, தெற்குத் திசையிலோ இருக்கக்கூடாது. மேற்கு அல்லது வடக்குத் திசையில் பயணம் செய்யலாம்.

தெக்கணம் – தெற்கு, அக்கணி – அக்கு + அணி, எலும்புகளை அணிந்திருக்கும் சிவபெருமான்


வாரசூலம்-01

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
தேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே – 797

விளக்கம்:
வாரநாட்களில், எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த திசையில் சூலம் வரும் என்பதைத் திருமந்திரம் சொல்கிறது. திங்கட்கிழமையும் சனிக்கிழமையும் கிழக்கே சூலமாகும். செவ்வய்க்கிழமையும் புதன்கிழமையும் வடக்கே சூலமாகும். ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிகிழமையும் மேற்கே சூலமாகும்.

வியாழக்கிழமை வரும் சூலம் பற்றி அடுத்த பாடலில் பார்க்கலாம்.

தேரொத்த திங்கள் – தேரைப் போல நகரும் திங்கள், பாரொத்த சேய் – நிலத்தைப் போன்ற செவ்வாய், நேரொத்த வெள்ளி – திருத்தமான, நேர்த்தியான வெள்ளி, உத்தரம் – வடக்கு, பானுநாள் – ஞாயிறு, குடக்கு – மேற்கு